Monday, September 28, 2009

இலியட்டும் மகாபாரதமும் - 3


அக்கிலிசை நான் , துரியோதனனுடன் ஒப்பிடும்போது, ஹெக்டரை நான் அர்ஜுனனுடன் ஒப்பிடுவேன். ஹெக்டரும், அர்ஜுனனும் மிகச்சிறந்த வீரர்கள். சொல்லபோனால் இருவருமே அவர்களின் படைக்கு பிரதானமானவர்கள். அவர்கள், அவர்களின் படைகளின் வெற்றி தோல்வியையே நிர்ணயிக்கும் அளவுக்கு திறமைசாலிகளாக இருந்தார்கள்.

பிதாமகர் பீஸ்மரை, ட்ராய் போரில் ஈடுபட்ட நெஸ்டருடன் ஒப்பிடலாம். ஏனெனில் இருவரும் அவர்களின் வயதிர்க்க்காகவும், ஞானத்திற்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டனர்

பீனிக்ஸ (பறவை அல்ல ), அக்கிலிஸின் ஆசிரியன். இதற்க்காக இவரை நாம் துரோனச்சரியருடன் ஒப்பிடலாம்.

இரண்டு போர்களும் பெண்ணாலும் மண்ணாலும் நேர்ந்தவையே (பொதுவாக பெரும்பாலான போர்கள் பெண்,மண் மற்றும் பொன்னிர்க்காக நடந்தவைகளாகவே இருந்திருக்கின்றன ).

ஒருமுறை துருயோதணன், பாண்டவர்களின் மாளிகைக்குச் சென்றிருக்கும்போது, அங்கிருந்த தடாகத்தை பளிங்குத் தரை என்று நினைத்து, தடாகத்தில் விழுந்து விடுவான். அதைப் பார்த்து திரௌபதை, சிரித்ததில் மிகவும் அவமானப்பட்டு பாண்டவர்களை பழிதீர்க்க வஞ்சம் கொள்வான். ட்ராய் நகரப் போர் ஹெலனைக் கடத்துவதிலிருந்து ஆரம்பம் ஆகிறது. இப்படித் தெரிந்தோ அல்லது தெரியாமலோ இரண்டு போர்களின் ஆரம்பத்திற்கும் பெண்கள் முக்கிய காரணமாயிருந்தனர். இதற்க்காக திரௌபதையை, ஹெலனுடன் ஒப்பிடலாம்.

துருயோதணன், பாண்டவர்களுக்கு ராஜ்ஜியத்தில் இருந்த பங்கைக் கொடுத்திருந்தாலோ அல்லது குறைந்த பட்சம் அவர்கள் கேட்ட ஐந்து கிராமங்களைக் கொடுத்திருந்தாலோ பாரதப் போரே நடந்திருக்காது. அகமெம்னன், ட்ராய் போர் தன் தம்பி மனைவியை மீட்பதே நோக்கம் என்று கூறினாலும், எவராலும் கைப்பற்ற முடியாத ட்ராய் நகரைக் கைப்பற்றுவதே அவனது பிரதான நோக்கமாக இருந்தது. ஹெலனைக் திரும்பக் கைப்பற்றுதல் என்பது ஒரு உடனடிக் காரணமாக அமைந்தது அவனது அதிர்ஷ்டம்.

இப்படி இரண்டு போர்களும் பெண்ணாலும் மண்ணாலும் நிகழ்ந்தன.


இரண்டு போர்களின் முடிவிலும் புகழ் பெற்ற வீரர்கள முக்கால்வாசிப் பேர் அழிந்தனர். அக்கிலிஸ், ஹெக்டர் இருவரும் போரில் மரணம் அடைந்தனர். போரின் முடிவில் அகமெம்னன் நாடு திரும்பிய போது தன் மனைவியால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டான். பாரதப் போரில் பிதாமகர் பீஸ்மர்,கர்ணன்,துருயோதணன், பாண்டவர்களின் மைந்தர்கள் மற்றும் பலர் மாண்டனர் . போரின் முடிவில், காந்தாரியின் சாபத்தால் கண்ணனும் அவன் குலமும்் அழிந்தது. இப்படி இரண்டு போர்களும் சர்வ நாசங்களை ஏற்படுத்தின.

எனக்கு இலியட்டையும் மகாபாரதத்தையும ஒப்பிடக் காரணமாக இருந்தது,துருயோதனன் மற்றும் அக்கிலிஸ் உயித்தலம் பற்றிய ஒற்றுமைகளே. அதுவே என்னை இப்பெரிய பதிப்பை எழுதத் தூண்டியது. எனக்குத் தெரியும் இப்பதிப்பானது சற்று நீளமானது மற்றும் ஓரளவுக்கு சுவாரசியம் இல்லாத ஒன்றும் கூட. மேலும் இப்பதிபைப் படிப்பதற்கு ஓரளவுக்கு மகாபாரதத்தைப் பற்றியும், இலியட்டைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் (மிகக் குறைந்தபட்சம் ட்ராய் திரைப்படத்தை பார்த்திருத்தல் நலம்). இலியட்டையும், மகாபாரதத்தையும் பற்றி எழுதிக்கொண்டேச் செல்லலாம். ஏனெனில் இரண்டும் அவ்வளவு பெரிய இதிகாசங்கள். என்னால் முடிந்த மட்டும் எனக்குத் தெரிந்த சிறு விசயங்கைக் கொண்டு மிகக் குறைந்த அளவு எழுதியுள்ளேன்.

பொதுவாக ஒப்பீடுகள் ஆளுக்கு ஆள் வேறுபடும். சில பேர் ஒப்பிடவே முடியாது என்பார்கள். சில பேர் ஒப்பிட இயலும் என்பார்கள், அப்படி ஒப்பிட இயலும் என்று கூறுபவர்கள் பார்க்கும் கோணமும் ஒருவருக்கொருவர் மாறுபடும். இங்கு நான் ஒப்பீடு செய்தவர்களுக்கிடையையே பல வேறுபாடுகள் இருக்கலாம், இருந்த போதிலும் நான் எனக்குத் தெரிந்த வரையில், தெரிந்த முறையில் ஒப்பீடு செய்துள்ளேன். இவற்றில் ஏதேனும் பிழை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள், குட்டிக் கொள்கிறேன் ;).

Photo Courtesy :http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a4/Hector_brought_back_to_Troy.jpg

இலியட்டும் மகாபாரதமும் - 2

இரண்டுப் போர்களிலும் மிகப் புகழ் வாய்ந்த வீரர்கள் இருந்தார்கள். ட்ராய் நகரப் போரில் அக்கிலிஸ், ஹெக்டர், பாரதப் போரில் பீஸ்மர்,அர்ஜுனன்,பீமன்,கர்ணன், துருயோதனன் மற்றும் பலர். இப்படி பலப் பிரபலமான வீரர்கள் இருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தவர்கள் அக்கிலிஸ்,ஹெக்டர்,கர்ணன் மற்றும் துருயோதனன.



அக்கிலிஸ் மிகச்சிறந்த வீரன்.் அனஅதனாலயே அகமம்னனுக்கு அக்கிலிசுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவனைத் தன்னுடன் வைத்திருந்தான். அக்கிலிசுக்கு இறவாப் புகழ் பெறவேண்டும் என்ற ஆசை இருந்தது அதனாலயே அவன் இப்போரில் ஈடுபட்டான். சொல்லபோனால் அக்கிலிசை, கர்ணனுடன் தான் ஒப்பிட வேண்டும். இருவரும் தங்கள் துறையில் மிகச்சிறந்த வீரர்கள் .(அர்ஜுனனை,கர்ணனை விடச் சிறந்த வீரன் என்று கூறுவோர் இருந்தாலும், அர்ஜுனனுக்கு துரோனாச்சாரியார் என்னும் மிகச் சிறந்த ஆசிரியர் இருந்தார். கர்ணன் எந்த ஒரு சிறந்த ஆசிரியர் இல்லாமல் போர் கலையில் தேர்ச்சி பெற்றவன்.) கர்ணனுக்கு, தன் நண்பன், செய்வது தவறு என்று தெரிந்த போதிலும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க ,துருயோதனனுக்கு ஆதரவாக இருந்தான்.



அகில்லிஸ், அப்போல்லோ கோயில் பூசாரி மகளைக் காப்பதற்காக , அகமெம்னனுடன் சண்டையிட்டான். இருவரும் போர் தர்மத்தைப் பின்பற்றினார்கள். அக்கிலிஸ் தன் நண்பனின் இறப்பிர்க்காக ஹெக்டரை தனியாக போருக்கு அழைத்தான். போரில் ஹெக்டரைக் கொன்று அவன் உடலை தன்னுடன் போர்ப் பாசறைக்குக் கொண்டு வந்துவிடுவான். ஹெக்டரின் தந்தை பிரியம், ஹெக்டரின் உடலைக் கேட்டுத் தனியாக வந்த போது, ஹெக்டரின் உடலைத் தானேக் கட்டி, அக்கிலிஸ் பிரியமுடன் பாதுகாப்பாக அனுப்பி வைப்பான். (இங்கு ஒரு சிறு தகவல்: ட்ராய் திரைப்படத்தில், ஹெக்டரின் தந்தை பிரியம், அக்கிலிஸிடம், தான் தன் மகனுக்கு ஈமச் சடங்கு செய்ய வேண்டும் என்றும், படகோட்டிக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் அதனால் தன் மகன் உடலைத் தனக்குத் தருமாறு கூறுவார். அக்காலத்தில் கிரேக்கர்கள், இறந்தவர்களின் உடல்களைப் படகோட்டிகள் மறு உலகத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என்று நம்பினார்கள்், அதற்கு அவர்களுக்கு பணம் கொடுப்பதற்க்காக இறந்தவர்களின் கண்களில் இரண்டு நாணயங்களை வைப்பார்கள். "Pirates of the Caribbean " படத்தில் கூட நீங்கள் , படகோட்டிகள் ஆவிகளை மறு உலகத்திற்கு அழைத்துச் செல்வதைக் காணலாம். இத்தகையப் பழக்கங்கள் பல நாடுகளிலும் இருந்தது. எடுத்துக்காட்டாக பண்டைய எகிப்தியர்கள் தம் மன்னர்கள் மறு உலகத்தில் உபயோகப் படுத்துவதற்க்காக, தங்கம், உணவு, உடைகள், ஏன் மறு உலகத்தில் அவர்களுக்கு பணிவிடை செய்வதற்க்காக பணியாட்களையும் பிரமிடில் வைத்து அடைத்தார்கள்.்ளுக்கு ).



கர்ணனும், பிரம்மாஸ்திரத்தை அர்ஜுனனின் மார்புக்குக் குறி வைக்குமாறு கூறிய போதிலும் அது அவனுக்கு இழுக்கு என்று கூறி அர்ஜுனனின் தலைக்குக் குறி வைப்பான் (கண்ணின் சமயோசிதத்தால், அர்ஜுனன் அதிலிருத்து தப்பித்தது வேறு கதை ). இப்படி இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு . இருந்தபோதிலும் நான் அக்கிலிசை துர்யோதனுடந்தான் ஒப்பிடுவேன் . அதற்க்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு ,அது இருவரின் உயிர்த்தலம் பற்றிய ரகசியம். முக்கியமாக அவர்களை சாகா வரம் பெறச்செய்வதில் நேர்ந்த பிழையும் கூட இருவரையும் ஒப்பிடக் காரணம். ஒரு பிழை தாயின் கவனக்குறைவாலும், மற்றொரு பிழை மகனாலும் நேர்ந்தது.


அக்கிலிஸின் தாய் தீட்டிசிற்கு தன் மகன் சாக வரம் பெறவேண்டும் என்று பெரிய ஆசை.
அதற்க்காக அவள் , அக்கிலிசை அவன் சிறு குழந்தையாக இருக்கும் போது ஷ்டிக்கிஸ் என்னும் புனித ஆற்றில் , அவன் குதிங்கால்களைப் பிடித்துக்கொண்டு தலை கீழாக முக்கி எடுப்பாள். அப்படிச் செய்ததால் அவன் உடலின் அனைத்து பாகங்களிலும் தண்ணீர் பட்டு சாகா வரம் பெற்றன , அவன் குதிங்கால்களைத் தவிர . ஆக அவன் குதிங்கால் மட்டும் சாகா வரம் பெறவில்லை. இதிலிருந்துதான் ஒரு மனிதனின் பலவீனத்தைக் குறிக்க "Achilles's heel" என்ற சொற்றொடர் வந்தது. ட்ராய் நகரைக் கைப்பற்றும் இறுதிப் போரில், பாரிஸ் செலுத்திய அம்பு, அக்கிலிஸின் குதிங்காலைத் தாக்கியதாலே அக்கிலிஸ் இறக்க நேரிட்டது.




அதேபோல் காந்தாரிக்கு தன் மகன் துருயோதனனை சாகா வரம் பெறவைக்க வேண்டும் என்று விருப்பம். அதனால் அவள் தன் மகனிடம் தான், தன் கண் கட்டை அவிழ்க்கும் போது அவன் அம்மணமாக இருக்க வேண்டும் என்று கூறிவிட்டுக் கண் கட்டை அவிழ்ப்பாள்். ஏனென்றால் அவள் பார்வைப் படும் இடம் சாக வரம் பெரும். ஆனால் துருயோதனன் தன் தாய் முன் நிர்வாணமாக நிற்க்க வெட்க்கப் பட்டு தன் இடுப்பில் ஒரு சிறு கட்ச்சையைக் கட்டிக் கொள்வான். ஆக அவ்விடத்தில் மட்டும் காந்தாரி பார்வை படாது. ஆக தொடைப் பகுதி மட்டும் சாகா வரம் பெறாது. அதனால் தான் கண்ணன், பீமனைப் போர்க்களத்தில் துருயோதனனின் தொடைப் பகுதியில் தாக்கு மாறுக கூறுவான்.

Photo Courtesy : http://twi-ny.com/troy.jpg
http://archives.chennaionline.com/columns/variety/2005/images/Duryodhana-in-the-underwate.jpg
http://students.ou.edu/H/Rafael.H.Hedrick-1/mahabharata_war.jpg
http://www.etab.ac-caen.fr/collegedeverson/film%20divers/hector.jpg
http://www.indianetzone.com/photos_gallery/8/gandhari_18838.jpg

இலியட்டும் மகாபாரதமும் - 1


இந்தியா மற்றும் கிரேக்கம் இரண்டும் மிகப் பழமையான நாடுகள். அவற்றின் இதிகாசங்களும் மிகப் பழமையானவைகள். இரண்டு நாடுகளும் அவற்றின் காலங்களில் மிகப் புகழ் வாய்ந்தவைகள். ஹோமரின் இலியட் மற்றும் ஒடிசி, வியாசரின் மகாபாரதம் மற்றும் வால்மீகி ராமாயணத்திற்கு இணையானவைகள். இரண்டு நாடுகளிலும் கடவுள்களின் எண்ணிக்கையும மிக அதிகம். மிகப் பழங்காலத்தில் கிரேக்கத்திற்கும் இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் இடையே வணிகம் மிகச் செழித்து வளர்ந்த்திருந்தது. கிரேக்கர்கள், தமிழகத்தில் யவனர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் (சாண்டில்யன் எழுதிய யவன ராணிப் புத்தகத்தை இங்கு நீங்கள் கவனம் கொள்ளலாம்)்...
.கிரேக்கர்கள் இந்தியாவின் ஒரு பகுதியை ஆண்ட காலமும் உண்டு (கி.மு 2 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வடமேற்கு மற்றும் பாகிஸ்தானின் ஒரு பகுதியை ஆண்டார்கள். அது இந்தோ- கிரேக்கப் பேரரசு என்று அழைக்கப்பட்டது).

நான் இங்கு இந்தியா மற்றும் கிரேக்க வரலாற்றைப் பற்றிக் கூறவரவில்லை. ஆனால் அவற்றின் இதிகாசங்களுக்கு இடையே நான் கண்ட சில ஒற்றுமைகளைப் பற்றியே கூறப் போகிறேன். கிரேக்க மற்றும் இந்திய இதிகாசங்களுக்கு இடையே, குறிப்பாக இலியட் மற்றும் மகாபாரதத்திற்கு இடையே நீங்கள் சில ஒற்றுமைகளைக் காண முடியும். இரண்டு இதிகாசங்களிலும் போரானது மிகப் பெரிய பங்கு வகித்தது. இரண்டு போர்களிலும் கடவுள்கள் பெரும் பங்கு பெற்றார்கள். மகாபாரதத்தில் கண்ணனும், ட்ராய் நகரைக் கைப்பற்றும் போரில்.

ட்ராய் நகர இளவரசன் பாரிஸ், கிரேக்க நாட்டைச் சார்ந்த ஸ்பார்ட்டா மன்னன் மெனிளியசின் மனைவி உலக அழகி ஹெலனைக் கடத்தி (கூட்டி ) வருவதிலிருந்து ஆரம்பம் ஆகிறது. ஹெலனைத் திரும்பக் கைப்பற்றிக் கூட்டி வருவதற்க்காக, கிரேக்கப் படை, கிரேக்க மன்னன் அகமெம்னன் தலைமையில் ட்ராய் நகரை முற்றுகை இடுகிறது. போர் ஆரம்பம் ஆகிறது.

இப்போரில் கடவுள்களோ அல்லது அவர்களின் பிள்ளைகளோ ஈடுபட்டார்கள். கிரேக்க தலைமைக் கடவுள் ஜீயுஸ், அவரின் மனைவி ஹீரா, கடவுள் அப்போல்லோ இப்படிப் பல கடவுள்களும் இரு அணிகளாகப் பிரிந்து கிரேக்கப் படைகளையோ அல்லது ட்ரோஜன்களையோ ஆதரித்தார்கள். கிரேக்க அழகி ஹெலனே, கிரேக்கத் தலைமைக் கடவுள் ஜீயுசின் மகள் தான். இலியட்டின் கதாநாயகன் அக்கிலிஸ், தீட்டிஸ் என்னும் கடல் தேவதையின் மகன். கிரேக்கப் போரில் இரண்டு அணியினர் மோதினார்கள். கிரேக்கர்கள் அகமெம்னன் தலைமையில் போரிட்டார்கள். ட்ராய் நகர மக்கள், ட்ராய் இளவரசன் ஹெக்டரின் தலைமையில் ஈடுபட்டார்கள். அவர்கள் ட்ரோஜன்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.


மகாபாரதப் போரில் பாண்டவர்களும், கௌரவர்களும் போரிட்டனர். மகாபாரதப் போரிலும் கடவுள்களும் அல்லது அவர்களின் மக்களோ போரில் ஈடுபட்டார்கள். கர்ணன்,சூரியனின் ஆசிர்வாதத்தால் பிறந்தவன். தர்மன், எமதர்மனின் ஆசிர்வாதத்தால்் பிறந்தவன். பீமன், வாயுவின் ஆசிர்வாதத்தாலும், அர்ஜுனன், இந்திரனின் ஆசிர்வாதத்தாலும் பிறந்தவர்கள். ஏன் பிதாமகர் பீஸ்மரே, கங்காதேவியின் மகன் தான். எல்லாவற்றிற்கும் மேலாக கண்ணன், பாண்டவர்கள் பக்கம் இருந்தான். இப்படி இரண்டு போர்களிலும் கடவுள்கள் ஈடுபட்டனர்.

Photo Courtesy : http://thecia.com.au/reviews/t/images/troy-3.jpg
http://www.bharatadesam.org/Mahabharata/Mahabharata.jpg

Friday, September 25, 2009

Chaos Theory யும் தண்ணீர் குடித்தலும்!

Chaos Theory - தசாவதாரம் படத்தின் மூலம் நம் மக்களுக்கு மிக அறிமுகமான ஒரு சொற்றொடர். இது கணித துறையைச் சார்ந்த ஒரு சொற்றொடர். இதனைப் பல காலங்களுக்கு முன்பே எழுத்தாளர் சுஜாதா, தமிழ் கூறும் நல்லுகத்திற்கு அறிமுகப் படுத்தி இருக்கிறார். Chaos theory ஐ விளக்கத் தேவைப்படும் மற்றொரு சொற்றொடர் Butterfly Effect. Butterfly Effect என்பது ஒரு சிக்கலான system தில் ஆரம்பத்தில் ஏற்படும் சிறு மாறுதல்கள், அதன் விளைவில் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக ஒரு மலை உச்சியில் வைக்கப்படும் ஒரு சிறு பந்தின் இயக்கத்தின் ஆரம்பத்தில் ஏற்படும் சிறு மாறுதல், அப்பந்து வடக்கே செல்லுமா ,தெற்கே செல்லுமா என்று அது செல்லும் இடத்தையே தீர்மானிக்கும்்.

இதே Butterfly Effect ஐ நாம், நம் உலக வாழ்விற்கும் apply பண்ணலாம். ஏனென்றால் நம் உலகைப்போல ஒரு சிக்கலான system வேறு எதுவும் கிடையாது. எடுத்துக்காட்டாக ஒரு கணவன் அலுவலகம் செல்கிறான். எப்பொழுதும் அவன் தன் மனைவியையும் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று அவள் அலுவலகத்தில் விட்டு விட்டுச் செல்வது வழக்கம். ஆனால் அந்தக் குறிப்பிட்ட நாளில் அவன் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் அவள் அலுவலகம் செல்லவில்லை. அதனால் அவன் மட்டும் அலுவலகம் செல்ல வேண்டிய சூழ்நிலை. அவன் கிளம்பும் போது அவன் சிறு குழந்தை, தன்னை சிறிது தூரம் வாகனத்தில் அழைத்துச் செல்லக் கேட்கிறது. அலுவலகம் செல்ல நேரம் ஆகி விட்டபடியால் அவன் அதை மறுத்து, காலணியை அணிந்து வாகனத்தில் செல்கிறான். இன்று அவன் மனைவி உடன் வராத காரணத்தால், அவன் வேறு வழியில் செல்கிறான். செல்லும் வழியில் ஒரு பேருந்துடன் மோதிப் பயங்கர விபத்தில் சிக்குகிறான்.

இப்பொழுது மேலே கூறிய நிகழ்ச்சிகளைச் சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம். இன்று அவன் மனைவிக்கு உடல் நலம் சரியாக இருந்து அவனுடன் அலுவலகம் வந்த்திருந்தாலோ அல்லது அவன் குழந்தையின் விருப்பப்படி சிறிது தூரம் அழைத்துச் சென்றிருந்தாலோ அல்லது இன்னும் குறைந்த பட்சம், காலணியைத் தேடும் போது சிறிது கால விரயம் ஆயிருந்தாலோ, அவன் அந்தப் பேருந்துடன் விபத்தில் சிக்கி இருக்கமாட்டான்.

ஆக உலகின் ஒரு கோடியில் இருக்கும், ஒரு சிறு குடும்பத்தில் நடக்கும் சிறு எண்ணிக்கையிலான இத்தனை நிகழ்வுகளே ஒன்றுடன் ஒன்று மிக நெருங்கியத் தொடர்பு கொண்டிருக்கும்போது, இந்த அண்ட சராசரமானது எவ்வளவு சிக்கலான நிகழ்வுகளைக் கொண்டது. அதன் ஒரு கோடியில் நடக்கும் ஏதேனும் ஒரு சிறு நிகழ்ச்சி, அதன் மறு கோடியில் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதையே Butterfly Effect என்று கூறலாம்.

பொதுவாக நம் குடும்பங்களில் வெளியே செல்லும் போது, ஏதேனும் தடுக்கி விட்டால் சிறுது நேரம் அமர்ந்து தண்ணீர் குடித்துவிட்டுச் செல் என்பார்கள். இதுவே Butterfly Effect தான். இப்படிச் சிறிது கால விரயம் ஏற்படுத்துவதன் மூலம் அவருக்கு ஏற்படும் ஆபத்துகளைத் தடுப்பதே இதன் நோக்கம்.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், கோவலன் மதுரைக்கு வரும்போது, வழியில் உள்ள கொடிகள் அசைந்து, நீ மதுரைக்கு வராதே என்று குறிப்பால் உணர்த்தியதகக் கூறுவார். அவன் அக்குறிப்பை உணராமல் வந்ததாலே உயிரை இழந்தான். மதுரை எரிந்தது.

ஆக நம் முன்னோர்கள் Butterfly Effect ஐப் பற்றி முன்பே அறிந்திருந்தார்களா? அப்படியே அவர்கள் Butterfly Effect ஐப் பற்றி அறிந்திருந்தார்கள் என்று கொள்வோம் என்றாலும், ஒருவருக்கு ஏற்படும் தடங்கல்கள், அவருக்குப் பின்னால் ஏற்ப்படும் ஆபத்துகளைப் பற்றி முன்பே உணர்த்துகின்றன என்று எப்படி நம்புவது? அப்படி இல்லை என்றால் தடங்களின் போது தண்ணீர் குடிப்பது, கால விரயம் ஏற்படுத்துவது அனைத்தும் அர்த்தமற்றதாகும்.

சரி நீ தடங்கல்களின்் போது தண்ணீர் குடிப்பாயா என்று கேட்க்குரீர்களா? இந்தப் பதிவை, பதிவு செய்வதற்கு Enter key ஐத் தட்டும் போது, ஒரு கொசுவானது Enter key தட்டும் விரலில் கடித்துவிட்டது. பிறகு தண்ணீர் குடித்துச் சிறுது நேரத்திற்குப்் பிறகே இப்பதிவைப் பதிந்தேன்!. என்ன பண்ணுவது பல காலப் பழக்கம், சில காலப் பகுத்தறிவால் மாறிவிடவாப் போகிறது!. அதற்கு இன்னும் சிறிது காலம் ஆகும்!.

P.S:
One of my friend Prakash arose a question that, your title contains Chaos theory but you continued your post only with "Butterfly Effect" . you haven't explained the relationship b/w Chaos theory and Butterfly Effect.

I think he is correct. i haven't explained properly the relationship b/w Chaos theory and Butterfly Effect. so here with i attached what i have replied him.

Chaos theory studies the behavior of dynamical system that are highly sensitive to initial conditions. That sensitivity is called "Butterfly Effect".

K, in the ball example you can map the ball to the dynamic system, that is highly sensitive to the initial conditions like air flow direction, from which side it is pushed,etc those are decides the ball's flowing direction.

So here,

Ball - dynamic system

Air flow, pushing direction,etc.. - Butterfly Effect.

Here Chaos theory studies the effect of "Butterfly Effect" on the "dynamic system" means, "airflow,pushing direction" on "the ball ".

It would have been better if i briefly mapped the world, actions in the world,chaos theory and butterfly effect.
K i will do little more study and correct those mistakes.

Thursday, September 24, 2009

Vulture is a patient bird

"Vulture is a patient bird" என்பார்கள். தமிழில் Vulture ஐ பிணம் தின்னிக் கழுகு என்பார்கள். பிணம் தின்னிக் கழுகானது தன்னுடைய இரை இறக்கும் வரை பொறுமையாக காத்திருக்கும். இரையின் நிலைமை மோசமாக மோசமாக, மெது மெதுவாக அருகில் வரும். அதனால் தான் Vulture is a patient bird என்பார்கள். பிணம் தின்னிக் கழுகானது எந்தளவு பொறுமையானது அல்லது மோசமானது என்பதற்கு இந்தப் புகைப்படம ஒரு கொடூரமான உதாரணம்.(அபபுகைப்படத்திற்கு இப்பதிவில் இடம் கொடுக்கும் அளவிற்கு என் மனம் இன்னும் கடினப்படவில்லை. மேலும் இந்தப் பதிவின் நோக்கத்தையும் அது சிதைத்து விடும். வேண்டுமென்றால் சில குறிப்புகள்: அப்புகைப்படமானது Pulitzer விருதை வென்ற புகைப்படம். உலகில் ஒருசேர அதிர்ச்சியையும், கண்டனத்தையும், பத்திரிகைத் தர்மத்தைப் பற்றிய கேள்விகளையும் எழுப்பிய புகைப்படம். அக்குழந்தைக்கு பிறகு என்ன ஆனது என்று் யாருக்கும் தெரியாது. அப்புகைப்படத்தை எடுத்த kevin Carter அடுத்தச் சில மாதங்களில் மன உளைச்சளின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்).

சரி நம் பதிவிற்கு திரும்புவோம்.
பிணம் தின்னிக் கழுகானது ஒரு துப்புரவாளர்! இறந்த ் மிருகங்களையும்,பறவைகளையும்உண்ணுவதன்மூலம்அதுசுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துக் கொள்கிறது.

மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையைப் போல கழுகின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. முக்கியமாக Vulture எண்ணிக்கை அபாயகரமான அளவில் குறைந்து வருகிறது. அதற்கு முக்கியக் காரணம் பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப் படும் தாவரங்களை உண்ணும் விலங்குகளை, உண்ணும் கழுகின் கல்லீரல் பாதிக்கப் படுகிறது. இதுவே அவற்றின் இறப்பிற்கும் காரணமாகிறது. இந்திய அரசு அத்தகைய பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தடை செய்துவிட்டது. இருந்த போதிலும் கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே தான் வருகிறது.

பார்சி இன மக்களில ஒரு முக்கியமான பழக்கம் உண்டு. அவர்கள் இறந்தவர்களின் உடல்களை புதைக்கவோ அல்லது எரிக்கவோ மாட்டார்கள்.்
அதற்குப்பதிலாக, ஈமச்சடங்குகள் முடிந்தபிறகு உடல்களைஅப்படியேவிட்டு விட்டு வந்துவிடுவார்கள். அந்த உடல்களை கழுகுகள் கொத்தி தின்று விடும். இதற்கு "sky burial " என்று பெயர் . இதற்கு என்றே மும்பையில் இருக்கும் ஒரு இடத்தின் பெயர் "Tower of silence".் (பண்டைய மங்கோலியர்களும் இதேமுறையைத்தான் பின்பற்றினார்கள்.செங்கிஷ்கான் பல நாடுகளுக்கு படை எடுத்துச் செல்லும்பொழுது, இறந்த வீரர்களின் உடல்களை கட்டி மங்கோலியாவுக்கு அனுப்பி வைப்பானாம்). கழுகுகள் மிச்சம் வைக்காமல் முழுவதுமாக தின்று விட்டுச் சென்றால், இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையும் என்று ஒரு நம்பிக்கை. கழுகுகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது பார்சி இன மக்களுக்கு ஒரு முக்கிய இழப்பு. ஏனெனில இறந்த உடல்களை தின்பதற்கு போதிய கழுகுகள் இல்லை.

உலகில் பல இன கழுகுகள் குறைந்து விட்டன. சில நாட்களுக்கு முன் http://wwfpak.org வலையில், White-backed Vulture Gyps bengalensis கழுகின் புகைப்படத்தையும் போட்டு, இக்கழுகை எவரேனும் கண்டால் உடனே தெரியப்படுத்தவும் என்று அறிவிப்பும் வெளியிட்டுருந்தார்கள். இக்கழுகானது அழிவின் விழிம்பில் உள்ளதாம். வட இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் எவரேனும் அக்கழுகை கண்டால், மேலே கண்ட வலை தளத்தில் ்தெரியப்படுத்தவும்.தெரியப்படுத்தவும்
தெரியப்படுத்தவும் .

தன் ஒன்று விட்ட சகோதருக்காக கருட பகவான் உங்களை ஆசிர்வதிப்பார்!

Tuesday, September 22, 2009

உன்னைப்(நம்மைப்) போல் ஒருவன்

நேற்று நான்,மது மற்றும் கார்த்தி மூன்று பெரும் சேர்ந்து "உன்னைப் போல் ஒருவன் " படம் பார்க்க மாயாஜால் சென்றிருந்தோம். அந்த படத்தை தேர்ந்தெடுத்ததறகு இருவர் தான் காரணம். 1.லாலேட்டன்் , 2. உலக நாயகன். இதற்கு மேல் வேறு காரணம் எதுவும் தேவை இல்லை என்று நினைக்கிறேன். சத்யம் போயிருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் . மாயாஜால், சத்யத்தை விட சற்று சுமாராகத்தான் இருக்கும்(ஃபிகர்களிலும்!).

உலக நாயகன் ஒரு மிகச்சிறந்த தமிழ் ஆர்வலர், ஆனால் அவர் ஏன் title card அனைத்தையும் ஆங்கிலத்தில் வைத்திருந்தார் என்று தெரியவில்லை. ஆனால் அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

படம் லாலேட்டன்் தன்னுடைய நினைவுகளை திரும்பிப் பார்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. அந்த நொடி முதல், படம் முடியும் வரை, படம் பார்த்த உணர்வே இல்லை. அனைவரும் படத்தின் உடனே பயணிக்கிறோம். அதுவே படத்தின் வெற்றி. கமலஹாசன் நிச்சயமாக வில்லன் இல்லை என்று அனைவருக்கும் தெரியும். மேலும் ஹிந்தி "Wednesday" படத்தின் கதையும் முக்கால் வாசி பேருக்கு தெரியும். அதையும் தாண்டி படம் சுவாரசியமாக சென்றதுதான் படத்தின் வெற்றி. என்னைப் பொறுத்தவரை அந்த வெற்றியின் பெரும் பங்கு லாலேட்டன் சாரும்.

இந்த படத்தில் என்னை கவர்ந்தவர்களை வரிசைகிரகமாக சொல்லுவதென்றால்1.லாலேட்டன், 2. ஆரிஃப் ஆக நடிக்கும் கணேஷ் வெங்கட்ராம் 3.பத்மஸ்ரீ கமலஹாசன்.

லாலேட்டன்் :
இதில் அவர் மலையாலீயாகவே நடிப்பதால், தமிழ் உச்சரிப்பிற்கு அவர் மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. நல்லவேளை, இல்லையென்றால் அந்த அழகிய மலையாளத் தமிழை நாம் இழந்திருப்போம். அவருடைய நடிப்பை பற்றி நான் என்ன சொல்லுவது. அவருடைய ஒவ்வொரு செல்லும் நடிக்கிறது. லாலேட்டன், லாலேட்டன் தான். பொறுப்பை முழுவதுமாக தன் தலையில் ஏற்பதிலிருந்து, சரியான வேலையை சரியான நபரிடம் சரியான நேரத்தில் பகிர்ந்து கொடுப்பது வரை, மிகச்சிறப்பு. காவல் உடையில் இருக்கும் அந்த கம்பீரம், மிடுக்கு, ஒவ்வொரு நிமிடமும் பார்த்து கொண்டிருக்கலாம். லாலேட்டா you are great.

ஆரிஃப :
இளம் காவல்துறை அதிகாரி. இவரிடமும் காவல் துறை அதிகாரிக்கான அந்த மிடுக்கை காணலாம். கூடுதலாக charming ஆக இருக்கிறார். அந்த வெடிமருந்து விற்பனையாலனிடம், விஷயத்தை கறப்பதறகாக அடிக்க தயாராவதிலேயே உண்மையையை கக்க வைக்கும் இடம் மிகச் சிறப்பு.

உலகநாயகன்:
உட்கார்ந்த இடத்திலிருந்து அனைவரையும் ஆட்டி வைக்கும் வேலை. கமலுக்கு நடிப்பதற்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.

இந்த படத்தை பற்றிக் கூறப்படும் ஒரு குற்றச்சாட்டு, அதிகமாக ஆங்கிலம் உபயோகப்படுத்தியிருப்பது. அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளும், வலைத்தளத்தை பார்த்து வெடிகுண்டு தயாரிக்கவும் , Router பற்றிய விசயங்களை தெரிந்திருக்கும் ஒரு மனிதனும், ஆங்கிலத்தில் அதிகமாக உரையாடுவது என்பது இயல்பாக நடக்கும் விஷயம் என்றே நான் எண்ணுகிறேன்.

திரைப்படங்களைப் பற்றிய தொழில்நுட்ப விஷயங்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அதனால் அதை வாசகர்களின் விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன் .

பொதுவாக இந்த மாதிரி படங்களை பார்த்துவிட்டு வெளியே வரும்போது, தேசப்பற்று கொஞ்சம் அதிகமாகவும், நாட்டை திருத்த வேண்டும் என்றும் தோன்றும் . ஆனால் இந்த பட முடிவில் அப்படி எதுவும் தோன்றவில்லை. அதுவே இப்படத்தின் பலமும் மற்றும் பலவீனமும் என்று நான் எண்ணுகிறேன். ்

நம்பிக்கை கொள்ளுங்கள், எதன்மீதாவது!

ஒரு அறிஞரிடம் ஒருவர், நீங்கள் பேய் இருப்பதை நம்புகிறீர்களா என்று கேட்டாராம், அதற்கு அவர்,

"பேய் இருப்பதை நான் நம்பல
இருந்தாலும்
கொஞ்சம் பயமாத்தான் இருக்கிறது" என்றாராம்!.

கடவுள் நம்பிக்கை என்பதும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான். கடவுள் நம்பிக்கை என்பது ஆளுக்கு ஆள், நேரத்திற்கு நேரம் வேறுபடும். சில பேர் எப்பொழுதும் ஆத்திகரா இருப்பாங்க, சில பேர் எப்பொழுதும் நாத்திகரா இருப்பாங்க. இன்னும் சில பேர் சில நேரம் ஆத்திகராகவும் சில நேரம் நாத்திகராகவும் இருப்பாங்க. நமக்கு பிடித்த விஷயங்கள் நடக்கும் போது ஆத்திகராகவும், நமக்கு பிடிக்காத விஷயங்கள் நடக்கும்போது நாத்திகராகவும் மாறுகிறோம்.

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ , ஆனால் ஏதேனும் ஒன்றின் மேல் நம்பிக்கை வைப்பது மிகவும் அவசியம் மற்றும் நல்லது. எடுத்துக்காட்டாக நம்மை சுற்றி நம் கட்டுப்பாட்டில் இல்லாத, ஆனாலும் அதன் விழைவுகள் நம்மை பாதிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கும் போது, நம்மால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியாது. அத்தகைய நேரங்களில் விழைவுகளைப் பற்றிக் கவலைப்படாத மனம் வேண்டும் அல்லது நேர்மறை எண்ணங்களை கொண்ட மனம் வேண்டும். உங்களால் நேர்மறை எண்ணங்களை உருவாக்க முடியவில்லையா ? அப்ப இங்குதான் கடவுள் வருகிறார். இங்குதான் கீதை வருகிறது. அனைத்தையும் கடவுளிடம் விட்டு விட்டு உங்கள் வேலையை பாருங்கள். ஆனால் அதே நேரம் எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டுவிட்டால் முயற்சி எங்கே? பலன் எங்கே? . அதனால் முயற்சியும் வேண்டும், ஆனால் அதன் விழைவுகளை பற்றிக் கவலைப்படாத மனமும் வேண்டும். இங்கு நாம் வள்ளுவரையும் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம்,

"தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்்".

ஒருவன் கடவுளிடம் தவம் இருந்தானாம். கடவுள் அவன் முன் தோன்றினார்

"பக்தா உன் பக்தியை மெச்சினோம், உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?" என்றார்.
அதற்கு பக்தன்
"இது கூட தெரியலனா நீ என்ன கடவுள்? " என்றானாம்.

இங்கு நான், பக்தனுக்கு என்ன வேண்டும் என்று கடவுளுக்கு தெரியவில்லை என்று நினைக்கவில்லை. பக்தனுக்கே, தனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்திருக்கிறதா என்றுதான் சோதிக்கிறார். ஒருவருக்கு தனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். அதுதான் முக்கியம். அது தெரிந்திருந்தாலே முக்கால் வாசி பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுவிடலாம். அது தெரிந்திருந்தாலே கடவுள் இரண்டாம் பட்சம்தான்.

எனவே செய்வது சரியோ தவறோ நம்பிக்கை கொள்ளுங்கள்,எதனிடமாவது!

சரி நீ கடவுள் இருப்பதை நம்புகிறாயா, இல்லையா? என்று கேட்குறீர்களா,

"கடவுள் இருப்பதை நம்பத்தான் செய்கிறேன்,
இருந்தாலும்
கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருக்குது!."

தாய் மொழி

நான் வலைப்பதிவு ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணிய போது, அதைத் தமிழில் எழுதுவதா அல்லது ஆங்கிலத்தில் எழுதுவதா என்ற குழப்பத்திலேயே பல மாதங்களை கழித்து விட்டேன், இல்லை இல்லை சில வருடங்களையே கழித்துவிட்டேன். என்னுடைய சகோதரனும்,என் நண்பர்களும்(முக்கியமாக ஜோதி மற்றும் சங்கர்), நான் ஏதோ மிக அறிவாளி என்றும், எனக்கு தெரிந்த விசயங்களை எல்லாம் பதிவு செய்ய வேண்டும் என்றும் மிகவும் வற்புறுத்தினார்கள். சரி இத்தனை பேருக்கு மதிப்பு கொடுத்தாவது ஒரு வலைப் பதிவை ஆரம்பிப்போமே என்று ஒருவாறு தீர்மானத்துக்கு வந்து,என்னுடைய முதல் பதிவை நான் மிகவும் கஷ்டபட்டு படித்த ஆங்கிலத்தில் பதிவு செய்தேன்.(என்னுடைய வலைக்கு ஒரு நல்ல பெயர் வைக்க வேண்டும என்ற யோசனையில் மேலும் பல மாதங்கள் கழிந்தது வேறு விஷயம். அதுவும் கடைசிவரை நடைபெறவில்லை !!!). தெரிந்தவற்றை எல்லாம் பதிவு செய்வேனா என்று தெரியாது , ஆனால் தோன்றியவற்றை எல்லாம் பதிவு செய்வேன் !!! ;).

சரி இப்பொழுது மட்டும் ஏன் தமிழில் என்று கேக்குறீர்களா?. சில நாட்களுக்கு முன் நான் ஒரு மனிதரை சந்தித்தேன் . அவர் மிகவும் படித்தவர், ஒரு நல்ல தொழிலில் இருப்பவர். அவருடன் சில நிமிடங்கள்தான் பேசினேன். அந்த மிகச்சில நிமிடங்களே என்னை மிகவும் மயக்கி விட்டது. என்ன ஒரு அருமையான தமிழ் உச்சரிப்பு !!. சொல்வதற்கு வெட்கம்தான், இத்தகைய மிகச் சிறந்த தமிழ் உச்சரிப்புகளை கேட்பது மிகவும் அரிதாகி விட்டது. மதுவிடம் இதைப் பற்றி பேசிய போது அவனுக்கும் அவரின் தமிழ் உச்சரிப்புகள் மிகவும் பிடித்துவிட்டது என்று தெரிந்தது. அன்று முடிவு செய்தேன், ஒரு நல்ல தமிழ் ஆசிரியரிடம் சென்று தமிழ் கற்பது, அவ்வப்போழுது தமிழில் வலைப் பதிவு எழுதுவது. அதன் ஆரம்பம்தான் இந்த முதல் முயற்சி. ஆனால் நிச்சயமாக ஆங்கிலத்திலும் என்னுடைய பதிவுகள் இருக்கும்.

பொதுவாக எனக்கு, ஒவ்வொருவரும் அவருடைய தாய் மொழியில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத கருத்து உண்டு. புலமை என்பது பெரிய வார்த்தை, குறைந்த பட்சம் பிழை இல்லாமல் பேசவும்,எழுதவும்்ழுதவும் தெரிந்திருந்தாலே நல்லது. நாம் நம் தாய் மொழியை வாழ வைக்காவிட்டால் பின் யார்தான் அதை வாழ வைப்பார்கள். ஒருவர் எத்துனை மொழிகளை கற்கிறார்களோ அத்துனை நல்லது. ஆனால் அவர்கள், தங்களுடைய தாய் மொழியில் புலமை பெற்றிருப்பதும் அவசியம். ஒவ்வொரு மொழி இறக்கும்போதும், மொழி மட்டும் இறக்கவில்லை, அதனுடன் சேர்ந்து அம்மொழி பேசிய மக்களின் கலாசாரம், வாழ்க்கை முறை அனைத்தும் அழிகிறது. எனக்கு அழிவில் நம்பிக்கை இல்லை.

அதே போல் தமிழில் வட மொழி எழுத்துக்களை தவிர்க்க வேண்டும் என்று கூறுவோரிடமும் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. வட மொழி எழுத்துக்களான ஜ,ஷ,ஸ,ஹ மற்றும் ஸ்ரீ போன்ற எழுத்துக்களை பயன்படுத்துவதன் மூலம் சில வார்த்தைகளின் மிகச்சரியான உச்சரிப்புகளை நாம் தமிழில் கொண்டு வர முடியும். காலத்திற்கேற்ப மொழியானது , பிற மொழிச் சொற்களை ஏற்கவோ அல்லது அதற்குச் சரியான மாற்றுச் சொற்களை கண்டு பிடிக்கவோ வேண்டும் . அது தமிழ் மொழிக்கும் பொருந்தும். அதனால் என்னுடைய பதிவுகள் வட மொழி எழுத்துகளையும் கொண்டிருக்கும். முடிந்தவரை தமிழில் பதியும் போது பிற மொழிச் சொற்கள் கலவாமல் கவனம் கொள்கிறேன். சில பதிவுகள் பேச்சு வழக்கு மொழியிலும் இருக்கும்.

"தமிழுக்கு அமுதென்று பேர்
அந்த தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்."

பின் குறிப்புகள் :

1. மேலே் உள்ள பதிவின் மூலம் நான் தமிழ் மொழியில் அக்கறை கொண்டவன் என்று கூறுவதை விட தாய் மொழியில் அக்கறை கொண்டவன் என்று கூறுவது சரியாக இருக்கும் . அத்தாய் மொழி, மூவாயிரம் ஆண்டுகள் பழம் பெருமை கொண்ட என் தமிழ் மொழியாக இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

2. நானும் என் தாய் மொழியில் புலமை கொண்டவன் கிடையாது . என் பதிவில் ஏதேனும் சொற் பிழையோ அல்லது வாக்கிய பிழையோ இருந்தால் என்னை மன்னிக்கவும். பிழையை சுட்டிக் காட்டினால் திருத்திக்கொள்கிறேன்.

3. நண்பா JDK, என் தமிழ் வலை பதிவிற்கு நீயும் ஒரு காரணம் ;) .