Wednesday, November 25, 2009

டாட்டா குழுமம் மற்றும் ரத்தன் டாட்டா

டாட்டா, எனக்கு மிகப் பிடித்தமான ஒரு குழுமம். இந்தியாவில் உள்ள குழுமங்களில் மிகப் பெரியதும், அதிகமாக மதிக்கப்படும் குழுமங்களில் ஒன்று, டாட்டா. கிட்டத்தட்ட 140 ஆண்டுகால பழமையான குழுமம். ஜாம்ஜெட்ஜி நௌரோஜி டாட்டா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இக்குழுமத்தில் 114 நிறுவனங்கள் உள்ளன. 6 கண்டங்களில் கிட்டத்தட்ட 80 க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் செயலாற்றி வருகிறது. 2009 ஆம் ஆண்டு Reputation Institute ஆல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் உலகளவில் மதிக்கப்படும் குழுமங்களில் 11 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

எனக்கு டாட்டாவைப் பிடிக்க மிக முக்கியக் காரணம், இந்தியா மீதான அதன் பற்று. டாட்டா நிறுவனங்களின் ஊழியர்கள் வெளி நாட்டுக்குச் செல்லும் போது, அவர்களுக்குக் கூறப்படும் அறிவுரைகளில் முதலிடத்தைப் பெறுவது "நீங்கள், இந்தியாவின் தூதுவராகச் செல்லுகிறீர்கள். அதனால் இந்தியாவின் மதிப்புக் குறையாமல் காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு" . டாட்டா தன்னுடைய சாதனைகளைச் சொல்லும்போது இந்தியாவையே முன்னிறுத்தும். இக்காரணத்தாலையே எனக்கு டாட்டாவை ரொம்ப பிடித்துப் போனது.

டாட்டா குழுமங்களில் மக்களுக்கு மிக அதிகமாக பரிச்சயமானது டாட்டா மோட்டார்ஸும் அதன் பேருந்துகளும். சிறு வயதில் நானும் மதுவும் டாட்டா நிறுவனம் கிட்டத்தட்ட எங்களுடைய சொந்த நிறுவனம் போலவே நினைத்துக்கொண்டோம். அதனாலையே அப்பொழுது எங்களுக்கு அசோக் லேய்லான்ட் நிறுவனத்தை பிடிக்காது. தமிழ்நாட்டில் அசோக் லேய்லான்ட் பேருந்துகளே அதிகம். அப்பொழுதெல்லாம் அசோக் லேய்லான்ட் பேருந்துகளைப் பார்த்தாலே நானும் மதுவும், "தமிழ்நாட்டுல மட்டும்தான் அசோக் லேய்லான்ட் இருக்கு. வட இந்தியாலலாம் டாட்டா தான் " என்று எங்களுக்குள்ளேயே சொல்லிக்கொள்வோம்.

சின்ன வயதில் எங்கள் மாமா பையனுக்கு TCS இல் வேலை கிடைத்தபோது, அவருக்கு வேலை கிடைத்தது என்பதை விட டாட்டா குழுமத்தில் வேலை கிடைத்ததையே எண்ணிப் பெருமிதம் கொண்டோம். அந்த அளவுக்கு எங்களுக்கு டாட்டாவின் மோகம் பிடித்திருந்தது. கல்லூரி முடித்த பிறகு TCS இன் நேர்முகத்தேர்வுக்குப் பிறகு எனக்கு எப்படியாவது TCS இல் வேலை கிடைத்துவிட வேண்டும் என்று அடுத்த ஒரு வாரத்திற்கு நான் கோயில் கோயிலாக ஏறி இறங்கி, இறைவனை இரங்கினேன். அப்பொழுது வேலை கிடைக்க வேண்டும் என்பதை விட TCS இல் வேலை கிடைக்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றியது.

இந்த அளவுக்கு எனக்கு டாட்டாவைப் பிடிக்கக் காரணம் அதன் நேர்மை. ஒரு முறை ரத்தன் டாட்டாவிடம் நீங்கள் ஏன் அரசியல்வாதிகளுடன் அதிகம் பழகுவதில்லை என்று கேட்டபோது, அதற்க்கு அவர் "அவர்கள் அவர்களுடைய வேலையைப் பார்க்கிறார்கள், நான் என்னுடைய வேலையைப் பார்க்கிறேன்" என்றார். டாட்டா நானோவை அறிமுகப் படுத்தும் போது ரத்தன் டாட்டா "பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு லட்ச ரூபாய் காரைப் பற்றி அறிமுகப்படுத்தும் போது இருந்த இரும்பின் விலையும், இப்பொழுது இருக்கும் இருக்கும் இரும்பின் விலையும் உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் நானோ ஒரு லட்ச ரூபாய்க்கே விற்கப்படும். ஏனென்றால் Promise is a promise " என்றார். இந்த நேர்மைதான் டாட்டா.

அந்த டாட்டா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாட்டா அவர்கள் போர்ப்ஸ் பத்திரிக்கையின் 2009 ஆம் ஆண்டு உலகின் மிக சக்தி வாய்ந்த மனிதர்களில் 59 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். வாழும் மனிதர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர்களில் ஒருவர்.

ரத்தன் டாட்டா அவர்கள் டாட்டா குழுமத்தில் 1961 ஆம் ஆண்டு சேர்ந்தார். 1991 ஆம் ஆண்டு அதன் தலைவரானார். ரத்தன் டாட்டா, டாட்டா குழுமத்தின் தலைவரான பிறகு பல மாறுதல்களைச் செய்தார். எந்த ஒரு தனி டாட்டா நிறுவனத்தையும் விட டாட்டா குழுமமே முக்கியமானது என்ற கொள்கையைக் கொண்டுவந்தார். அனைத்து டாட்டா நிறுவனங்களுக்குமான தற்போதிருக்கும் பொதுவான டாட்டா logo வைக் கொண்டுவந்தார். நஷ்டமடைந்த பல டாட்டா நிறுவனங்களிளிருந்து தைரியமாக வெளியே வந்தார். ரத்தன் டாட்டா தலைவராகப் பதவியேற்ற பிறகு டாட்டா குழுமத்தின் வருமானம் பத்து மடங்கானது. கோரஸ் குழுமத்தையும், போர்ட் நிறுவனத்திடமிருந்து ஜாகுவார் மற்றும் லான்ட் ரோவர் நிறுவனங்களை வாங்கியதும் உலகில் மிகக் குறைந்த விலை கொண்ட நானோ காரை அறிமுகப்படுத்தியதும் இவருடைய சாதனைகளில் சில.

ரத்தன் டாட்டாவும் டாட்டா குழுமமும் மேலும் பல சாதனைகள் படைக்க எனது வாழ்த்துக்கள் .

என்பதே எனக்கு முக்கியமாகப்பட்டது.



http://www.indianexpress.com/news/ratan-tata-keeps-his-promise-unveils-nano/438296/1
http://en.wikipedia.org/wiki/Ratan_Naval_Tata
http://en.wikipedia.org/wiki/Tata_Group
http://people.forbes.com/profile/ratan-n-tata/2766
http://www.forbes.com/2009/11/11/worlds-most-powerful-leadership-power-09-people_land.html

No comments: