Sunday, March 28, 2010

படிக்காத பத்திரிக்கைகள்


படிக்காத பத்திரிக்கைகள் எப்பொழுதும் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்ப்படுத்துகின்றன . அவை எப்பொழுதும் நிராகரிக்கப்பட்டதாகவே தோன்றுகின்றன. அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு அயர்ச்சி ஏற்ப்படுகிறது. பத்திரிகைகள் படிக்கப்படாததர்க்குக் காரணம் நேரமின்யா, ஆர்வமின்மையா அல்லது அயர்ச்சியா. எதுவாகிருந்தாலும் அவை நம்மைப் பார்க்கும்போதெல்லாம் , ஒரு பரிதாபப் பார்வைப் பார்பதாகவேத் தோன்றுகிறது. அவை காற்றில் படபடக்கும் போதெல்லாம் நீ என்னை வாசிக்காமல் ஏன் புறக்கணிக்கிறாய் என்று ஒரு காதலி கேட்பதுபோல் உள்ளது. பத்திரிகைகள் வாசிப்பு ஒருவரின் குணாதிசயத்தைக் காட்டுகின்றன. சிலர் கிடைக்கும் பத்திரிகைகள் அனைத்தையும் படிப்பார்கள், சிலர் சில பத்திரிக்கைகள் மட்டுமே படிப்பார்கள். எனக்குத் தெரிந்து பலர் சில பத்திரிகைகளில் சில பக்கங்களை மட்டுமே படிப்பார்கள்.

படிக்காத பத்திரிகைகள் எப்பொழுதும் சில நிகழ்வுகளை சொல்ல எத்தனிப்பதாகவேத் தோன்றும் . அவற்றை நாம் தான் கவனிப்பதில்லை. வாழ்கையில் கவனிக்கப்படாத பக்கங்கள் இருப்பது போல் பத்திரிக்கையிலும் கவனிக்கப்படாத பக்கங்கள் உள்ளன . எல்லாப் பத்திரிக்கைகளும் சுவாரசியமாய் இருப்பதில்லை. சில நேரங்களில் சில பக்கங்களே சுவாரசியமாய் இருக்கின்றன. அந்த சுவாரசியப் பக்கங்களை தேடும் அயர்ச்சியே , அந்த சோம்பலே படிக்காத பத்திரிக்கைகளை உண்டாக்குகின்றன.

படிக்காத பத்திரிக்கைகில் போலவே படிக்காத புத்தகங்களும். நானும் மதுவும் சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்ச்சிக்கு செல்வது வழக்கம். அங்கு வாங்கிய புத்தகங்கள் படித்து முடிப்பதற்கும் முன்னாலயே அடுத்த புத்தக கண்காட்சி வந்துவிடும். இப்படியாக சேர்ந்த புத்தகங்கள் அநேகம். எப்பொழுதும் அந்த படிக்காத புத்தகங்களைப் பார்க்கும் போது அதே குற்ற உணர்ச்சி ஏற்ப்படும்.

photo courtesy : http://www.greentaxi.com/wp-content/uploads/2009/03/newspaper-future.jpg

Thursday, March 25, 2010

நான் பிரதமரானால் - சாலை மற்றும் போக்குவரத்து துறை

நான் நெடுந்தொலைவு பயணப்படும் போது இருக்கும் பயண நேரங்களில் எல்லாம் எனக்கு பல எண்ணங்கள் தோன்றும். அவற்றில் முக்கியமானது ஏன் இந்தியா மட்டும் இப்படி முன்னேறாமல் இருக்கின்றது என்ற எண்ணம். மற்ற நாடுகள் எல்லாம் எவ்வளவு முன்னேறி இருக்கின்றன. இந்தியா மட்டும் ஏன் இப்படி இருக்கிறது என்று தோன்றும்.

நான் அதிகமாக இந்தியாவை ஒப்பீடு செய்யும் நாடு, சீனா . சீனா எவ்வளவு தூரம் பயணப்பட்டுவிட்டது. இத்தனைக்கும் எந்த ஒரு முன்னேற்ற செயல்களைப் பற்றிய எண்ணங்கள் சீனாவிற்கு தோன்றுவதற்கு முன்னமே இந்தியாவிற்கு தோன்றிவிடும். எடுத்துக்காட்டாக துரித நெடுஞ்சாலைகள்(Express way) ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிற்கு 1970 களிலேயே வாய்த்துவிட்டது. ஆனால் அது பல தடைகளைத் தாண்டி செயல்பாட்டிற்கு வந்தது 2000 களில்தான். சீனாவில் 1980 கள் வரை துரித நெடுஞ்சாலைகளே இல்லை. 1990 களில்தான் சில நெடுஞ்சாலைகள் துரித நெடுஞ்சாலைகளாக மாற்றப்பட்டன. இப்பொழுது சீனாவில் இருக்கும் துரித நெடுஞ்சாலைகளின் நீளம் 60,300 km. இது கிட்டத்தட்ட இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளமான 65,569 km சமம். இந்தியாவிலோ துரித நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 200 km களே. இதிலிருந்து நாம் சீனாவைவிட செயல்பாட்டில் எவ்வளவு தூரம் பின் தங்கி இருக்கோம் என்று தெரியும்.

இப்படிப்பட்ட நேரங்களில் எனக்கு இந்தியாவின் மீது அதீத கோபம் வரும். நாம் எப்படியாவது இந்தியாவை முன்னேற்றிவிட வேண்டும் என்று தோன்றும். அத்தகைய நிமிடங்களில்தான் நாமே பிரதமரானால் என்னவெல்லாம் செய்வோம் என்று எண்ணுவேன். இது பள்ளிப் பருவத்தில் நாம் எழுதிய "நான் பிரதமரானால் .." , " நான் முதலமைச்சரானால் ..." என்ற எண்ணங்களின் வெளிப்பாடே.... அத்தகைய எண்ணங்களே கீழே. முதலில் சாலை மற்றும் போக்குவரத்து துறையிலிருந்து ஆரம்பிக்கிறேன் ...

சாலை போக்குவரத்து ஒரு நாட்டிற்கு மிக முக்கியமானது. ஒவ்வொரு நாட்டின் பொருளாதரத்தில் இந்த சாலைகள் முதுகுத்தண்டாக உள்ளன. அதனால் நான் பிரதமரானால் இந்தியாவின் அனைத்து மாவட்ட தலைநகரங்களும், முக்கிய துறைமுகங்களும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டங்களின் வளர்ச்சியும் உறுதிப்படுத்தப்படும். இதே போல் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்கள் தேசிய நெடுஞ்சாலையால் இணைக்கப்படும்.

உலகிலேயே அதிக மக்கள் சாலைப் போக்குவரத்தில் இறப்பது இந்தியாவில் தான் அதிகம். இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 13 பேர் இறக்கின்றனர். 2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1.14 லட்சம் பேர் சாலை விபத்தில் இறக்கின்றனர். இது உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவைக் காட்டிலும் அதிகம் . இதைக் குறைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் ஆம்புலன்ஸ் வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன (PAGE 9). அந்த சேவை இன்னும் விரிவுபடுத்தப்பட்டு , இன்னும் அதிகமான ஆம்புலன்ஸ்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுத்தப்படும். இதன் மூலம் ஏதேனும் விபத்து நிகழ்ந்தால், ஆம்புலன்ஸ்கள் விரைவாக விபத்து நடந்த இடத்தை அடைய முடியும். தேசிய நெடுஞ்சாலைகளில் "median" களின் உயரம் அதிகரிக்கப்படும் . சாலைப் போக்குவரத்து இதன் மூலம் விரைவானதாகவும், ஆபத்து குறைந்ததாகவும் மாற்றப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலும், "median" களிலும் மரங்கள் வளர்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். இதன் மூலம் நாட்டில் மரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் சாலைப் போக்குவரத்து இனிமையானதாகவும் குளுமையானதாகவும் மாற்றப்படும். மரங்கள் வளர்க்கப்படுவதை உறுதிபடுத்தும்விதமாக அந்த சாலை அமைத்த "contractor" மரங்கள் நடுவதுடன் அதனை ஒரு வருடம் பராமரிக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வாகனம் நகர ஒரு சிக்னலில் 10 நிமிடத்திற்கும் மேல் நிற்க வேண்டிய தேவை ஏற்ப்பட்டால் அந்த சிக்னலில் ஒரு மேம்பாலம்(fly over) அமைக்கப்படும்.

தற்போது இந்தியாவில் இருக்கும் மொத்த சாலைகளின் நீளம் 3.34 million k.m. அதில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 65,569 km , மாநில நெடுஞ்சாலைகளின் நீளம் 1,30,000 km. மற்ற சாலைகளின் நீளம் 3,14 million k.m. தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் நாட்டின் மொத்த சாலைகளின் நீளத்தில் வெறும் "2%" மட்டுமே. ஆனால் அவை 40% போக்குவரத்தை சுமந்து செல்கின்றன. அதனால் இவற்றின் நீளத்தை அதிகரிக்க போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதாவது ஒவ்வொரு 5 வருடமும் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 40,000 km அதிகரிக்கப்படும் . மாநில நெடுஞ்சாலைகளின் நீளம் 60,000 km அதிகரிக்கப்படும். இந்தியாவில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையின் 65,569 km நீளத்தில், 10,00 km சாலைகள் நான்கு அல்லது ஆறு வழிச் சாலைகளாக உள்ளன. எனவே ஏற்கனவே 2 வழிச் சாலைகள் 4 வழிச் சாலைகளாகவும், 4 வழிச் சாலைகள் 6 வழிச் சாலைகளாகவும், 6 வழிச் சாலைகள் 8 வழிச் சாலைகளாகவும் மாற்றப்படும்.

தற்போது இரண்டு மிகப் பெரிய தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றன. ஒன்று North-South Corridor and East - West Corridor. இதில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை 4000 km நீளமானது. இது வடக்கே ஸ்ரீநகரையும் தெற்க்கே கன்னியாகுமரியையும் இணைக்கிறது. கிழக்கு - மேற்கு நெடுஞ்சாலை 3,300 km நீளமானது. . இது மேற்க்கே போர்பந்தரையும் கிழக்கே சில்ச்சரையும் இணைக்கிறது. இந்த இரண்டு திட்டங்களும் நான்கு வழி மற்றும் ஆறு வழிச் சாலைகளைக் கொண்டவை. இதில் கிட்டத்தட்ட 60% மட்டுமே பூர்த்தியாகியுள்ளது. இதற்க்கான திட்டச் செலவு 1999 ஆண்டு கணக்குப்படி 60,000 கோடி ரூபாய். இதன் மூலம் என்னுடைய திட்டமான வருடத்திற்கு 8,000 km நீள தேசிய நெடுஞ்சாலை, 12,000 km மாநில நெடுச்சாலை என்பது எவ்வளவு கடினமானது என்பது புரியும். ஆனால் இது சாத்தியமானதே. ஏனெனில் சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இதற்கும் அதிகம். மேலும் மேற்க்கூறிய நடவடிக்கைகளின் மூலம் உள்நாட்டு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

இதே போன்று மற்றொரு முக்கியமானத் திட்டம் தங்க நாற்கரச் சாலை (Golden Quadrilateral). இதனுடைய மொத்த நீளம் 5,486 km . 1999 ஆண்டு கணக்குப்படி இதன் மொத்த செலவு 60,000 கோடி ரூபாய்.

தங்க நாற்கரச் சாலை , North-South Corridor and East - West Corridor போல மேலும் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் உருவாக்கப்படும். ஒன்று 'X' வடிவில் வட மேற்க்கே பஞ்சாபையும்,வட கிழக்கே பிஹாரையும், தென் மேற்க்கே கேரளாவையும் , தென் கிழக்கே தமிழ்நாட்டையும் இணைக்கும்.

வட கிழக்கு மாநிலங்களில் பொருளாதார முன்னேற்றம் குறைவாக உள்ளது. அதற்க்கு ஒரு முக்கிய காரணம் போதுமான சாலை வசதிகள் இல்லாததும் ஆகும். அதனைப் போக்கும் வகையில் வட கிழக்கு மாநிலங்களின் தலைநகரங்கள் அனைத்தையும் ஒன்றோடொன்று இணைப்பது மட்டுமல்லாமல் அவற்றை பாட்னாவுடனும், கோல்கட்டாவுடனும் இணைக்கும் வகையில் ஒரு திட்டம் மேற்கொள்ளப்படும். அதற்க்கு North Eastern corridor என்று பெயரிடப்படும்.

துரித நெடுஞ்சாலைகள் (Expressways)


துரித நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளைவிட மேம்பட்டவை. National Expressway -1 எனும் அகமதாபாத்தையும், பரோடாவையும் இணைக்கும் துரித நெடுஞ்சாலை பயண நேரத்தை இரண்டரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரமாக குறைக்கிறது என்பதிலிருந்து அது எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம். இந்தியாவில் இருக்கும் மொத்த துரித நெடுஞ்சாலைகளின் நீளம் மிகக் குறைவே. இந்தியாவின் மொத்த துரித நெடுஞ்சாலைகளின் நீளம் 200 km மட்டுமே. இந்தியாவோ 2022 க்குள் 15,600 km துரித நெடுஞ்சாலை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. இதுவுமே மிகக் குறைந்த தூரம்தான் . எனவே நான் பிரதமரானால் வருடத்திற்கு 3000 km நீள துரித நெடுஞ்சாலைகள் உருவாக்கப்படும். இதன் மூலம் 2022 க்குள் 33,000 km சாலைகள் துரித நெடுஞ்சாளைகலாக் மாறி இருக்கும்.

உலகிலேயே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரவில் இந்தியா 42 ஆவது இடத்தை வகிக்கிறது. இது எனக்குத் தெரிந்து இந்தியாவைப் பொறுத்தவரையில் மிகக் குறைவுதான். இதற்க்கு உள்நாட்டு பாதுகாப்பு , சுற்றுலாத்துறை வளர்ச்சி , உள்நாட்டு கட்டமைப்புகள் என பல காரணிகள் உள்ளன . அவற்றில் போக்குவரத்தும் அதன் பாதுகாப்பு வசதிகளும் மிக முக்கியம் . சாலைப் போக்குவரத்து மற்றும் அதன் கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் நாம் வெளி நட்டு பயணிகளின் வரத்தை மட்டும் அல்ல உள்நாட்டு சுற்றுலா வளர்ச்சியையும் மேம்படுத்தலாம் . இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செலவாணிகள் கிடைக்கும். (page no 19) . இவ்வாறாக சுற்றுலாத்துறையின் மூலம் கிடைக்கும் நிதியில் ஒரு பகுதியை நாம் சாலை மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாம் .

கடந்த 2006 ஆம் ஆண்டு 4million வெளிநாட்டவர்கள் வந்தனர். அவர்கள் செலவழித்த மொத்த தொகை US$ 8.9 billion . இது தவிர உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கும் வருமானம் தனி . எனவே சுற்றுலாத் துறையில் நாம் கவனம் செலுத்துவதன் மூலம் சாலைப் போக்குவாரத்துக்கு தேவையான நிதியின் ஒரு பகுதியைப் பெறலாம்.


4 lane துரித நெடுஞ்சாலை அமைக்க 1 km க்கு Rs 14 கோடி ஆகிறது. இதுவே 6 lane Rs 20 கோடி ஆகிறது. இது 2009-10 ஆண்டுக்கான கணக்கு . இது 100 km ஐ அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது . ஆக 100 km நீள 4 lane சாலை அமைக்க மற்ற எல்லா செலவுகளையும் சேர்த்து Rs 1627.51 கோடி ஆகிறது. இதுவே 6 lane க்கு Rs 2325.01 கோடி ஆகிறது. தற்போது இந்த 100 kmதுரித நெடுஞ்சாலை அமைக்க 3 ஆண்டுகள் வரை ஆகிறது . இந்த செலவானது 3 ஆண்டுகளுக்கு 20:40:40 என்ற ratio வில் செலவாகிறது . இதற்க்கான பணமானது loan மற்றும் equity மூலம் 70:30 என்ற ratio வில் பெறப்படுகிறது (page 99).

மேற்க்கூறிய கணக்கின் படி பார்த்தால் நான் கூறிய வருடத்திற்கு 3000 km நீள துரித நெடுஞ்சாலை அமைக்க வருடத்திற்கு கிட்டத்தட்ட Rs 50,000 ஊட்டி செலவாகும். மேலும் 2022 ஆம் ஆண்டுக்குள் ஏறும் விலைவாசியையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும் . மேலும் தற்பொழுது 100 km சாலை அமைக்க 3 ஆண்டுகள் ஆகிறது . வருங்காலத்தில் வரும் தொழிநுட்ப முன்னேற்றங்களையும் மனதில்
கொள்வதன் மூலம் , இந்த 100 km க்கு 3 ஆண்டுகள் என்பதை படிப்படியாக குறைந்து விலைவாசி உயர்வால் ஏப்படும் செலவீனங்களை ஈடு கட்டிவிடும் . ஆக 2022 ஆண்டுக்குள் மொத்தம் 33,000 km என்பது சாத்தியமாகக் கூடியதே .

திட்டத்திற்கு தேவையான நிதி:


தங்க நாற்கரத் திட்டத்திற்கான நிதியானது பெட்ரோலின் மீது விதிக்கப்பட்ட வரியிலிருந்து பெறப்பட்டது. மேற்க்கூறிய திட்டங்களுக்கான நிதியும் பெட்ரோலின் மீது விதிக்கப்பட்ட வரிகளிலிருந்தே பெறப்படும். இதற்காக பெட்ரோலின் மீது புதிய வரிகள் விதிக்கப்படாது. ஏற்கனவே விதிக்கப்பட்ட வரிகளிலிருந்தே பெறப்படும். மேலும் வருமான வரியின் சில சதவீதங்களும் இத்திட்டதிற்க்காகப் பயன்படுத்தப்படும். வருமான வரி பற்றிய மேலும் தகவல்கள் என்னுடைய " நான் பிரதமரானால் - நிதி மேலாண்மை" என்ற பதிப்பில் இடம்பெறும்.

மேற்க்கூறிய கனவு இந்தியராகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே உண்டு. உங்கள் கனவை இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.


Saturday, March 20, 2010

வீடு

ஒவ்வொருவருடன் ஒன்றாய்க் கலந்த விசயங்களில் வீடும் நிச்சயம் இடம்பெறும். வீடு என்பது வெறுமனே தூங்கி எழுந்திருப்பதற்க்கான ஒன்று அல்ல. அதையும் தாண்டி ஒரு விஷயம் நம்மை வீட்டுடன் கட்டிப்போடுகிறது . வீடு என்பது பெரியவர்களுக்கு மட்டுமே உணர்வுப் பூர்வமானது மட்டும் அல்ல, சிறியவர்களுக்கும் கூட அது உணர்வுப் பூர்வமானது. ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு குடி ஏறும்போது , பழைய வீட்டை நீங்கிச் செல்லும் வேதனை பெரியவர்களை மட்டுமே அடைவதில்லை அது சிறுவர்களையும் விட்டுவைப்பதில்லை . ஏன் அந்த அனுபவத்தை நானே நிறைய சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். என் அப்பா அம்மா அரசாங்க ஊழியர்களாக இருந்ததால் நாங்கள் பல ஊருகளுக்கு மாற்றுதல் பெற்றுச் சென்றோம். ஒவ்வொருதடவையும் இவ்வாறு ஒரு வீட்டை நீங்கிச் செல்லும்போது உள்ளூர ஒரு வேதனை உண்டாகும். சிறு வயதிலிருந்தே வீட்டின் மீது ஆர்வம் ஏற்ப்பட்டுவிடுகிறது. அதுதான் மணல் வீடு கட்டும் வகையில் வெளிவருகிறது.

சொந்த வீட்டை தவிர்க்க முடியாத காரணங்களால் விற்றுவிட்டு அதனை நிரந்தரமாக நீங்கிச் செல்லும் போது உண்டாகும் வேதனை சொல்லில் அடங்காது. ஏனெனில் அந்த வீடு அவர்களின் உணர்வோடு ஒன்றுடன் ஒன்றாய் கலந்ததாக இருக்கும். ஒரு வீட்டை கட்டுவதென்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு வீடு கட்டுவது என்பது வெறும் செங்கலும் சுண்ணாம்பும் சேர்ந்து கட்டுவது மாத்திரம் அல்ல. ஒவ்வொரு வீட்டின் செங்கலுக்குப் பின்னாலும் உழைப்பு, தியாகம், ஆசைகள் என்று பலவற்றைக் கொண்டு கட்டுவது. ஒரு வீடு கட்டுவதற்குப் பின்னாலிருக்கும் உழைப்பு தியாகம் போன்றவற்றை தமிழில் வெளிவந்த "வீடு" என்ற திரைப்படம் அருமையாகக் காட்டும்.

ஒரு வீடு என்பது வீடாகவே மட்டும் இருப்பதில்லை. அது அவ்வீட்டில் குடியிருப்போரின் சந்தோசம், துக்கம், வேதனை , ஏமாற்றம், ஏக்கம், ஆசை, அன்பு போன்றவற்றின் மௌன சாட்சியாக இருக்கிறது. ஒவ்வொரு வீடும் தனக்குள் ஆயிரம் ஆயிரம் கதைகளை கொண்டிருக்கும். எனக்கு என்னவோ ஒவ்வொரு வீடும் அதில் குடியேருவோரின் குணாதிசயங்களுக்கு ஏற்ப தன்னையும் அடிக்கடி மாற்றிக் கொள்கிறது என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு வீடும் அதில் குடியிருப்போரின் தன்மைக்கு ஏற்ப அறியப்படுகிறது. நாங்கள் சிறு வயதில் கிரிக்கெட் விளையாடும் போது பந்தானது அடிக்கடி ஒரு வீட்டிற்குள் சென்று விடும். அந்த வீட்டுக்காரரைப் பார்த்தாலே எங்களுக்குப் பயம். அவர் சத்தம் போட்டுவிட்டு பந்தை தர மறுப்பார். அதனாலையே அந்த வீட்டைப் பார்த்தாலேயே எங்களுக்குப் பயம். சிறிது காலங்களுக்குப் பிறகு அவர் அந்த வீட்டை காலி செய்து விட்டு வேறொருவர் குடியேறினார். அவர்களுக்கு குழந்தை இல்லாததால் , சிறுவர்களான எங்களுடன் பாசமாக பழகினார்கள். அடிக்கடி எங்களை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று பிஸ்கட், குளிர்பானகள் எல்லாம் கொடுப்பார்கள். சிறிது காலத்திற்கு முன்பு வரை அந்த வீட்டைப் பார்த்தாலே எங்களுக்குப் பயம் . அதே வீடு இப்பொழுது முற்றிலும் மாறான பரிமாணம் பெற்றுள்ளது. இப்படியாக வீடானது தண்ணீர் எப்படி தான் இருக்கும் பாத்திரதிற்க்கேற்ப வடிவம் கொள்ளுதோ அதே போல் வீடும் அதில் குடியிருப்போரின் குணாதிசயங்களைப் பெறுகிறது. வெறும் வீடு என்பது வெறும் காலிப் பத்திரம் போலவே தான், அதற்கென்று எந்த குணாதிசயமும் கிடையாது.

நாங்கள் இது வரை பதினோரு வீடுகளில் குடியிருந்திருக்கிறோம். ஓவ்வொரு வீடும் என்னுடைய மற்றும் மதுவின் குணாதிசயங்களை வளர்ப்பதில் பெரும் பங்கு வகித்திருக்கின்றன. இந்த பதினோரு வீடுகளைத் தவிர எங்கள் மாமா வீட்டையும் , பெரியம்மா வீட்டையும் தவிர்க்க முடியாது. நாங்கள் சிறு பிராயத்தில் குடியிருந்த வீட்டை என்னால் இன்னும் மறக்க முடியாது. அந்த வீடானது செட்டிநாட்டுப் பாணியில் கட்டப்பட்டிருக்கும். அந்த வீடு ஒரே நீளமாக இருக்கும். அந்த வீட்டின் நீளம் அளவிற்கு வீட்டின் வெளியே ஒரு பெரிய கல் திண்ணை இருக்கும். அந்த கல் திண்ணையில் அமர்ந்து தான் எங்கள் உயிருக்கு உயிரான அப்பாவிடம் கதை கேட்போம். அந்த வீட்டில் தான் நாங்கள் எங்கள் அப்பாவின் உதவியுடன் முதல் முதலாக தோட்டம் வளர்த்தோம். இப்படியாக எங்களுடை அறிவையும் பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுவதையும் அந்த வீடு தான் வளர்த்தது.

எங்கள் சிறு பிராயத்தின் விடுமுறை நாட்களை நாங்கள் எங்கள் மாமா வீட்டிலும், எங்கள் பெரியம்மா வீட்டிலும்தான் கழித்தோம். எங்கள் மாமா வீடு மிகச் சிறியதாக இருந்தது. ஆனால் அந்த வீட்டில் குடியிருந்த வரை எங்களுக்கு அது சிறியதாகத் தெரியவில்லை. இன்று சென்று அவ்வீட்டைப் பார்த்தால் நாங்கள் இத்தனை பேர் எப்படி அந்த வீட்டில் குடியிருந்தோம் என்று நினைக்கும் போது மலைப்பாக உள்ளது . இவ்வாறாக அந்த வீடு ஒவ்வொருவர் வரும் போதும் மறுப்பேதும் சொல்லாமல் தன்னை அகட்டிக் கொண்டு கருப்பையைப் போல் அனைவரையும் ஏற்றுக் கொண்டது.

எங்கள் பெரியம்மா வீடு சற்றுப் பெரியது. அந்த வீட்டிற்கு என்றே தனி மணம் உண்டு. அவர்கள் சிறிது காலத்திற்கு முன் அந்த வீட்டை விற்றுவிட்டார்கள். அதைக் கேட்டபோது எதோ பால்ய கால நினைவலைகளை முற்றிலும் இழந்து விட்டது போன்ற வலி ஏற்ப்பட்டது. இப்படியாக வீடானது பல பேருடன் இரண்டறக் கலந்ததாக உள்ளது.

Thursday, March 11, 2010

சீனா - விலகும் திரை - விமர்சனம்


நான் சமீபத்தில் படித்த புத்தகம் சீனா - விலகும் திரை. அதில் சீனாவின் இன்றைய நிலையைப் பற்றிக் கூறப்பட்டிருந்த்தது . அதை எழுதியவர் பல்லவி ஐயர் . இவர் ஹிந்து போன்ற தேசிய நாளிதழ்களில் பல கட்டுரைகளை எழுதியவர். குறிப்பாக சீனாவைப் பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார். பல்லவி தன் ஸ்பானிய காதலனின் வேண்டுகோளுக்கு இணங்க சீனாவில் வேலை பெற்றுச் சென்றார். அங்கு இருந்த ஐந்து ஆண்டுகளில் அவருக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களே இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளன.

பல்லவி பிஜிங்கில் ஒரு பல்கலைகழகத்தில் ஆங்கில பேராசிரியராக வேலை செய்தார். சீனாவில் இருந்த காலங்களில் சீன மொழி தெரியாததால் அவருக்கு ஏற்ப்பட்ட சங்கடங்களை சுவைபடக் கூறியிருப்பார். பல்லவி சீனாவில் இருந்தபோது அதை நன்றாகப் புரிந்துகொள்ள, மக்களோடு மக்களாக இருக்க எண்ணி பெயஜின்கின் பழமையான வீடுகளில் ஒன்றை வாடகைக்கு எடுத்து குடியிருப்பார். பிறகு சீன மொழியையும் கற்றுக் கொண்டார்.

அவருடைய சீன மாணவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மாறுவதற்காக தங்களுடைய பெயர்களையும் ஆங்கிலப் பெயர்களாக மாற்றிக்கொண்டார்கலாம். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்களுடைய பெயர்கள் மேற்க்கத்திய பெயர்களாக இல்லாமல் ஆங்கில வார்த்தைகளாக இருந்தன. அவருடைய மாணவர்களில் ஒருவனுடைய பெயர் "சும்மா", இன்னொருவன் பெண் பெயரை அது பெண் பெயர் என்று கூட தெரியாமல் வைத்துக்கொண்டிருந்தான்.

சீனாவின் பொருளாதாரம் உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம். அதேநேரத்தில் சீனா ஒரு கம்யூனிச நாடு. ஆனால் பல்லவியைப் பொறுத்தவரையில் வெளிப்புரத்தில்தான் அது ஒரு கம்யூனிச நாடு , உண்மையில் அது ஒரு காபிடலிஸ்ட் நாடுதான்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் மிக முக்கிய வேறுபாடாக அவர் கருதுவது எந்த ஒரு தொழிலைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் கருத்துக்கள். சீனாவில் தொழில் பாகுபாடு கிடையாது என்பதுதான். ஒரு கழிப்பறை துப்புரவாளர் கூட அங்கு மதிக்கப்படுவதுதான். சீன மக்களைப் பொறுத்தவரை எந்த ஒரு தொழிலும் இழிவானது கிடையாது. சீனாவில் மிக பாராட்டப்பவேண்டிய விஷயம் இது .

சீனாவில் ஒலிம்பிக் நடந்த காலங்களில் பல்லவி அங்கு இருந்திருக்கிறார். அதனால் ஒலிம்பிக்கிற்காக மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து அவரால் எழுத முடிந்திருக்கிறது. ஒலிம்பிக்கின் போது சீனா வெளிப்புறமாக பகட்டாக இருந்தாலும், உள்ளூர , உள்ளூர் மக்கள் பல வேதனைகளை அனுபவித்திருப்பதாக பல்லவி எழுதுகிறார். மக்களின் பல வீடுகள் ஒலிம்பிக்கிற்காக இடிக்கப்பட்டன. இதற்காக மக்களுக்கு இழப்பீடுகள் கூட ஒழுங்காக வழங்கப்படவில்லை என்று பல்லவி கூறுகிறார்.

வெளிப்புறமாக சீனா பகட்டாக, ஆடம்பரமாக, பொருளாதாரத்தில் மிக பலம் வாய்ந்த நாடாக தெரிந்தாலும் , உள்ளூர லஞ்சமும் ஊழலும் இந்தியாவைப் போலவே மிக அதிகம் என்கிறார். இதையும் தாண்டி அது பொருளாதாரத்தில் பீடு நடை போடுவதுதான் அதனுடைய பலம் , கவர்ச்சி எல்லாம்.

சீனப் பொருளாதாரம் அதன் மக்களுக்கு மிக நல்ல வாழ்க்கை முறையைக் கொடுத்துள்ளது. இருந்தாலும் அதற்க்கு அவர்கள் கொடுத்த விலை, சுதந்திரம் . சீன மக்கள் சீன அரசாங்கத்திற்கு எதிராக எந்த ஒரு விமர்சனத்தையும் எழுப்ப முடியாது. மக்களுக்கு எதிராக எது நடந்தாலும், உள்ளூர புழுங்கிக் கொண்டு அதனை பொறுத்துக் கொள்ளவேண்டும். இந்தியாவில் அப்படி கிடையாது. இந்தியப் பொருளாதாரம் அப்படி ஒன்றும் நல்ல வாழ்க்கையை அடித்தட்டு மக்களுக்கு வழங்கவில்லை. இருந்தாலும் அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது, அவர்கள் அரசாங்கத்தை எதிர்த்து குரல் எழுப்ப முடியும், ஏன் தங்கள் ஓட்டால் அரசாங்கத்தையே மாற்ற முடியும். இதுதான் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள மிக முக்கிய மற்றொரு வித்தியாசம் என்கிறார்.

சீனா, திபெத்திற்கு ஒரு ரயில் பாதை போட்டது. அது ஆரம்பிக்கும் போது, அனைவரும் அது முடியாது என்றே நினைத்தனர். திபெத் உலகின் கூரை எனப்படும் பகுதி. மிக அதிகமான உயரத்தில் அமைந்திருப்பதால் அது அவ்வாறு அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட இடத்திற்கே சீனா ரயில் பாதை அமைத்தது. இந்த ரயில் பதை திட்டத்தில் பல தொழில்நுட்ப சவால்கள் நிறைந்திருந்தன. முக்கியமாக உயரத்தில் ஆக்ஜிசன் குறைபாட்டால் தொழிலாளர்களும், பயணிகளும் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. இதனால் அவர்களுக்கு குழாய் மூலம் ஆக்ஜிசன் அளிக்கப்பட்டன. பனியின் மீது தண்டவாளங்கள் அமைப்பதில் அதிக அபாயம் உள்ளது. ஏனெனில் பனிப்பாறை உருகிவிட்டால் அவ்வளவுதான். இதற்க்கு சீன பொறியாளர்கள் அப்பனி உருகிவிடாமல் இருக்க பெரிய குளுர்விப்பான்கள் மூலம் குளிர்வித்தனர். இப்படியாக பல சவால்கள் சமாளிக்கப்பட்டன. இந்த ரயில் பாதை தொழிநுட்ப அளவில் பேசப்பட்டதை விட அரசியல் அளவில் பேசப்பட்டதே அதிகம் என்கிறார் பல்லவி. ஏனெனில் இந்த ரயில் பாதை திபெத்தின் மீதான சீனாவின் இரும்புப் பிடியை அதிகரிக்கும் . சீனா ஒரு நாளுக்குள்ளாகவே தன்னுடைய படைகளை திபெத்தில் இந்த இருப்புப் பாதை மூலம் குவித்துவிட முடியும். மேலும் இந்த புதிய இருப்புப்பாதை திபெத்தின் தனி கலாச்சாரத்தையும் அதன் சுற்றுச் சூழலையும் கெடுத்துவிடும் என்பதும், மேலும் சீன ஹன் இன மக்களின் குடியேற்றங்களை திபெத்தில் அதிகரித்துவிடும் என்பதும் தலாய்லாமாவின் எண்ணம் என்கிறார் பல்லவி.

திபெத்தில் தலாய்லாமாவின் புகைப் படத்தை வைத்திருப்பதே குற்றம். இருந்தபோதிலும் அங்கிருக்கும் நிறைய மக்கள் தலாய்லாமாவின் புகைப் படத்தை வைத்திருப்பதும் ,அவரைக் காண எல்லை தாண்டி இந்தியா வருவதும், இன்றும் திபெத் மக்களுக்கு தலாய்லாமாவின்மீது இருக்கும் மதிப்பையும் மரியாதையையும் காட்டுகிறது என்கிறார் பல்லவி .

ஒரு சில சீனர்களிடம் பல்லவி, நீங்கள் ஏன் தலாய்லாமாவை வெறுக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர்கள் ஏனென்றால் அவர் ஒரு வன்முறையாளர், ஒரு பிரிவினைவாதி என்று கூறியுள்ளனர். அதற்க்கு பல்லவி , "அவர் ஒரு வன்முறைவாதி என்றால் பிறகு எப்படி அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது " என்றிருக்கிறார். அதற்க்கு சீனர்கள் "என்னது அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறதா " என்று கேட்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு சீனா, தலாய்லாமாவை இருட்டடிப்பு செய்திருப்பதாக பல்லவி கூறுகிறார்.

சீனா, பெரிய அணைக்கட்டு ஒன்றை கட்டி வருகிறது. அதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். இந்த அணைத்திட்டம் சீனாவின் வளர்ந்து வரும் மின்சாரத் தேவையை ஈடுக்கட்டுவதற்க்காக கட்டப்பட்டு வருகிறது . இந்த அணைத்திட்டத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்பை இழப்பதோடு மட்டுமல்லாமல் , சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் ஏற்ப்படுத்தும் என்ற குற்றச்சாட்டையும் கிளப்பி வருகிறது. இவற்றை எல்லாம் மீறி சீனா அந்த அணையைக் கட்டி வருவதை , பல்லவி இந்தியாவில் நர்மதைஆற்றிற்கு குறுக்கே அணைகட்டுவதற்கு எழும்பிவரும் எதிர்ப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கிறார். இதுதான் ஜனநாயகம். எப்படி ஒரு கட்சி ஆட்சி முறையில் நல்லதும் கேட்டதும் உள்ளது போல ஜனநாயகத்திலும் குறைபாடுகள் உள்ளன. இன்னவொன்று சீனா ஒவ்வொரு செயல் செய்யும்போதும் , அது இந்தியாவை ஒப்பிட்டே மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது . அதாவது ஒரு பெரிய அணை கட்டும்போதோ அல்லது மிகப் பெரிய சாலைகள் கட்டும்போது மக்கள் வெளியேற்றப்ப்படும்போது , சீனா மக்களிடம் "உங்களுக்கு மிகப் பெரிய அணை , சாலைகள் வேண்டுமா அல்லது இந்தியா போன்று இண்டு இடுக்கில் நீங்கள் மின்சாரம் இன்றி தவிக்க வேண்டுமா " என்றே எப்பொழுதும் இந்தியாவுடன் ஒப்பிட்டே பிரச்சாரம் செய்து வருவதாக பல்லவி கூறுகிறார்.

சீனாவில் பல்லவி செய்தி சேகரிப்பதற்காக எந்த ஒரு இடத்திற்கும் செல்லும் போது அவருடன் கூடவே அந்த ஊரைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூடவே வருவாராம். அவருடைய பணி உளவு பார்ப்பது. செய்தி சேகரிக்கும்போது மக்கள் சீனாவைப் பற்றி நல்லபடியாக கூறுவதை உறுதி செய்வதற்காக அவர் உடன் வருவாராம். இப்படி எந்த ஒரு செய்தியும் சென்சார் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் சார்ஸ் நோய் பரவியபோதுதான் அதன் உண்மையான சொரூபம் தெரியவந்தது என்கிறார். ஆரம்பக்கட்டத்தில் சீனா சார்ஸ் நோய் பரவவில்லை என்றே செய்திகளை சென்சார் செய்து கூறிவந்துள்ளது. மக்களும் அதை நம்பியுள்ளனர். பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் உண்மையை மறைக்க முடியாமல் , உண்மையான எண்ணிக்கையை ஒப்புக்கொண்டுள்ளது . இப்படி திடீரென்று அரசாங்கம் பெரிய எண்ணிகையை ஒப்புக்கொண்டவுடன் மக்கள் பயந்துவிட்டனர் . பல்லவி வேலை பார்த்த பல்கலைக்கழகத்திலிருந்து மாணர்வர்கள் அனைவரும் விடுமுறை எடுத்துக்கொண்டு பயந்துகொண்டு சொந்த ஊர் சென்றுவிட்டனராம். இந்தியாவில் இந்த மாதிரி நிகழ்ச்சியை காண முடியாது என்கிறார் பல்லவி. ஏனென்றால் மக்களுக்கு நோய் பரவும் நாளிலிருந்து அனைத்து நிகழ்ச்சிகளும் தெரியும். அதனால் பெரிதாக பயப்படமாட்டார்கள்.

ஒரு இடத்தில் பல்லவி சொல்வார், நான் ஏழையாக இருந்தால் சீனாவிலும் பணக்காரராக இருந்தால் இந்தியாவிலும் பிறக்க ஆசைப்படுவேன் . இந்த ஒரு சொற்றொடரே இந்தியா, சீனாவைப் பற்றி அறிய உதவும்.

சீனாவின் இன்றையக் காலநிலையை அறிய இந்த புத்தகம் நன்கு உதவும்.

photo courtesy : http://cache.boston.com/universal/site_graphics/blogs/bigpicture/chinamil_07_09/chinamil12.jpg

Wednesday, March 3, 2010

சச்சின் டெண்டுல்கர்

தானைத் தலைவன், தங்க இந்தியன், பௌலர்களின் பந்திற்கு அஞ்சா நெஞ்சன், மாஸ்டர் பிலாஷ்ட்டர், லிட்டில் மாஸ்டர், தூய நெஞ்சன்,அன்புத் தலைவன், எங்கள் தளபதி சச்சின் டெண்டுல்கர் டபுள் சென்சுரி அடித்ததற்கு எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

கல்யாணமும் ஜோசியமும்

நம் ஊரில் பெரும்பாலும் ஜாதகம் பார்க்காமல் அநேக திருமணங்கள் நிச்சயிக்கப்படுவதில்லை. இதற்க்கு விதி விலக்கு காதல் திருமணங்களே. பெற்றோர் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணங்கள் மணப்பெண் , மணமகன் -ஐ பார்பதைக் காட்டிலும் 14 ஜோசியக் கட்டங்களைப் பார்த்தே நிச்சயிக்கப்படுகின்றன. ஜோசியம் பார்ப்பவர் சொல்லுவதே வேத வாக்கு. இதுலயும் எல்லா ஜோசியக்காரர்களும் ஒரே மாதிரி சொல்லுவார்களா என்றால், மாட்டார்கள். ஒருவர் கணப் பொருத்தம் முக்கியமில்லை என்பார் மற்றொருவர் கணப் பொருத்தம் இல்லையென்றால் திருமணமே செய்யாதீர்கள் என்பார். ஒருவர் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் உள்ளது என்பார் இன்னொருவர் இல்லையென்பார். இப்படி முரண்பட்டவர்களின் வாக்கை வேத வாக்காகக் கொண்டு முரணான திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.

இதில் பெரிய கொடுமை என்னவென்றால், பெண் வீட்டில் பையனையும், பையன் வீட்டில் பெண்ணையும் ரொம்ப பிடித்திருக்கும். குணம், வேலை, நல்ல குடும்பம், அழகு என அனைத்துமே இரு வீட்டிலும் பொருந்தி வரும். கட்டக் கடைசியாக ஜாதகம் என்ற ஒன்றைப் பார்ப்பார்கள். அங்கு ஜோசியர் பொருத்தம் 5/10 என்று பாஸ் மார்க் தான் வாங்கியிருக்கு, distinction லாம் இல்ல என்று கூறி அந்த சம்பந்தத்தையே நிறுத்தி விடுவார்கள். (ஜாதகத்தில் 10 பொருத்தம் சரியாக பொருந்துகின்றனவா என்று பார்ப்பார்கள், அது பொருந்துவதைப் பொறுத்து 5/10, 8/10 என்று மார்க் போடுவார்கள்.) ஆக made for each other ஆகிய ஒரு பொருத்தம் ஜாதகம் சரியில்லை என்று நிறுத்தப்பட்டுவிடும்.

சரி ஜாதகம் சரியாக அமைந்து, செய்துவைத்த திருமணங்கள் அனைத்தும் வெற்றிக்கொடி நாட்டுகின்றனவா என்றால் அதுவும் கிடையாது. ஜாதகம் பார்த்து 9/10 என distinction வாங்கிய பல திருமணங்கள் ஆரம்பத்திலயே முறிவு பெறுகின்றன. சரி இப்பொழுது இதற்க்கு என்ன சொல்லப் போறீர்கள் என்று கேட்டால் அங்கு விதி என்ற ஒன்றைச் சொல்லுவார்கள். ஆக இங்கு ஜாதகம் செல்லாது.

அமைந்தால் ஜாதகம், முறிந்தால் விதி இப்படி எதற்கும் ஒரு காரணம் வைக்கிறார்கள்.

சரி ஜாதகத்தை நம்பலாமா கூடாதா ? என்று கேள்வி எழுப்பினால், விடை கிடைப்பதற்குப் பதிலாக அது அதற்க்கு ஆதி கேள்வியான, விதி இருக்கா இல்லையா ? என்ற கேள்வியையும், அது அதற்க்கு ஆதி கேள்வியான, கடவுள் இருப்பது உண்மையா இல்லையா ? என்பதையும் எழுப்புகிறது. இப்படி முரண்பட்ட கேள்விகளைக் கொண்டு முச்சந்தியில் நிற்கின்றன திருமணங்கள்.

ஜாதகம் இருப்பது உண்மையென்றால் எப்படி 9/10 வாங்கிய திருமணங்கள் முறிகின்றன, 4/10 வாங்கிய வரன்கள் (இவை பெரும்பாலும் காதல் திருமணங்கள்) made for each other ஆக உள்ளன. இதற்காக நான் காதல் திருமணங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன என்று கூறவில்லை. அவைகள் முறிந்தால் ஜாதகம் காரணமாக இருக்காது, கல்யாணத்திற்கு முன் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் ஒருவரைப் பற்றி மற்றொருவர் கொண்டிருந்த மாய பிம்பங்களே காரணமாக இருக்கும்.

திருமணங்களை மனதைப் பார்த்து நிச்சயுங்கள் கட்டத்தைப் பார்த்து நிச்சயிக்காதீர்கள்.

Monday, March 1, 2010

காட்டுமிராண்டிகள்

கடந்த வாரம் என் நண்பரின் நண்பராகிய ஜெர்மனி நாட்டைச் சார்ந்த ஒரு பெண் சென்னை வந்திருந்தார். அவரை அந்த நண்பர் சென்னையைச் சுற்றியுள்ள சில முக்கியமான சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கெல்லாம் அப்பெண்ணுக்கு கசப்பான அனுபவங்களே நேர்ந்துள்ளன.

நம் ஊரில் சுற்றுலா தளங்களில் இருக்கும் மிக முக்கியமான பிரச்சினை, பிச்சைக்காரர்கள். இப்பிச்சைக்காரர்கள் எவரையும் விடுவதில்லை, குறிப்பாக வெளிநாட்டுக்காரர்களை. இப்பிச்சைக்காரர்கள் எவரேனும் வெளிநாட்டுக்காரர்களைப் பார்த்தால் அவ்வளவுதான், அவர்களைச் சுற்றிக் கூடி, எவ்வளவு முடியுமோ அவ்வளவு காசு பறிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் வெளிநாட்டுகாரர்கள் நம் சுற்றுலா தளங்களை நிம்மதியாக பார்க்க முடிவதில்லை. இதே அனுபவம் இப்பெண்ணிற்க்கும் நேர்ந்துள்ளது.

ஒரு நாள் இந்த ஜெர்மானியப் பெண் ஒரு டீக் கடையில் ஒரு டீயும் இரண்டு பஜ்ஜியும் சாப்பிட்டு விட்டு நூறு ரூபாய் கொடுத்துள்ளார். அந்த டீக் கடைக்காரன் ஒரு டீ, இரண்டு பஜ்ஜிக்கு நூறு ரூபாய் சரியாகிவிட்டது என்று கூறி மீதி சில்லறை கொடுக்க மறுத்துள்ளான். அதற்க்கு இந்த ஜெர்மானியப் பெண் "i know value of money.This is not worth for 100 Rs" என்று கூறி சண்டை போட்டுள்ளார். பிறகு அந்த சென்னை நண்பர் வந்தபிறகே இந்த டீக் கடைக்காரன் சில்லறை கொடுத்துள்ளான். நம் ஊரைப் பொறுத்தவரையில் வெளி நாட்டுக்காரர்கள் அனைவரும் பணக்காரர்கள். அவர்களிடம் இருந்து எவ்வளவு பணம் பறிக்க முடியுமோ அவ்வளவு பறிக்க வேண்டும் என்று நினைப்பு. இதற்க்கு ம(மா)க்களை மட்டுமே குறை சொல்லிப் பயனில்லை. இந்த புத்தி அரசாங்கத்துக்கே உண்டு, அதனால் தான் சுற்றுலாத் தளங்களில் இந்திய மக்களுக்கு நுழைவுக் கட்டணம் 5 ரூபாய் என்றால் வெளிநாட்டுக்காரர்களுக்கு 50 ரூபாய் என்றிருக்கும். இத்தனைக்கும் இந்தியா வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் மாணவர்களாகவோ அல்லது வெளிநாட்டில் மத்திய தர மக்களாக இருப்பவர்கள்தான், பணக்காரர்கள் அல்ல. பணக்காரர்கள் எவரும் இந்தியா வருவதில்லை. அவர்கள் வெனிஸ், சுவிஸ் என்றுதான் செல்வார்கள். நாம் பணம் பறிப்பது இந்த மாணவர்களிடம் இருந்துதான். இந்த ஜெர்மானியப் பெண்ணும் ஒரு மாணவர்தான் மேலும் அவர் ஜெர்மானிய மத்திய தர வகுப்பைச் சார்ந்தவர்தான். சென்னையில் ஒரு காலச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ப்பதர்க்காக ஒரு வருடம் ஜெர்மனியில் பகுதி நேர வேலை செய்து, பணம் சேர்த்து சென்னை வந்துருக்கிறார்.

ஒரு நாள் நானும் மதுவும் பைக்கில் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு பைக்கில் இரண்டு வெளிநாட்டுக்காரர்கள் வந்தார்கள். அவர்கள் ஒரு ஆட்டோகாரனிடம் ஒரு இடத்திற்குச் செல்ல வழி கேட்டார்கள். அதற்க்கு அந்த ஆட்டோகாரன் நான் உங்களை கொண்டு போய்விடுகிறேன் , ஆட்டோவில் ஏறுங்கள் என்றான். அதற்க்கு அந்த வெளிநாட்டுக்காரர்கள் "No no,we have bike. you just say the route" என்றார்கள். அதற்க்கு அந்த ஆட்டோகாரன் வழி எல்லாம் சொல்ல முடியாது, போ என்று கூறினான். நான் இத்தகைய சம்பவங்கள் நேருவது வெளிநாட்டுகாரர்களுக்கு மட்டுமே என்று கருதவில்லை. மொழி தெரியாத , ஊர் தெரியாத யார் மாட்டினாலும் நம் ம(மா)க்கள் பணம் கறக்க நினைக்கிறார்கள்.

சென்ற வருடம் நான், மது மற்றும் என் நண்பன் ஆனந்தபாபு மூவரும் குலு மணாலி சென்றுவிட்டு ஒரு தனியார் பேருந்தில் டில்லி திரும்பிக்கொண்டிருந்தோம். பேருந்தை விட்டு இறங்கிய பிறகுதான் தெரிந்தது, மது பேருந்திலேயே தன்னுடைய பர்ஸ் - ஐ தொலைத்துவிட்டான் என்று. பிறகு வந்த பேருந்தின் register number ஐ கஷ்டப்பட்டு கண்டு பிடித்து அந்த பேருந்து இருக்கும் இடத்தையும் கண்டு பிடித்தோம். இந்த மூவரில் ஆனந்தபாபுவிற்கு மட்டும்தான் ஹிந்தி தெரியும். அவனும் அலுவலகம் செல்ல வேண்டி இருந்ததால் அவன் எங்களுடன் வர முடியாத நிலை. அதனால் நானும் மதுவும் மட்டும் பர்ஸ் - ஐ தேடி சென்றோம். கடைசியாக பேருந்தைக் கண்டு பிடித்து அதனுள் பர்ஸ் - ஐ தேடிப் பார்த்தால், பர்ஸ் - ஐ காணவில்லை. பிறகு அங்கு இருந்த கிளீனரிடம் ஒரு வழியாக சைகை பாசையில் பேசினோம். பிறகு அவன் எங்களை அந்த பேருந்தின் ஓட்டுனரிடம் அழைத்துச் சென்றான். அந்த ஓட்டுனன் ஹிந்தியில் பேசினான். ஹிந்தியில் எனக்கும் மதுவிற்கும் தெரிந்த ஒரே வாக்கியம் "ஹிந்தி நகி மாலும்". இதையே அவனிடமும் கூறினோம். அவன் மேலும் ஹிந்தியில் நிறைய பேசிவிட்டு பர்ஸ் - ஐ கொடுத்தான். பர்ஸ் - ஐ திறந்து பார்த்தால் பர்சில் பணம் எதையும் காணவில்லை . PAN card, ATM card மட்டும் தான் இருந்தது. அவனிடம் எப்படி ஹிந்தியில் பேசுவது என்று தெரியவில்லை. பொதுவாக இந்த மாதிரி சமையங்களில் நாங்கள் ஆனந்தபாபுவிடம் போன் போட்டு , ஹிந்தி பேசுவரிடம் கொடுத்துவிடுவோம். அவன் அவர்களிடம் பேசி புரியவைப்பான். இப்படித்தான் எங்களுடைய தகவல் பரிமாற்றம் டில்லியில் நடந்தது. அன்றும் அதையேதான் செய்தோம். அந்த ஓட்டுனன் ஆனந்தபாபுவிடம் பேசி விட்டு எங்களிடம் போனைக் கொடுத்தான். ஆனந்தபாபு என்னிடம் "அந்த டிரைவர் பர்சுல இருந்த பணம்லாம் தரமாட்டானாம், வேணும்னா பார்ச வாங்கிட்டு போங்கங்கிறான். at least நமக்கு PAN Card,ATM card னாவது கிடச்சதுள்ள. அதனால பர்சனாவது வாங்கிட்டு வந்துரு " என்றான் . ஆக நம் ம(மா)க்கள் வெளி நாட்டுக்காரர்கள் என்று மட்டும் இல்லை, மொழி தெரியாத எவராக இருந்தாலும் அவர்கள் தலையில் மிளகாய் அரைப்பார்கள்.

வெளிநாட்டுப் பெண்கள் இங்கு வரும்போது அவர்களுக்கு நடக்கும் பெருங்கொடுமை பாலியல் வன்முறைகள். நம் ம(மா)க்களுக்கு வெளிநாட்டுப் பெண்கள் என்றாலே கலவியில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள், அவர்கள் யார் கூப்பிட்டாலும் எளிதில் கலவிக்கு ஒத்துக் கொள்வார்கள் என்று நினைப்பு. அதனாலையே எந்த வெளிநாட்டுப் பெண்களை பார்த்தாலே பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். நான் மேலே கூறிய அந்த ஜெர்மானியப் பெண்ணிற்கும் இதே கொடுமைதான் நேர்ந்தது. அவர் பேருந்தில் சென்ற போது இடிப்பது, கிள்ளுவது போன்ற பாலியல் கொடுமையில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்றில்லை. கல்லூரி மாணவர்கள் கூட இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதைவிடப் பெருங்கொடுமை இந்த ஜெர்மானியப் பெண்ணிற்கு உதவுவதற்கென்று சென்னையைச் சேர்ந்த ஒருவனை நியமித்திருக்கிறார்கள். அவனும் அவரிடம் இதே போன்ற பாலியல் கொடுமைகளில் ஈடுபட்டுள்ளான். அவனிடமே அவர் "Already i am sweating, you also make me sweat more" என்று கூறியும் அவன் திருந்தவில்லை.

இப்படிப்பட்டவர்களை காட்டுமிராண்டிகள் என்று கூறுவதைத் தவிர்த்து பிறகு எப்படி கூறுவது.

இவ்வளவு நடந்தாலும் வெளிநாட்டுக்காரர்கள் இந்தியாவையும்,அதன் பழமையையும்,அதன் கலாச்சாரத்தையும்(!) நேசிக்கத்தான் செய்கிறார்கள். இந்த ஜெர்மானியப் பெண் மகாபல்லிபுரச் சிற்ப்பங்களையும் , மயிலை கோயில் அழகையும் வியந்து வியந்து புகழ்ந்திருக்கிறார். அவர்களுக்கு நம்முடைய பழமை மிகவும் பிடித்திருக்கிறது. சென்ற வருடம் டில்லிக்கு நான் சென்ற பொழுது நடந்த சம்பவம் எனக்கு ஞாபகம் வருகிறது. அப்பொழுது நானும், மதுவும் சென்ற பேருந்து சிக்னலில் காத்துக்கொண்டிருந்தது. அப்பேருந்திற்க்கு அருகிலேயே ஒரு ஆட்டோவும் காத்துக்கொண்டிருந்தது. அதில் ஒரு வெளிநாட்டுப் பெண் அமர்ந்திருந்தார். அப்பொழுது 6 அல்லது 7 வயதுள்ள ஒரு பெண் குழந்தை கையில் வைத்து எதையோ விற்றுக் கொண்டிருந்தது. அப் பெண் குழந்தை அந்த வெளிநாட்டுப் பெண்ணிடம் விற்க முயன்ற போது அப்பெண் அதை வாங்க மறுத்து தன் பையிலிருந்து ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து அப்பெண் குழந்தையிடம் கொடுத்து போகச் சொன்னார். எனக்கு உடனே அப்பேருந்தை விட்டு இறங்கிச் சென்று அப்பெண்ணின் கையைப் பிடித்துக் குலுக்கிப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. உலகில் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.