Wednesday, May 12, 2010

நான் பிரதமரானால் - சுகாதாரத்துறை

இப்பதிவு நான் பிரதமரானால் என்ற பதிவின் தொடர்ச்சியே ஆகும். இப்பதிவில் நான் சுகாதாரத் துறையைப் பற்றி ஆலோசிக்கப் போகிறேன்.

இந்தியாவின் சுகாதாரத்துறை 3500 ஆண்டுகள் பழமையானது. 3500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் ஆயுர்வேதம் பின்பற்றப்படுகிறது. பேரரசர் அசோகர் பல பள்ளிகளை நிறுவி மருத்துவக் கல்வியைப் பரப்பினார். மேலும் உலகிலேயே முதல் முறையாக பேரரசர் அசோகர் தன் நாட்டு மக்களுக்கு அனைவர்க்கும் மருத்துவ வசதி கிடைக்க முயற்சி மேற்கொண்டார். இவ்வாறாக இந்தியாதான் தன் நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதியை அளித்த முதல் நாடு.

ஆனால் இன்றோ நம் ஊரில் வியாதிகளுக்கு பஞ்சமில்லை அத்துடன் சாலை விபத்துகளால் ஏற்ப்படும் உயிரிழப்புகளும் அதிகம் . உலகிலேயே அதிகம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழப்பவர்கள் இந்தியாவில் தான் அதிகம் . இந்தியாவில் 2007 ஆம் ஆண்டு மட்டும் 1.13 லட்சம் பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர் . இது சாலை விபத்தின் போதே நடக்கும் உயிரிழப்புகளை மட்டுமே கணக்கில் கொண்டதா அல்லது சாலை விபத்துகளுக்கடுத்து நடைபெறும் சிகிச்சையின் போது இழந்த உயிர்களின் எண்ணிக்கையையும் சேர்த்ததா என்று தெரியவில்லை. இது எனக்குத் தெரிந்து சாலை விபத்துகளின் போது நடைபெறும் உயிரிழப்புகளை மட்டுமே கணக்கில் கொண்டதாக இருக்கும். அப்படியானால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம். சாலை விபத்துகளின் போது நடைபெறும் உயிரிழப்புகளை சாலை மேம்பாட்டின் மூலம் தடுக்கலாம் . ஆனால் அதற்கடுத்து நடைபெருமிழப்புகளை மேம்பட்ட மருத்துவ முறைகளின் மூலம் மட்டுமே தடுக்க இயலும்.

மேலும் உலகிலேயே சக்கரை நோயின் தலை நகரமாக இந்தியா விளங்குகிறது. 1995 ஆம் ஆண்டு 19 மில்லியன் ஆக இருந்த சக்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2007 ஆம் ஆண்டு 40.9 மில்லியன் ஆக உயர்ந்தது. சக்கரை நோய் உலகிலேயே நோய்களின் மூலம் ஏற்ப்படும் உயிரிழப்பில் நான்காவது இடத்தை வகிக்கிறது.

இந்தியாவில் குண்டானவர்களின் (Obesity) எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் 5% ஆக உள்ளது. Obesity தான் உலகில் பல நோய்களுக்கு மூல காரணம்.

இந்தியா உலகிலேயே நான்காவது எய்ட்ஸ் நோயாளிகள் அதிகமாக இருக்கும் நாடு.

அதே போல் உலகிலேயே இருதய நோய் அதிகம் இருக்கும் நாடு இந்தியா.

ஏறக்குறைய 10 லட்சம் மக்கள் இந்தியாவில் போதுமான மருத்துவ வசதி இல்லாததால் இறக்கின்றனர். 70 கோடி மக்களுக்கு சிறப்பு மருத்துவ வசதி கிடைப்பதில்லை .
இந்தியாவில் இருக்கும் சிறப்பு மருத்துவ வசதிகளில் கிட்டத்தட்ட 80% நகர்ப் புறங்களிலேயே உள்ளது .

இப்படி பல நோய்களின் தலைமையிடமாக இருக்கும் இந்தியாவில் மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் சென்றடைவதில்லை. இத்தனைக்கும் இந்தியாவில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் இல்லை. இந்தியா தற்பொழுது மருத்துவச் சுற்றுலாவின் தலைமையிடமாக மாறிக்கொண்டிருக்கிறது . பல வெளிநாட்டுக்காரர்கள் செலவு குறைவாக இருக்கிறது என்று இந்தியாவில் தான் மருத்துவச் சிகிச்சைப் பெறுகிறார்கள் . அந்த அளவிற்கு இந்தியாவில் மருத்துவ வசதிகள் உள்ளன. ஆனால் அவை இந்திய மக்களுக்கு கைக்கெட்டும் தொலைவில் இல்லை.

முதலில் மருத்துவ சிகிச்சைகளுக்குத் ஆகும் செலவீனங்களைப் பார்க்க வேண்டும் . அந்த செலவீனங்கள் அனைத்து மக்களாலும் கொடுக்க முடியாது. ஆக இந்தியாவில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் இலவச காப்பீடு வழங்க வேண்டும். ஆக மருத்துவச் செலவுகளை காப்பீடுகள் மூலம் அளிக்கலாம். இது ஒன்றும் உலகில் புதுமையானது ஒன்றும் அல்ல . இங்கிலாந்து நாட்டில் ஏற்கனவே NHS (National Health Service) என்ற பெயரில் இருப்பதுதான். இதன் மூலம் அந்நாடு தன் நாட்டு மக்களுக்கு தேவையான மருத்துவச் செலவுகளை இந்த NHS மூலம் அளிக்கிறது. ஏன் அந்நாட்டில் தங்கிப் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கூட இந்த திட்டத்தின் மூலம் இலவச மருத்துவச் சிகிச்சை அளிக்கிறது .

நூறு கோடி பேருக்கு இன்சூரன்ஸ் அளிப்பதின் மூலம் சில கோடி பேருக்கு உயர்தரச் சிகிச்சை அளிக்க முடியும். இந்த இன்சூரன்ஸ் திட்டத்திற்குத் தேவையான நிதியை முழுவதுமாக அரசாங்கமே ஏற்காமல் அரசும் மக்களும் சேர்ந்து ஏற்கலாம். எப்படி வாகனங்களுக்கு கட்டாயம் இன்சூரன்ஸ் இருக்கவேண்டுமோ அப்படி மக்களுக்கு கட்டாயம் இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். இந்த இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தை LIC நிறுவனம் ஏற்ப்பது மூலம் இந்த திட்டத்தில் ஏற்ப்படும் வரவு செலவுகளை மறைமுகமாக அரசாங்கமே பெறலாம். இதன் மூலம் அரசாங்கப் பணமானது எங்கும் ஓடிப் போகாமல் அரசாங்கத்திடமே திரும்பி வரும்.

இத்திட்டத்தில் செலவழிக்கப்படும் நிதியானது முழுவதுமாக இன்சூரன்ஸ்கு என்றே செலவழிக்கப்படாமல் குறிப்பிட்ட சதவீதம் மக்களுக்கு பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்ப்படுத்தவும் , AIIMS போன்ற பல்வேறு மருத்துவமனைகள் ஏற்ப்படுத்தவும் பயன்படும்.

இந்தியாவில் உள்ள 250 ஆங்கில மருத்துவக் கல்லூரிகளிலிருந்தும் , 400 இந்திய மருத்துவ முறைகளிலிருந்தும் கிட்டத்தட்ட 5,00,000 மருத்துவர்கள், செவிலியர்கள்,para professional கள் வெளிவருகின்றனர். இந்த எண்ணிக்கையே போதுமானதாக இல்லை. மேலும் மருத்துவக் கல்லூரிகளின் தரத்தையும் உயர்த்த வேண்டி உள்ளது. நமக்கு AIIMS போன்ற உயர்தர அரசாங்க மருத்துவமனைகள் தேவை.


உலக தர மருத்துவச் சிகிச்சைகளைப் பெறவும், தேவையான மனித ஆற்றலைப் பெறவும் இந்திய அடுத்த 5 ஆண்டுகளில் $20billion முதலீடு செய்ய வேண்டிருக்கும்.
இந்தியாவிலிருக்கும் மருத்துவமனைப் படுக்கைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. உலக அளவில் மருத்துவமனைப் படுக்கைகளின் எண்ணிக்கை 3.96 /1000 மக்களுக்கு இருக்கும்போது இந்தியாவின் சராசரி வெறும் 0.7 தான். இந்நிலைமை மாற அதிக முயற்ச்சிகள் எடுக்கப்படும் .

மேற்க்கூறிய செலவினங்களை கையாளுவதற்கும் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கும் நிதி நிலை அறிக்கை போன்று ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ அறிக்கை சமர்பிக்கப்படும்.

ஆரம்ப சுகாதாரங்களில் வசதிகள் மேம்படுத்தப்படும் மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் .

இத்துறையில் இருக்கும் மற்றொரு முக்கியமான பிரச்சினை கிராமப் புறங்களுக்கான பல மருத்துவர்கள் தாங்கள் பணிபுரியும் மருத்துவமனைகளுக்கேச் செல்லாமல் தங்களுடைய தனியார் மருத்துவமனைகளிலேயே தங்கி பணம் சம்பாதிப்பது. அந்த நிலையை மாற்ற கட்டாயமாக சிறப்பு அதிரடி சோதனைப் படை அமைக்கப்படும். தவறிழைக்கும் மருத்துவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.


http://www.indiastat.com/default.aspx
http://www.indiastat.com/crimeandlaw/6/accidents/35/roadaccidents/17897/stats.aspx

No comments: