Sunday, August 29, 2010

தாத்தா பாட்டி

எனக்கு சில நாட்களாக ஒரு மாதிரி குற்ற உணர்ச்சியாக இருந்ததது. கடந்த சில நாட்களாக நான் என் பாட்டியை சென்று பார்க்கவில்லை. நான் அவரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி அனுப்பியும், நான் சென்று பார்க்கவில்லை . பொதுவாக தலைமுறை இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கிடையேயான அன்பும் அதிகரிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஒரு பாட்டியோ அல்லது ஒரு தாத்தாவோ தன் பேரனிடமோ அல்லது பேத்தியிடமோ கொண்டிருக்கும் அன்பு அவர்களின் மகனோ அல்லது மகளிடமோ கொண்டிருக்கும் அன்பை விட அதிகம் என்பதே என் எண்ணம். அதுபோலவே எதிர்பாலரிடமான அன்பும் இங்கு அதிகம் என்றே எண்ணுகிறேன். அதாவது ஒரு பாட்டிக்கு தன் பேரனிடமும் ஒரு தாத்தாவுக்கு தன் பேத்தியிடமும் பாசம் அதிகமாக இருக்கும். இங்கு வேறுபட்ட இரண்டு தலைமுறைகள் தங்களுக்கிடையே கூட்டணி அமைக்கின்றன. அது ஒத்த கூட்டணியாகவும் அமைகிறது.

இப்படி வேறுபட்ட இரண்டு தலைமுறைகளுக்கிடையே அன்பு அதிகரிக்க காரணம் என்ன?. ஒரு குடும்பத்தில் அப்பாவோ அல்லது அம்மாவோ தன் பிள்ளைகளைக் கண்டிக்கும் போது, வீட்டில் உள்ள எல்லாரும் கண்டிக்கமாட்டார்கள். யாராவது ஒரு சிலர் கண்டிக்காமல் பிள்ளைகளுக்கு ஆதரவாகவோ அல்லது கண்டிகப்படுவதிலிருந்து காப்பாற்றுவதகவோ இருப்பார்கள். அந்த ஒரு சிலர் பெரும்பாலும் தாத்தா பாட்டியாகத்தான் இருப்பார்கள். அதேபோல் அப்பா அம்மா, தாத்தா பாட்டியின் மீது கோவப்படும்போது அங்கு தாத்தா பாட்டிக்கு ஆதரவாக வருவது பேரன் பேத்திகள்தான். இவ்வாறாக இரண்டு வேறுபட்ட தலைமுறைகள் நெருங்கி வருவதில் பாசம் அதிகரிக்கிறது.

இதானாலயே யாரேனும் வயதானவர்களைப் பார்க்கும்போது நமக்கு தாத்தா பாட்டி ஞாபகம் வருகிறது. எனக்கு என் தாய் வழி பாட்டியின் மீது பாசம் அதிகம்.அவரை நான் அம்மாச்சி என்றே அழைப்பேன். அதனாலயே சாலையில் எவரேனும் வயதான பாட்டியை பார்க்கும் போது எனக்கு என் பாட்டி ஞாபகம் வரும். அதனாலயே நான் ஏதேனும் பிட்ச்சை இட்டால் வயதான பாட்டிகளுகே இடுவேன்.

நான் அதிகம் சண்டையிடுவதும் என் அம்மாச்சியிடம்தான். எனக்கு என்னவோ தெரியவில்லை சண்டையானாலும் பாசமானாலும் அவரிடம்தான் காட்டுவேன். என்ன சண்டையானாலும் என்னால் அவரைப் பார்க்காமல் இருக்க முடியாது. எப்படியும் இரண்டொரு நாட்களில் சென்று பார்த்து விடுவேன். அவருக்கு மருந்தும், பிஸ்கட்டும் வாங்கி கொடுப்பது என்னுடைய பணிகளில் ஒன்று. எங்கள் அம்மா எதாவது வாங்க வேண்டும் என்று சொன்னால் அதை தட்டிக் கழிக்கும் நான் என் அம்மாச்சி எதாவது ஒரு மருந்தோ அல்லது பிஸ்கட்டோ வாங்க வேண்டும் என்று சொன்னால் எந்த வேலையின் நடுவிலும் வாங்கி கொடுத்து விடுவேன்.

தாத்தா பாட்டியுடனான பிணைப்பு மிகவும் முக்கியமானது. அது இரண்டு தலைமுறைக்கும் உண்டான பிணைப்பு. ஒரு தலைமுறையின் கலாச்சாரமும்,பண்பாடும் தாய் தந்தையரை விட தாத்தா பாட்டி மூலமாகவே அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது. ஓய்வு நேரத்தில் தாத்தா பாட்டி சொல்லும் கதைகள், அவர்கள் காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் மூலம் அவை கடத்தப் படுகின்றன. இது எந்த ஒரு முயற்ச்சியும் இன்றி தானாக நடைபெறுகிறது. தாத்தா பாட்டிகள் தங்கள் அடுத்த தலைமுறையுடன் ஒத்துப் போவதை விட அதற்கும் அடுத்த தலைமுறையுடன் எளிதாக ஒத்துப் போகிறார்கள் . அவர்களால் தாய் தந்தையரால் ஏற்க முடியாத பிள்ளைகளின் செயல்களைக்கூட தாத்தா பாட்டியினரால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. நான் எங்கள் வீட்டில் அதிக முற்போக்கு சிந்தனை கொண்டவர் என்று கருதுவது எங்கள் அம்மாச்சியைத்தான். எங்கள் தாய் தந்தையரால் ஏற்க முடியாத செயல்களைக்கூட அவரால் ஏற்க முடிகிறது. அது வயது தந்த முதிர்ச்சியா அல்லது தங்கள் பேரன் பேத்தி தலைமுறைகளை நன்கு புரிந்து கொண்ட செயலா என்று தெரியவில்லை.

எப்படியானாலும் தாத்தா பாட்டி மற்றும் பேரன் பேத்திகளுக்கு இடையேயான பிணைப்பு போற்றப்படவேண்டியது.

No comments: