Friday, November 12, 2010

நானும் சர்வாதிகாரியும்

எனக்கு ரொம்ப சுவாரசியமான கனவுகள் வரும். நேற்று அப்படிதான் ஒரு கனவு வந்தது . அதில் நான் ஒரு பொறியியல் பட்டதாரி. அப்பொழுதுதான் பட்டம் பெற்றிருந்தேன். நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு கீழ் வீட்டில் இரண்டு பட்டதாரிகள் குடியிருந்தனர். அவர்கள் இருவரும் Msc Bio Chemistry படித்திருந்தனர். நான் இருந்த நாட்டை ஒரு சர்வாதிகாரி ஆட்சி செய்தான். நான் அந்த சர்வாதிகாரியை நேரடியாக சந்திக்கும் வரை சர்வாதிகாரத்தின் தன்மை புரியவில்லை. அந்த நாடு அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறமை வாய்ந்த ஏவுகணையை பரிசோதித்து பார்த்தது. அந்த ஏவுகணை தன்னுடைய இலக்கில் 160cm மட்டுமே தவறி இலக்கை அடைந்தது. இதை அந்த நாடு மிகப் பெரிய வெற்றியாக கொண்டாடியது. இந்த வெற்றியில் அந்த சர்வாதிகாரி இந்த வெற்றிக்கு காரணமானவர்களை நேரில் பாராட்டினான். இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் நான் மேலே சொன்ன அந்த இரண்டு Msc பட்டதாரிகள். அதனால் இருவருக்கும் அந்த சர்வாதிகாரி தன் வீட்டில் விருந்து வைத்தான். அவர்களுடன் நானும் அவன் வீட்டிற்க்குச் சென்றேன். அந்த இரண்டு Msc பட்டதாரிகளை அந்த சர்வாதிகாரி மிகவும் பாராட்டினான். அவர்களுடன் நானும் சென்றதால் எனக்கும் அந்த சர்வாதிகாரியின் அறிமுகம் கிடைத்தது. போகப் போக அந்த சர்வாதிகாரியுடன் எனக்கு நெருக்கம் அதிகமானது. கிட்டத்தட்ட நான் அவனுடைய ஜால்ரா போலவே ஆனே ன். எனக்கு பயங்கள் அதிகம் . ஆனால் நான் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் அந்த சர்வாதிகாரியிடம் ஒரு சிறந்த வீரனைப் போல் காட்டிக்கொள்கிறேன். இப்படியாகச் செல்கையில் அந்த சர்வாதிகாரி நான் அதிகம் வீரம் கொண்டவன் அல்ல என்று சந்தேகம் ஏற்ப்படுகிறது. அதனால் அவனுக்கு கோவம் ஏற்படுகிறது. இதனால் அவன் எனக்கு சில தேர்வுகள் வைத்து படையில் சேர்க்க எண்ணுகிறான். மிகவும் பயந்தவனான நான் அவனுடைய தேர்வில் முதலில் தோற்று பின் எப்படியோ தேர்ச்சி பெற்று படையில் சேர்கிறேன் . எனக்கு பயங்கள் அதிகம் என்பதால் எனக்கு போர்ப்படையில் சேர இஷ்டம் இல்லை. எப்படியாவது நாட்டை விட்டு வெளியேறிட வேண்டும் என்று எண்ணுகிறேன் . அந்த ஊரில் அந்த சர்வாதிகாரி தங்கியிருந்த அரண்மனைக்கு வெளியே மார்கட் இருக்கிறது. அந்த மார்கட்டை முடிவில் ஒரு பாதை செல்கிறது . அந்த பாதையை தாண்டினால் வேறு நாட்டிற்குச் சென்று விடலாம் . ஆனால் யாரேனும் பார்த்துவிட்டால் சர்வாதிகாரியின் முன் நிறுத்தப்படுவோம். உடனே மரண தண்டனைதான். என்ன செய்வது என்றே புரியவில்லை. இந்த நேரத்தில் பயத்தில் முழித்து விட்டேன். உடம்பெல்லாம் வேர்த்து விட்டது

அப்பத்தான் தோன்றியது நாம் ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டு உருப்படியா இல்லனாலும் ஓரளவுக்கு ஒழுங்கா உயிருக்கு உத்தரவாதாம் தர்ற நாட்டுல இருக்கிறோம். ஆனால் ஈரான், வட கொரியா, பர்மா போன்ற சர்வாதிகார நாட்டுளலாம் இருக்கிறவங்களை நினைச்சா பயமா இருக்கு. எனக்கு இந்த கனவே நான் ஈரான் நாட்டில் இருப்பது போன்றே வந்தது. ஏன் சீனாவே அப்படிதான். அங்கு எவரும் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்க முடியாது. ஈரானும் சர்வாதிகார நாடுதான். ஆனால் இருக்கிறதுலயே ரொம்ப மோசமான நாடுகள் வட கொரியாவும் பர்மாவும்தான் . அங்கு நீங்கள் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினால் சுட்டே கொன்றுவிடுவார்கள். மேற்க் கூறிய நான்கு நாட்டிளையும் சீனாவும் ஈரானுமே பரவா இல்லையான நாடுகள். ஈரானுல தேர்தலுல தில்லு முல்லு பண்ணாலும் தேர்தல்னு ஒன்ன வைப்பாங்க. ஆனா வட கொரியாவும், பர்மாவும் முழுக்க முழுக்க சர்வாதிகார நாடுகள். நான் சில நாட்களுக்கு முன் ஒரு டாகுமெண்டரி படம் பார்த்தேன் . அது முழுக்க உண்மை . அதில் பர்மாவில் வீடியோ கேமேராவே வைத்திருக்க விடமாட்டேன்கிறார்கள். ஏனென்றால் வீடியோ கேமரா இருந்தால் நாட்டில் நடக்கும் அட்டூழியங்களை உலகிற்கு காட்டி விடுவார்கள் என்று பயம். அந்த அளவிற்கு சர்வாதிகார நாடுகள் . வட கொரியாவில் , நாட்டில் சர்வாதிகார அக்கிரமம் தாங்க முடியாமல் வட கொரிய, தென் கொரிய எல்லையை தாண்ட முனைபவர்களை எல்லாம் சுட்டுக்கொன்று விடுவார்கள்.

இந்த கனவில் பயந்து முழிக்கும் போதுதான் சர்வாதிகாரத்தின் கோர வலி புரிந்தது. என்னாதான் நம் நாட்டில் கொலை, பஞ்சம், ஊழல் மிகுந்திருந்தாலும் குறைந்த பட்சம் நம்மலால் சுதந்திரமாக இருக்க முடிகிறது . ஏன் ஆட்சியைக் கூட எதிர்க்க முடிகிறது.ஜனநாயத்திற்காக குரல் கொடுப்பதால் நம் நாட்டில் யாரும் சுட்டுக் கொல்லப்படப் போவதில்லை. சர்வாதிகார நாட்டில் பிறந்த ஒரே காரணத்திற்க்காக வட கொரியாவிலும் , பர்மாவிலும் இருக்கும் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது . அப்பொழுதுதான் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியது ஞாபகம் வந்தது. தன்னுடைய சுய லாபத்திற்காக இந்தியா பர்மாவில் நடக்கும் கொடுமைகளை பார்த்தும் பார்க்காமல் இருப்பது போல் இருக்கக் கூடாது. பர்மாவில் ஜனநாயகம் தலையெடுக்க இந்தியா பாடுபடவேண்டும். ஆமாம் நிச்சயம் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா வட கொரியாவிலும் , பர்மாவிலும் ஜனநாயகம் தலையெடுக்க பாடுபடவேண்டும் .

பின் குறிப்பு: எனக்கு இப்படி சுவாரசியமான கனவுகள் அடிக்கடி வரும். அப்பொழுதெல்லாம் கனவின் ஊடாகவே நான் நினைத்துக்கொள்வேன். ஆகா இன்று கனவு அருமை. இப்பொழுதே எழுந்திருத்து எழுத வேண்டும் என்று. ஆனால் அப்படி செய்ததில்லை . இன்றுதான் பயத்தில் முழித்ததும் எழுதினேன்.நான் எழுதும் போது மணி நடு இரவு 2!!!.

Tuesday, November 9, 2010

மைனா - திரை விமர்சனம்


தீபாவளி அன்னிக்கு நான், மது மற்றும் JDK மூனு பேரும் வ - குவாட்டர் கட்டிங் படத்துக்குப் போனோம். படத்தின் இயக்குனர்கள் ஓரம்போ படத்தின் இயக்குனர்களான புஷ்கர் & காயத்ரி . அதனால் கொஞ்சம் எதிர்பார்ப்புடனே போனோம் . அந்த படத்தோட டிரைலர்சும் வித்யாசமா இருந்ததால கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனா அது எல்லாத்தையும் நாறடிக்கிற மாதிரி படம் செம மொக்கை . ஏன்டா போனோம்னு ஆச்சு. அதுக்கு அடுத்த நாள் மைனா படத்துக்கு மது டிக்கெட் புக் பண்ணி இருந்தான் . ஏற்கனவே ஒரு மொக்க படத்துக்கு போனதால இந்த படம் எப்படி இருக்குமோனு ஒரு பயம் இருந்துச்சு. மேலும் படத்த பற்றிய பல பிரபலங்களோட விமர்சனங்கள் படம் ஏதோ பருத்தி வீரன் போல் இருக்குமோனு ஒரு பயத்தை ஏற்ப்படுத்தியது. எனக்கு கோரமான படங்கள் ஒரு பயத்தை ஏற்ப்படுத்தும் . மேலும் படத்தை பார்த்த கமலஹாசன் , படத்தின் கிளைமாக்ஸ் கோரமா இருக்கிறதே அதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று கூறி இருந்ததால் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டது என்று கேள்விப்பட்டதால் படத்திற்கு ஒருவித பதட்டத்துடனே போனேன்.


படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி புதுசு என்பதால் அவர்களைப் பற்றி எதிர்பார்ப்பு இல்லை . மேலும் நான் படம் பார்ப்பதற்கு முன் பாடல்களை கேட்கும் பழக்கம் இல்லாதவன் ஆனதால் பாடல்களைப் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இப்படி படத்தை பற்றிய நேர்மறையான எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி ஒரு வித எதிர்மறையான எதிர்பார்ப்புடனேயே சென்றேன்.


படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன் ஜெயிலில் இருந்து தன் மைனாவை பற்றி பின்னோக்கிப் பார்ப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. சின்ன வயதில் மைனாவும்(கதாநாயகி) அவள் அம்மாவும் யாருடைய ஆதரவுமின்றி இருக்கும் போது சுருளியாகிய நம்ம சின்ன வயது கதாநாயகன் அவர்களை கூட்டி வந்து தன்னுடைய ஊரில் இருக்கும் ஒரு பாட்டி வீட்டில் குடி வைக்கிறார். பின்னர் அந்த குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கிறார். இப்படியாக சிறு வயதிலிருந்து மைனாவிற்கும் சுருளிக்கும் காதல் ஏற்படுகிறது. இதனை அறியும் மைனாவின் அம்மா அதனை எதிர்க்கிறார் . இதனால் சுருளி மைனாவின் அம்மாவை அடித்து விட்டு ஜெயிலுக்குப் போகிறார். சிறையில் மைனாவிற்கு கல்யாண ஏற்பாடு நடப்பதை அறிந்து அங்கிருந்து தப்பிக்கிறார். பின் தன் ஊருக்குச் சென்று தன் காதலியைச் சந்திக்கிறார். அதே சமயம் தப்பிய சுருளியைப் பிடிக்க ஜெயில் சூப்பிரென்டும், அவருடன் ஒரு ஏட்டும் வருகின்றனர். மறுநாள் தீபாவளி. ஜெயில் சூப்பிரென்டுக்கு அது தலை தீபாவளி. அந்த தலை தீபாவளியை கொண்டாட முடியவில்லை என்ற கடுப்பு அவருக்கு. இப்படியாக சுருளியின் ஊரை அடையும் சூப்பிரென்டும் ஏட்டும் சுருளியை கைது செய்கின்றனர். சுருளியுடன் மைனாவும் வருகிறார். வரும் வழியில் சூப்பிரண்டு சுருளியை ஆறு மாதம் கஞ்சா கேசில் போடப்போவதாக மிரட்டுகிறார். அதனால் பயந்த சுருளியும் மைனாவும் அவர்களிடமிருந்து தப்பிக்கின்றனர். பின்னர் மீண்டும் சூப்பிரென்டிடம் அகப்படும் அவர்களை ஏட்டு சமாதானப்படுத்தி சுருளி மீது கஞ்சா கேசுலாம் போடமாட்டோம் என்று சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறார். அவர்கள் போகும் வழியில் மலைப்பாதையில் பேருந்து தலைகுப்புற விழுந்து விபத்தில் சிக்குகிறது. அந்த விபத்திலிருந்து சுருளி சூப்பிரென்டையும் , ஏட்டையும் காப்பாற்றுகிறார். அதனால் அவர் மேல் சூப்பிரென்டுக்கும், ஏட்டுக்கும் நல்ல மதிப்பு ஏற்ப்படுகிறது. அதனால் அவர்கள் ஜெயிலை அடைந்ததும் மறுநாள் சுருளியை கோர்டில் ஆஜர்படுத்திய பிறகு சுருளிக்கும் , மைனாவிற்க்கும் கல்யாணம் செய்விப்பதாக சூப்பிரென்டும், ஏட்டும் கூறுகின்றனர். அதே நேரத்தில் சூப்பிரென்டின் மனைவி தலை தீபாவளிக்கு போக முடியாத கடுப்பில் இருக்கிறார். கதையின் முடிவில் சுருளிக்கும், மைனாவிற்க்கும் கல்யாணம் முடிந்ததா இல்லையா . அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பதே கிளைமாக்ஸ்.


படத்தின் முக்கால்வாசி கதை சுருளி, மைனா, சூபிரென்டு மற்றும் ஏட்டு இவர்களை சுற்றியே நடைபெறுகிறது. படத்தின் கதை தீபாவளியை சுற்றியே நடைபெறுகிறது . படம் நடைபெறும்போது அதன் ஓட்டத்தை தீர்மானிக்க முடிகிறது. இதற்கடுத்து என்ன நடைபெறப்போகிறது என்பதை ஓரளவு நாம் உணர முடிகிறது. படத்தை நம்மை மறந்து பார்க்க முடிகிறது என்றெல்லாம் நான் கூற மாட்டேன். அதுவே படத்தின் இடையில் ஒரு அயற்ச்சியை ஏற்ப்படுத்துகிறது. படத்தின் பலம் அதன் நாயகர்கள் தேர்வு . கதாநாயகனாக நடிக்கும் விதார்த், கதாநாயகி அமலா, சூப்பிரண்டு, மற்றும் ஏட்டாக நடிக்கும் தம்பி ராமையா . அனைவரும் அருமையாக நடிக்கின்றனர். சூபிரென்டு மனைவியாக நடிப்பவர் சில இடங்களே வந்தாலும் அவரும் நன்றாக நடித்திருக்கிறார். படத்தின் காமெடிக்கு தம்பி ராமையா பொறுப்பு. அவருடைய டயலாக் டெலிவரியே மிக அருமையாக இருக்கின்றது. படத்தின் சில காட்சிகள் பருத்தி வீரன் படத்தை ஞாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. பருத்தி வீரன் போன்ற படங்களின் முடிவுகளும் பருத்தி வீரன் போன்றே இருப்பதைத்தான் தாங்க முடியவில்லை.

படத்தின் மிகப் பெரிய பலம், இசை. அனைத்துப் பாடல்களும் மிக அருமையாக இருக்கிறது. படத்தின் இசையமைப்பாளர் இமான். நம்பவே முடியவில்லை . கையப் பிடி, மைனா மைனா ஆகிய இரண்டு பாடல்களும் மிக அருமையாக இருக்கிறது. ஜிங்கு சிக்கா பாடல் தாளம் போட வைக்கிறது. கிச்சு கிச்சு தாம்பூலம் பாடல் வெகு நாளுக்குப் பிறகு வந்த சிறார்களைப் பற்றிய அருமையான பாடல்.

நிச்சயம் படம் பார்கலாம் .