Friday, August 19, 2011

அன்னா கசாரே என்னும் வினையூக்கி (Catalyst)

இன்று இணையத்தில் இரண்டு விதமானவர்களைக் காணலாம். ஒன்று அன்னா கசாரே ஆதரவாளர்கள். இன்னொருவர் அன்னா கசாரே எதிர்பாளர்கள். அன்னா கசாரே மத்திய அரசை எதிர்த்துதான் இந்த போராட்டம் நடத்துகிறார், அதனால் மத்திய அரசும், காங்கிரசை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களும் அவரை எதிர்கிறார்கள். ok. ஆனால் அவரை எதிர்க்கும் அல்லது அவரது போராட்டத்தைப் பற்றி அதிக கிண்டலும் கேலியும் கொண்டு பேசும் இன்னொரு பிரிவினர் நம் கூடையே இருக்கிறார்கள். அதுவும் இளைஞர்கள்.

இன்று இணையத்தில் குறிப்பாக facebook இல் இத்தகையவர்களை அதிகம் காண முடிகிறது. இப்பொழுது நாம் இணையத்தில் அன்னா கசாரே குறித்த பல status message களை காண முடியும் .

"அன்னா கசாரேயை ஆதரிக்கலனா என்னையும் ஊழல்வாதின்னு சொல்லிருவாங்கன்னு பயமா இருக்கு .."

"இவ்வளவு பேசும் அன்னா கசாரே இவ்வளவு நாள் எங்கே போயிருந்தார் .."

"நானும் கொஞ்சம் காசு கொடுத்தா , ராம்லீலா மைதானத்துல எனக்கு முதவரிசை இடம் கிடைக்குமா ..."

இன்னும் பல ...

அன்னா கசாரேயை எதிர்க்கும் மத்திய அரசும் , காங்கிரசும் எனக்கு பெரிதாக தெரியவில்லை . ஏனென்றால் அவர் போராட்டம் நடத்துவதே அவர்களை எதிர்த்துதான். அதனால் அவர்கள் அவரை எதிர்ப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அன்னா கசாரேயின் போராட்டத்தைப் பற்றி மாற்றிப் பேசும் இந்த இணைய இளைஞர்களைத்தான் பெரிதாக எனக்குத் தெரிகிறது. ஏனென்றால் இவர்கள் நம்மிடையே இருப்பவர்கள். இவர்களின் கருத்து மற்ற எல்லாரையும் விட எளிதாக , விரைவாக மக்களிடையே சென்று அவர்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனக்கு இந்த இளைஞர்களைப் பற்றி பொதுவாக ஒன்று புரியவில்லை, இவர்கள் நிஜமாகவே அன்னா கசாரே போராட்டத்தின் மீது வெறுப்பு கொண்டுள்ளார்களா இல்லை அனைவரும் அவரை ஆதரிக்கின்றனர் நாம் அவரை எதிர்த்தால் நாம் தனியாகத் தெரிவோம் என்று எண்ணுகிறார்களா என்று தெரியவில்லை.

பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு. ஆனால் அந்த கருத்து ஒரு சமூகத்தில் எந்த அளவு , எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் .

இவர்கள் கேட்கும் சில கேள்விகளில் நியாயம் இருக்கிறது . ஜன்லோக்பால் வந்துவிட்டால் அனைத்தும் மாறிவிடுமா ? என்று கேட்கிறார்கள். நியாயம்தான். அனைத்தும் மாறிவிடும் என்று யாராலும் உறுதி கொடுக்க முடியாது. ஆனால் மக்கள் இன்று எதைத் தின்றாலாவது பித்தம் தெளியாதா என்பதைப் போல எப்படியாவது இந்த ஊழல் ஒழியாதா என்று எண்ணுகின்றனர். அதற்கான ஒரு முன் முயற்சி , முதல் முயற்சியாக இதைக் கொள்ளலாம்.

அதைப் போல ஜெயப்ரகாஷ் நாராயணனால் முடியாததையா இவர் செய்து விடப் போகிறார் என்கின்றனர். சரி ஜெய்பிரகாஷ் நாராயணனால் முடியாததால் மற்றவர்கள் முயற்சி செய்யக் கூடாதா? . மேலும் ஜெயப்ரகாஷ் நாராயணன் இருந்த காலகட்டத்தை விட இன்று இந்த ஊழல் எதிர்ப்பு மிக அவசியம். ஜெய் பிரகாஷ் நாராயணன் இருந்த காலகட்டத்தில் இந்தியா ஒன்றும் பெரிய பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடு அல்ல. நாம் அன்று சோத்துக்கே பலரை எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இன்று இந்தியா உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளரும் நாடு. இன்னும் 30, 40 வருடங்களில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக ஆகப் போகிற நாடு. இத்தகைய காலகட்டத்தில் தான் உலகிலேயே மிகப் பெரிய ஊழலான 1.75 லட்சம் கோடி ஊழல் இந்தியாவில் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தானியங்கள் அதிகம் இருக்கும் இடத்தில்தான் பெருச்சாளிகள் அதிகம் வரும் , அதைப் போல அதிக பணம் புழங்கும் இடத்தில்தான் அதிக ஊழல் பெரிச்சாளிகள் வரும். அதற்கு கடிவாளம் போடத்தான் இந்த ஜன்லோக்பால்.

ஜனநாயகத்தை ஆதரிப்பவர்கள் ஒன்று கூறுவார்கள். ஜனநாயகம் தான் best என்று நாங்கள் கூறவில்லை. இன்று இருக்கும் மற்ற முறைகளில் இது better . Thats all. அதே போன்று தான் ஜன் லோக்பால் மட்டுமே தீர்வு அல்ல அல்லது அதுதான் best என்று இல்லை. இது ஒரு தீர்வு . இருப்பதில் ஓரளவுக்கு நல்ல தீர்வு .

அதைப் போல அன்னா கசாரேயை ஆதரிப்பவர்களை தனி மனித துதிபாடிகள் என்கின்றனர். எப்பொழுதுமே எந்த ஒரு பெரும் செயலுக்கும் leader என்று ஒருவர் தேவைப்படுகிறார். எதற்கும் முன்னெடுத்து செல்ல ஒரு முதல் காலடி தேவைப்படுகிறது. அந்த காலடியாகத்தான் அன்னா கசாரேயை மக்கள் பார்கிறார்கள். இங்கு மக்கள் யாரும் அன்னா காசரேயை ஊழலை ஒழிக்க வந்த அனாதரட்சகராக பார்கவில்லை. எதற்கும் ஒரு முன்னெடுப்பு எதற்கும் ஒரு lead. அவ்வளவுதான்.

இங்கு பூனைக்கு யார் மணி கட்டுவார்கள் என்று எதிர் பார்க்கும்போது ஒருவர் கிடைத்திருக்கிறார். அவரை மக்கள் ஆதரிக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கொச்சையாக சொல்லப் போனால் நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்டா :( .அவ்வளவுதான் .

அடுத்து ஒரு கேள்வி இவர் என்ன பெரிய ஒழுங்கா?. இதே கேள்விதான் பாபா ராம்தேவ் விசயத்திலும் கேட்டார்கள். பாபா ராம்தேவ் முயற்சி வெற்றி பெறவில்லை . இப்பொழுது மக்கள் அன்னா கசாரேயை ஆதரிக்கும்போதும் அதே கேள்வி கேட்கிறார்கள். ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் மக்கள் இங்கு அன்னா கசாரயையோ அல்லது பாபா ராம்தேவையோ ஆதரிக்கவில்லை. மக்கள் இங்கு ஊழல் எதிர்ப்பை ஆதரிக்கிறார்கள். இப்பொழுதும் அன்னா கசாரே நல்லவர் இல்லை , அவரும் ஊழல்வாதி என்று கூறப்படலாம் அல்லது அது நிஜமாகவே இருக்கலாம். இவர்களால் பாபா ராம்தேவையும் , அன்னா கசாரேயையும் தான் தோற்கடிக்க முடியுமே தவிர மக்களை அல்ல. இன்னும் சிறிது காலத்தில் இன்னொருவர் வருவார். மக்கள் ஆதரவு ஆவருக்கு கிடைக்கும். இப்படி ஏதோ ஒரு காலகட்டத்தில் மக்கள் வெற்றி பெறுவார்கள்.

நம்முடைய சுதந்திரப் போராட்டத்திற்கும் இதே வரலாறுதான் உண்டு . மக்கள் பல ஆண்டுகளாக சுதந்திரத்திற்கு போராடினார்கள். பல காலகட்டங்களில் பல தலைவர்கள் உருவானார்கள். பல தலைவர்களும் எதிர்கப்பட்டார்கள், பழி தூற்றப்பட்டார்கள். பல தலைவர்களும் தோற்கடிக்கப்பாட்டார்கள். ஆனாலும் பிற்பாடும் பல தலைவர்கள் தோன்றினார்கள். அவர்களையும் மக்கள் ஆதரித்தார்கள். கடைசியில் காந்தி என்று ஒருவர் வந்தார். மற்றவர்களைப் போல் மக்கள் ஆதரவைப் பெற்றார். சுதந்திரம் கிடைத்தது. இங்கு மக்கள் காந்தியை ஆதரிக்கவில்லை. அவர்கள் சுதந்திரப் போராட்டத்தைத்தான் ஆதரித்தார்கள். காந்தி ஒரு leader . அவ்வளவுதான். இதுதான் உலக வரலாறும் கூட.

இங்கு காந்தி , அன்னா கசாரே எல்லாம் ஒரு வினை ஊக்கி(Catalyst). அவ்வளவுதான். என்ன காந்தியும் அன்னா கசாரேயும் ஒன்றா என்கிறீர்களா? என்ன இருந்தாலும் காந்தியும் ஒரு மனிதர்தானே.


P.S:

1. நான் இங்கு அன்னா கசாரே போராட்டத்தை கேலி செய்பவர்களைப் பற்றி எழுத வேண்டும் என்று எண்ணி கடைசியில் ஊழல் எதிர்ப்பை எதிர்ப்பவர்களை பற்றி முடித்திருக்கின்றேன். அது எப்படியோ எழுத எண்ணி மன ஓட்டத்தில் வேறு எங்கோ சென்று முடிந்திருக்கின்றது. ஆகவே அன்னா கசாரேயின் போராட்டத்தை கேலி மட்டும் செய்வதே தங்கள் நோக்கம் என்று எண்ணுபவர்களை எல்லாம் நான் ஊழல் எதிர்ப்பை எதிர்ப்பவர்கள் என்று கூறவில்லை என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

Thursday, August 11, 2011

என்று தெளியும் இந்த நாடு ?

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் வளங்களைப் பொறுத்தது. இந்த வளங்கள் பெரும்பாலும் இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் குறிக்கும். சில நாடுகள் ( எ.கா தென் அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள்) மிகுந்த இயற்கை வளங்களையும் குறைந்த மனித வளத்தையும் கொண்டும், சில நாடுகள் (எ.கா ஜப்பான்) அதிக மனித வளத்தையும் குறைந்த இயற்கை வளங்களையும் கொண்டும் வளர்கின்றன. மிகக் குறைந்த நாடுகளே சமச்சீரான இயற்கை வளங்களையும் , மனித வளத்தையும் கொண்டுள்ளன. அவற்றில் ஒன்று இந்தியா.

இந்தியா அளவிற்கு மனித வளத்தையும் , இயற்கை வளங்களையும் கொண்டுள்ள நாடுகள் மிகச் சிலவே. எ.கா அமெரிக்கா, சீனா போன்றவை மற்ற சில.
ஆனால் அந்த வளங்களை ஒரு நாடு எந்த அளவிற்கு முறையாக பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் தலைமுறை முன்னேற்றம் உள்ளது. அதுவே அதனுடைய முதிர் தன்மையைக் ( Maturity) காட்டும்.

இந்தியாவில் இருக்கும் இயற்கை வளங்களில் கனிம வளங்களும் அடக்கம். ஒரு நாட்டிற்கு கனிம வளங்கள் மிக முக்கியமானது. உலக அளவில் இந்திய நிலக்கரி மற்றும் லிக்னைட் உற்பத்தியில் 3 வது இடமும் , பாரைட் உற்பத்தியில் 2 வது இடமும் , இரும்புத்தாது உற்பத்தியில் 4 வது இடமும், பாக்சைட் மற்றும் crude steel உற்பத்தியில் 5 வது இடமும் , மாங்கனீசு தாது மற்றும் அலுமினியம் உற்பத்தியில் முறையே 7 மற்றும் 8 வது இடமும் வகிக்கிறது.
இவ்வளவு வளங்கள் இந்தியாவில் உள்ளன.

ஆனால் இவ்வளவு வளங்களால் இந்தியாவிற்கு பயனா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்லலாம் . ஏனெனில் இவ்வளங்களில் மிகப் பெரும்பான்மை வெளி நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக இரும்புத் தாதை எடுத்துக்கொள்வோம். உலக அளவில் இரும்புத்தாது அதிக அளவு இருக்கும் நாடுகளிலும் அவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளிலும் இந்தியா மிக முக்கியமானது . உலக அளவில் இரும்புத்தாது உற்பத்தியில் இந்தியா 4 வது இடம் வகிக்கிறது. ஆனால் இவற்றில் மிகப் பெரும்பான்மை வெளிநாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதுவும் முக்கியமாக சீனாவிற்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக அளவில் steel உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது. அங்கு இருக்கும் ஆயிரக்கணக்கான steel ஆலைகளுக்கு தீனி போட இந்திய இரும்புத்தாது மிக அவசியம்.

சீனாவிற்கு , ஆஸ்திரேலியா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து அதிகமாக இரும்புத்தாது ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியாதான். இத்தனைக்கும் சீனாதான் இரும்புத்தாது உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது. அது ஒரு ஆண்டுக்கு 800 million metric ton தயாரிக்கிறது. அதுவும் பத்தாமல் வருடத்திற்கு 245 mmt தயாரிக்கும் இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது. இந்தியா உற்பத்தி செய்யும் இரும்புத்தாதில் 50% மேல் சீனாவிற்கே செல்கிறது.

உலக மார்கெட்டில் ஜூனில் 1 Ton இரும்புத் தாதின் (Iron ore) விலை Rs 7,500. இந்தியாவில் வெட்டி எடுக்கப்படும் இரும்புத் தாதில் மிகப் பெரும்பான்மை வெளிநாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதாவது 1 ton இரும்பு தாதிற்கு தனியார் சுரங்கங்களுக்கு கிடைக்கும் விலை Rs 7,500 . அதற்கு அவை அரசிற்கு செலுத்தும் royalty 1 டன்னிற்கு வெறும் Rs 125 (2009 முன் அது வெறும் Rs 29 :( . மேலும் இந்தியாவில் இருக்கும் இரும்புத்தாது சுரங்கங்கள் உட்பட அனைத்து சுரங்கங்களின் எண்ணிக்கை 2854 .அவற்றில் 755 யே அரசின் வசம் உள்ளது மீதி 2099 சுரங்கங்கள் தனியார் வசம் உள்ளன. ).

பொறுக்கவும் இப்பொழுது ஒன்றை நினைத்து பாருங்கள் ஒரு சாதாரண மனிதன் அவன் நிலத்தில் மண்ணிற்கு கீழே இருந்து இருந்து புதையல் எதுவும் எடுத்தால் அவை அனைத்தும் அரசிற்கே சொந்தம். அதில் அவனுக்கு பங்கு எதுவும் கிடையாது. ஆனால் அதே மண்ணிற்கு கீழே புதையலாக இருக்கும் கனிமங்களை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனங்கள் அரசிற்கு செலுத்தும் royalty வெறும் 1.6% தான் :( .

சரி at least ஏற்றுமதி செய்யும் இரும்புத்தாதை பதப்படுத்தி இரும்பாகவாவது (ஸ்டீல்) ஏற்றுமதி செய்கிறார்களா? அதுவும் கிடையாது. இரும்புத்தாதை இரும்பாக மாற்றினால் அதனால் பல பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் அதில் லாபமும் அதிகம். அதிக வரி மற்றும் அந்நிய செலாவணி கிடைக்கும். அதுவும் நாம் செய்வதில்லை . அனைத்தையும் தாதுகளாகவே ஏற்றுமதி செய்கிறோம்.

பொதுவாக ஒரு நாட்டில் ஒரு கனிம வளம் அதிகமாக கிடைத்தால் பொதுவாக அந்த நாட்டில் அந்த நாட்டு மக்களுக்கு அதன் விலை குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டாக பெட்ரோலியம் அதிகமாக கிடைக்கும் அரபு நாடுகளிலும் , வெனிசுலா போன்ற நாடுகளிலும் பெட்ரோலின் விலை மிக குறைவு. வெனிசுலாவில் 1ltr பெட்ரோலின் விலை Re 1 தான்! . ஆனால் இந்தியாவில் Rs 70. இந்தியாவில் பெட்ரோலின் விலை மிக அதிகமாக இருக்கக் காரணம் இந்தியாவில் பெட்ரோலியம் அதிகமாக கிடைப்பதில்லை , இந்தியா பெட்ரோலியத்தை மிக அதிகமாக வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. அதனால்தான் உலக மார்கெட்டிற்கு ஏற்றவாறு பெட்ரோலின் விலை மாறுகிறது என்பது இந்திய அரசின் கூற்று.

ஆனால் இரும்பைப் பொறுத்தவரை என்ன நடக்கிறது ? இந்தியா உலகிலேயே இரும்புத்தாது உற்பத்தியில் 4 வதாக இருந்த போதிலும் இந்தியாவில் மக்கள் வாங்கும் இரும்பின் விலை உலக மார்கெட்டில் என்ன விலையோ அதே விலைதான். அதாவது உலக மார்கெட்டில் இருக்கும் ஒரு டன் இரும்பின்( Steel) விலையான அதே Rs 32,000 (May மாதம்)கொடுத்துதான் இந்திய மக்களும் வாங்குகிறார்கள்( இந்த மாதம் இரும்பு விலை டன்னுக்கு Rs 40,000 தாண்டிருச்சு).

இது எப்படி இருக்கிறதென்றால் ஒரு தாய் தன் குழந்தையிடம், "வெளி மார்க்கெட்டில் ஒரு லிட்டர் பசும்பாலே 30 ரூபாய் ... நான் உனக்கோ அதைவிட சத்தான தாய்ப்பால் தருகிறேன் .. அதனால் நீ எனக்கு குறைந்தபட்சம் 30 ரூபாயாவது தரவேண்டும்" என்பது போல் உள்ளது. கேட்டால் இதற்குப் பெயர்தான் பொருளாதாரம். இதன் மூலம் வருவதுதான் பொருளாதார முன்னேற்றம் . எவ்வளவு மோசமான செயல் இது ?


கனிம வளங்கள் ஒரு நாட்டிற்கு இன்றியமையாதவை. அதுவும் இரும்பு போன்று தீர்ந்து போகும் கனிம வளங்கள் மிக இன்றியமையாதவை. பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இரும்பை ஏற்றுமதி செய்யலாம். ஏனெனில் அங்கு கனிம வளங்கள் மிக அதிகம் மேலும் அவற்றின் மக்கள் தொகை மற்றும் மக்கள் அடர்த்தி மிக குறைவு ( ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையே 2.2 கோடி தான். அதாவது இந்தியாவில் ஒரு வருடத்திற்கு அதிகரிக்கும் மக்கள்தொகையின் அளவு . ஆனால் அது இந்தியாவைப் போல 2.5 மடங்கு பெரியது). ஆனால் இந்தியா போன்ற மிக அதிக மக்கள்தொகை கொண்ட , இப்பொழுதான் வளர ஆரம்பித்திருக்கும் நாடுகளுக்கு இரும்பின் அவசியம் மிக அதிகம்.

ஒரு அறிக்கையின் படி உலக இரும்புத்தாதின் தேவை வருடத்திற்கு 2% என்று அதிகரித்தால் உலக இரும்பின் இருப்பு இன்னும் 64 வருடங்களில் தீர்ந்து விடும். ஆனால் இன்று இரும்பின் தேவை வருடத்திற்கு 10% அதிகரிக்கிறது. அதாவது அதிகபட்சம் இன்னும் 40 - 50 வருடங்களில் உலக இரும்பு எல்லாம் தீர்ந்து விடும் . அதற்கு அப்புறம் ஈயம் பித்தளைக்கு போட்ட பழைய இரும்பையே திரும்பி புதுபித்து உபயோகப்படுத்த வேண்டும். அதுவும் அப்ப அந்த பழைய இரும்பையும் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டும். ஏன்னா நாம்தான் அப்பொழுது எல்லாத்தையும் ஏற்றுமதி செய்திருப்போமே!. இப்படிப்பட்ட நிலையில் நாம் நம் இயற்கை வளங்களை கணக்கு வழக்கில்லாமல் ஏற்றுமதி செய்கிறோம்.

இது மட்டுமல்ல சட்ட விரோதமான சுரங்கங்களின் மதிப்பு இங்கு மிக அதிகம். கர்நாடகா மாநிலத்தில் மட்டும் இதன் மதிப்பு Rs 16,000 கோடி . இந்தியா முழுவதும் என்றால் இதன் மதிப்பு கிட்டத்தட்ட Rs 50,000 கோடி - Rs 60,000 கோடி. மேலும் இந்த சட்ட விரோத சுரங்கங்கள் ஊழலையும், தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கின்றன. மேலும் இவை சுற்று சூழல் மாசு கேட்டிற்கும் காரணமாகின்றன. மேலும் சுரங்கங்கள் அமையும் இடம் பெரும்பாலும் காடுகளாகவே உள்ளன. இதனால் அவை காடுகள் அழிப்பிற்கும், விலங்குகள், தாவரங்கள் அழிவதற்கும் காரணமாகின்றன. மேலும் அந்த இடங்களில் வாழும் பழங்குடி இன மக்களையும் வெளியேற்றி அவர்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கின்றன.

இப்பொழுது சுரங்கங்கள் அமைச்சகத்திற்கும், சுற்றுச் சூழல் அமைச்சகத்திற்கும் இடையே லடாய். அதாவது சுரங்கங்கள் அமைய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறவேண்டும் .ஆனால் காடுகள் இருக்கும் இடத்தில் அவற்றை அழித்து விட்டு சுரங்கங்கள் அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி தரமாட்டேன் என்கிறது. அதாவது கனிம வளத்தை அழித்து அவற்றை ஏற்றுமதி செய்வதோடு அல்லாமல் காடுகளையும் அழிக்க வேண்டுமாம் :( .

Wednesday, August 10, 2011

அதிதி தேவோ பவ :(

அன்று அந்த ஹோட்டலில் மதியம் சாப்டுட்டு பிரெண்ட் கூட அந்த ஹோட்டலின் வாசலில் நின்று பேசிக்கிட்டுருந்தேன். அப்ப அங்க ஒரு சில அழுக்கு மூட்டையுடன் வந்த ஒரு வயதான பிச்சைக்காரர் தன் கையில் இருந்த காலி தண்ணி பாட்டிலை ஹோட்டலை நோக்கி ஏதோ ஆட்டி ஆட்டி காட்டிக் கொண்டிருந்தார். அவரால் பேசக் கூட முடியவில்லை. கொஞ்ச நேரம் கழித்துதான் புரிந்தது அவர் தண்ணி வேணும்னு கேட்கிறார்னு. கொஞ்ச நேரத்தில் அந்த ஹோட்டலிலிருந்து வெளியே வந்த ஒருவர் அந்த பிச்சைக்காரரை அடிக்காத குறையாக விரட்டி அடித்தார். எனக்குப் பாவமாக இருந்தது. பொது குடிநீர் குழாய்களையும், பொதுக் கழிப்பிடங்களையும் காட்டிலும் அதிக சாராயக் கடைகளைக் கொண்டிருக்கும் நாட்டில் நாம் இந்தக் காட்சிகளைத்தான் காண முடியும்.

நான் அருகில் இருந்த ஒரு பெட்டிக் கடையில் தண்ணீர் பாக்கெட் வாங்கி விட்டு திரும்பிப் பார்த்தால் அந்த வயதானவர் வெகு தூரம் விலகி சென்றிருந்தார். அவரை நோக்கி தண்ணிப் பாக்கெட்டுடன் ஓடினேன். நான் அவரை நோக்கி ஓடி வருவதைப் பார்த்ததும் அவர் பயந்து விலகினார். நான் வாங்கிய அந்த தண்ணிப் பாக்கெட்டை நீட்டிய போது கூட , அவர் பயந்து கொண்டுதான் அதை வாங்கினார்.

திரும்பி வரும்போதுதான் அந்த ஹோட்டலின் பெயருக்குக் கீழே எழுதியிருந்த அந்த வாக்கியம் கண்ணில்பட்டது.

"அதிதி தேவோ பவ " :(

Photo Courtesy:

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhrb9ENPW1evUS934vbsD75RWmuWYf_kr3flwIv__SppSptGTTmr0qoskrbME5xe_5ZQolhSBT9SYpCi-DoWslu7PMKtu-7PIlHNcrVhHdD7nDvGCAtTRonxChC0w-RF8oAGhcbQeGgtUg/

Thursday, August 4, 2011

தர்மம் Vs தொழில் தர்மம்

எந்த ஒரு தொழிலிலும் அந்த தொழிலுக்கான தர்மம் என்று ஒன்று உண்டாம். அதை தொழில் தர்மம் என்று சொல்வார்கள். ஒரு டிவியில் அயன் பட விமர்சனத்தின் போது இப்படி கூறினார்கள் "கடத்தல் தொழிலை நேர்மையாக செய்து வரும் பிரபு "( அது என்ன கடத்தல் தொழிலில் நேர்மை என்று புரியவில்லை :( ) . இப்படி ஒவ்வொரு தொழிலுக்கும் அந்த தொழிலுக்கான தர்மம் என்று ஒன்று உண்டாம்.
இப்படி ஒவ்வொரு தொழிலுக்கும் அதன் தொழில் தர்மம் என்று ஒன்றை கூறினாலும் அது தர்மத்துடன் ஒத்துப் போகிறதா என்று பார்க்க வேண்டும். சமீபத்தில் "கோ" படம் பார்த்தேன் . அது பத்திரிகை உலகை பற்றி கூறுவதாக இருக்கும். அந்த படத்தில் நக்சலைட்டாக வரும் போஸ் வெங்கட் , ஜீவாவை பார்த்து கூறுவதாக வரும் ஒரு வசனம் அழுத்தமாக இருக்கும். அவர் இப்படி கூறுவார் , "நீ பத்திரிகைகாரன்தானடா, செத்த பொணத்த எழுப்பி கூட நீ செய்தி வாங்கிருவ " என்பார். ஆனால் அந்த படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த படத்தில் ஜீவாவும், கார்த்திகாவும் தாங்கள் பத்திரிகை தர்மத்தின்படி நடக்கவில்லை என்பதால் தாங்கள் தங்கள் வேலையை ராசினாமா செய்கிறோம் என்பார்கள் . ஆனால் அதை ஏற்க மறுக்கும் அந்த பத்திரிகை ஆசிரியர் நீங்கள் பத்திரிகை தர்மத்தை மீறினாலும் நீங்கள் நாட்டிற்கு நல்லதுதான் செய்துள்ளீர்கள் அதனால் தங்கள் ராசினாமை ஏற்க மாட்டேன் என்பார். அந்த இடம் எனக்கு பிடித்திருந்தது. உண்மையான தர்மத்திற்கு முன் தொழில் தர்மங்கள் என்று கூறப்படும் மற்ற தர்மங்கள் முக்கியமில்லை.

என்னைப் பொறுத்தவரை தர்மம் ஒன்றுதான். இப்படி பத்திரிகை தர்மம் , போர் தர்மம் என்று தனியாக எதுவும் இல்லை. உண்மையான தர்மத்திற்கு முன் மற்ற எதுவுமே முக்கியமில்லை.
சிறிது காலத்திற்கு முன் என்னுடன் வேலை பார்த்த அலுவலர் ஒருவர் சென்னையில் பைக்கில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அவருக்கு முன் சென்ற பைக்கில் ஒரு கணவனும், மனைவியும் அமர்ந்திருக்க்கிறார்கள். அப்பொழுது திடீரென அந்த பைக் விபத்துக்குள்ளாகி அந்த கணவர் தூக்கி வீசப்பட்டு ஒரு பெரிய குழியில் வீசப்பட்டிருக்கிறார். யாருமே அந்த நபரை இறங்கி தூக்கவில்லை. உடனே இந்த நண்பர் அந்த குழிக்குள் இறங்கி அவரை தூக்கி இருக்கிறார். பார்த்தால் தலையில் மிகப் பெரிய அடிபட்டு ரத்தம் கொட்டுகிறது. அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். சுற்றி கூட்டம் . ஒருவரும் உதவிக்கு வரவில்லை. அப்பொழுது அங்கு வந்த தமிழ்நாட்டின் மிகப் பிரபலமான ஆங்கில பத்திரிக்கையின் நிருபர் ஒருவர் இந்த நண்பரை பார்த்து, "சார், தலையை கொஞ்சம் இப்படி திருப்பி பிடிங்க சார்" என்றிருக்கிறார். அவருக்கு பத்திரிக்கைக்கு புகைப்படம் எடுக்க வேண்டுமாம். அடிபட்டவரின் முகம் தெரியவில்லையாம். என்ன கொடுமை ? . இப்படியும் மனித ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் . கேட்டால் அது அவர்களின் தொழில், கேட்டால் தொழில் தர்மம். எவ்வளவு கேவலம். இப்படித்தான் அந்த தொழில் தர்மத்தை காப்பாற்ற வேண்டுமா? .
இதே போன்றவர்கலாள்தானே இங்கிலாந்து இளவரசி டயானா உயிரிழந்தார். அப்படிதான் பணம் சம்பாதிக்கவும், தொழில் தர்மத்தை காப்பாற்றவும் வேண்டுமா? .

உலகப் புகைப்படங்களில் ஒரு புகைப்படத்திற்கு முக்கிய இடம் உண்டு. அது ஆப்பிரிக்காவில் ஒரு சிறுவன் பசிக்கொடுமையால் போராடிக்கொண்டிருப்பான். அவனுக்கு அருகில் ஒரு பிணம் தின்னிக் கழுகு அவனை சாப்பிடுவதற்காக அவன் இறப்பதற்காக காத்திருக்கும். பிணம் தின்னி கழுகுக்கு ஒரு பழக்கம் உண்டு. அது உயிரோடு இருக்கும் தன் இரையை சாப்பிடாது. தன் இரை இறக்கும் வரை அதன் அருகிலேயே காத்திருக்கும். தன் இரையின் இறப்பு நெருங்க நெருங்க அதை நெருங்கி வரும். இந்த புகைப்படம் உலகில் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் அது ஆப்பிரிக்க கண்டத்தின் வறுமையை எடுத்துரைத்தாலும், ஒரு மனிதனுக்கான தர்மத்தையும் எடுத்துரைத்தது. அப்புகைப்படத்திற்கு உலகின் மிக பெரிய விருதான புலிட்சர் விருது கிடைத்தது. அதே சமயத்தில் அந்த புகைப்பட நிருபர் பற்றி மிகப் பெரிய கண்டனம் உலகெங்கும் எழுப்பியது. அந்த புகைப்பட நிருபர் அந்த பிணம் தின்னி கழுகைப் போல் அந்த சிறுவனுக்கு அருகில் அந்த புகைப்படத்திற்காக காத்திருந்தார் என்று உலகெங்கும் கண்டனம் எழும்பியது. அந்த புகைப்படம் எடுத்த பின் அந்த புகைப்பட நிருபர் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார். அதற்கு பிறகு அந்த சிறுவனுக்கு என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது. அந்த புலிட்சர் பரிசு கிடைத்த சிறிது நாட்களில் அந்த நிருபர் மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்.
பிறர் துன்பத்தில் பொருளும் புகழும் பெறுவது எவ்வளவு மோசமானது.
சில காலங்களுக்கு முன் ஒரு தமிழக புகைப்படக்காரரின் பேட்டி ஒன்றைப் படித்தேன் . அவர் உலக அளவில் மிகப் புகழ் வாய்ந்தவர். உலகம் முழுவதும் சுற்றி அரிய புகைப்படங்களை எடுப்பவர். அப்படி ஒரு சமயம் அவர் உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டிற்கு சென்ற போது , ஒரு சிறுமி நிர்வாணமாக வந்துள்ளாள். அவள் தன்னை பலர் சேர்ந்து கற்பழித்ததாகவும் , தன்னை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறாள். அவளுக்கு வேண்டிய உதவியை அந்த நிருபர் செய்துள்ளார். ஏனோ அந்த சிறுமியை அந்த நிலையில் புகைப்படம் எடுக்க அவருக்கு தோன்றவில்லை. இதை பற்றி அவருடைய நண்பரிடம் கூறியபோது அவர் நண்பர் நீ பத்திரிகை தர்மத்தை மீறிவிட்டாய். அவளை அந்த நிலையில் புகைப்படம் எடுத்திருக்கவேண்டும், நீ உலகப் புகழ் பெற்றிருப்பாய் என்றிருக்கிறார். ஆனால் அதற்கு அந்த புகைப்பட நிருபர் அந்த சிறுமியின் நிலையை எனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என்றிருக்கிறார்.

மேற்கூறியவற்றில் எது தர்மம் என்பது உங்களுக்கே புரியும்.

Monday, July 18, 2011

"தம்பி, நான் போலீசு "

நான் அன்று சிக்னலில் பைக்கில் நின்றுகொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர் இன்னொரு பைக்கின் பில்லியனிலிருந்து முணுமுணுத்தவாரே இறங்கி என்னிடம் வந்தார் .

"தம்பி, நான் போலீசு "

"என்னை அங்கன இறக்கிவிட்டுருங்க" என்றவரே பில்லியனில் உட்கார்ந்தார்.

அதற்கு நான் "சார், நீங்க போலீசா இல்லனாலும் lift கொடுப்பேன்" .

அதற்கு அவர் "இல்ல தம்பி போலீசுனு சொல்லிக்கிடனும்ல " .

சிறிது நேரம் சும்மா இருந்தவர் "தம்பி, இப்படி கூடி போயி சிக்னல cross பண்ணி போங்க" என்றார்.

அதற்கு நான் , தம்பி டீ இன்னும் வரல என்னும் டோனில் "சார், சிக்னல் இன்னும் போடல" என்றேன்.

சற்று கடுப்பான அவர் வண்டியிலிருந்து இறங்கிச் சென்றார்.

கொஞ்ச தூரத்துல ஒரு பைக்காரன் அருகில் ஒரு குரல் "தம்பி, நான் போலீசு ..." :)

Friday, July 1, 2011

இந்தியாவும் சீனாவும் பிரம்மபுத்ரா நதியும்


சீனா பிரம்மபுத்ரா நதியின் மீது அணை கட்டி வருகிறது. இந்த அணை கட்டுவது சில வருடங்களுக்கு முன் தொடங்கிய போதே இந்தியாவில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது. அப்பொழுது மத்திய அரசு இந்த அணை திபெத் மின் தேவைக்காகவே கட்டப்பட்டு வருகிறது, பாசனத்திற்காக அல்ல. அதனால் இந்தியாவிற்கு வரும் பிரம்மபுத்ரா நதியின் நீரின் அளவில் மாற்றம் இருக்காது என்று மழுப்பியது. இப்பொழுது சீனா பிரம்மபுத்ரா நதியின் நீரை தன்னுடைய வறண்ட வட மேற்கு மாகாணங்களுக்கு திருப்பி விட ஆயத்தமாகிறது. அப்படி செய்தால் சத்தியமாக இந்தியாவிற்கு வரும் பிரம்மபுத்ரா நதியின் நீரின் அளவு நிச்சயம் குறையும். இது இந்தியாவிற்கு ஆபத்தானது .

இன்று உலகில் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று குடிநீர் தட்டுப்பாடு. பல தகவல்கள் இனிமேல் உலகில் மூன்றாவது உலகப் போர் வந்தால் அது நீருக்காகத்தான் வரும் என்கிறது. அவ்வளவு முக்கியமானது நீர் இன்று இந்த உலகில் .


கங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா மூன்று நதிகளும் இணைந்து வங்கக் கடலில் கொண்டு சேர்க்கும் நீரானது உலகில் அமேசான் ஆறு கடலில் கொண்டு சேர்க்கும் நீருக்கு அடுத்து அதிகம் . உலகில் எந்த நதிகளும் அமேசானுக்கு அடுத்து இவ்வளவு நீரை கடலில் கொண்டு சேர்பதில்லை . சொல்லப் போனால் அமேசான் ஆற்றில் இருக்கும் நீரானது நேரடியாக மனித குலத்தால் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை . அது பெரும்பாலும் அடர்ந்த அமேசான் காடுகளுக்கிடையேயே ஓடுகிறது . ஆனால் கங்கை - பிரம்மபுத்ரா - மேக்னா ஆறுகள் இணைந்து உருவாக்கும் டெல்டாவானது உலகிலேயே மிகப் பெரிய டெல்டாவாகும் . மேலும் உலகிலேயே Arable land எனப்படும் விவசாயத்திற்கு பயன்படும் தரிசு இல்லாத நிலம் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக இந்தியாவில் தான் அதிகம் . மொத்த விவசாய நிலம் அமெரிக்காவில் 16,69,302 சகிமீ இந்தியாவில் 15,35,060 சகிமீ (அதிலும் அமெரிக்கா இந்தியாவைப் போல மூன்று மடங்கு பெரியது . சொல்லப்போனால் உலகிலேயே 7 வது மிகப் பெரிய நாடாக இருக்கும் இந்தியாவின் பரப்பானது இதற்கு முன் 6 ஆவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவை விட கிட்டத்தட்ட இரண்டரையில் ஒரு பங்குதான் :( ). இப்படி ஆயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களும் இந்தியாவை ஆண்ட அரசர்களும் பல ஏரிகளையும் , குளங்களையும் , கால்வாய்களையும் வெட்டி இந்த புண்ணிய பூமியை வளமிக்கதாக மாறினார்கள் . ஆனால் அதற்கு பின் வந்த மத்திய மாநில அரசுகளோ இந்த ஏரிகளையும் , குளங்களையும் , கால்வாய்களையும் பராமரிக்காமல் விட்டு இந்த நிலங்களை பாழ்படுத்தியதோடல்லாமல் இப்பொழுது இயல்பாக ஓடும் நதிகளின் நீரையும் பாதுகாக்காமல் உள்ளது வேதனை .


உலகில் மிக அதிக விவசாயிகளை கொண்ட நாடாகவும் அதிலும் நாட்டு மக்களில் 60% மேல் விவசாயத்தை நம்பி இருக்கும் நாட்டில் நீரானது எவ்வளவு முக்கியம் . அந்த வாழ்வாதார நீரில் கூட இந்திய அரசு இவ்வளவு அலட்சியம் காட்டுவது மிகப் பெரிய கொடுமை .

சீனா பிரம்மபுத்ரா நதியின் நீரை வட மேற்கு மாகாணங்களுக்கு திருப்பி விடுவதை பற்றி கேட்டபோது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திருவாளர் S.M. கிருஷ்ணா அப்படி இல்லவே இல்லை என்றார் . பின் சீனாவின் அணையால் இந்தியாவிற்கு "உடனடியாக" பாதிப்பில்லை என்றார். ஆனால் இந்திய உளவுத்துறையான ரா (RA&W) தயாரித்த அறிக்கை சீனாவின் அணை இந்தியாவை நிச்சயம் பாதிக்கும் என்கிறது. இந்த விவகாரம் வெடித்த அடுத்த வாரத்தில் அவர் ஷாங்காய் சென்றார் . சீனாவின் இந்த நடவடிக்கை பற்றி அங்கு விவாதிகப்படுமா என்று கேட்டதற்கு அப்படி இல்லை என்றார் . இதை விட வேறு முக்கியமாக எதை பற்றி அவர் விவாதிக்க சென்றார் என்று தெரியவில்லை . இந்த விவகாரத்தை பற்றி இந்திய அரசு வேறு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை at least ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை . எப்பொழுதும் போல் நம் பாரதப் பிரதமர் மௌன விரதம் கடைபிடிக்கிறார். சீனாவும் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை


உண்மையில் இந்திய அரசு (மக்கள் அல்ல) கங்கை , பிரம்மபுத்ரா நதிகளை கொஞ்சம் கூட பயன்படுதிக்கொள்ளவில்லை . கங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா ஆறுகள் மூலமாக 2,00,000 - 2,50,000 MW மின்சாரம் தயாரிக்க முடியும். குறைந்தபட்சம் அதில் பாதியாவது எளிதாக தயாரிக்க முடியும். ஆனால் 1999 கணக்கின்படி கங்கை நதியின் மூலம் தயாரிக்க முடிகிற மின்சாரத்தில் 12% தான் இந்தியா கங்கை நதி மூலம் தயாரிக்கிறது . இது பிரம்மபுத்ரா நதியின் விசயத்தில் இன்னும் மோசம் . ஏனென்றால் பிரமபுத்ரா நதியின் மூலம் தயாரிக்க முடிகிற மின்சாரத்தில் வெறும் 1% தான் இந்தியா அந்த நதி மூலம் தயாரிக்கிறது . 2010 December கணக்கின்படி இந்தியாவில் தயாரிக்கப்படும் மொத்த மின்சாரமே 1,65,000 MW தான் என்றால் கங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா ஆறுகளின் ஆற்றல் உங்களுக்குப் புரியும் . பிரம்மபுத்ரா நதியின் ஆற்றலை சீனா உணர்ந்ததாலேயே அது அதன் மீது அணை கட்டுகிறது . அதன் மூலம் அது மொத்த திபெத்திற்கும் மின்சாரம் வழங்க எண்ணியுள்ளது . இதே விஷயத்தை இந்தியா செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்

ஆனால் இதே நேரத்தில் பாகிஸ்தான் ஏதாவது செய்தால் உடனே மிகப் பெரிய கண்டனம் மிகப் பெரிய கத்தல். ஏனென்றால் at least பாகிஸ்தானிடம் மட்டும்தான் நாம் கத்தனாவது முடியும். ஆனால் சீனா சத்தம் இல்லாமல் செய்யும் எந்த விசயத்தையும் இவர்களால் கண்டிக்க கூட முடியவில்லை . ஏனென்றால் உண்மையில் இவர்களுக்கு சீனாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏன் கண்டனம் தெரிவிக்க கூட தைரியம் இல்லை .

Photo Courtesies :

1.http://static.indianexpress.com/m-images/Thu%20Oct%2015%202009,%2014:56%20hrs/M_Id_114567_china.jpg
2.http://www.indianexpress.com/news/china-begins-building-dam-on-its-side-of-the/529244/
3.http://www.treehugger.com/brahmaputra-river-tibet.jpg
4.http://www.travelingbeats.com/images/brahmaputra1.jpg
5.http://www.pilgrimageindia.net/holy_rivers/images/brahmaputra.jpg

Tuesday, June 28, 2011

இந்தியாவும் ஊழலும்


இன்று இந்தியாவில் T.V இல் அதிகமாக காட்டப்படுவோர் அன்னா கசாரேயும் பாபா ராம்தேவும்தான். இவர்கள் இவ்வளவு popular பெறக்காரணம் ஊழலுக்கு எதிரான எதிர்ப்புதான் . இவர்களுக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கிறதென்றால் மக்கள் எந்த அளவிற்கு இந்த ஊழலால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். மக்கள் எந்த அளவு ஊழலை வெறுத்திருப்பார்கள். ஆனால் இந்த காங்கிரஸ் அரசோ அதை பற்றி கொஞ்சமும் சட்டை செய்யாமல் அந்த ஊழலை எதிர்பவர்களை மோசமான வார்த்தைகளால் அர்சிக்கிறது. அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை மக்கள் ஊழலை பெரிதாக எண்ணமாட்டார்கள் என்ற எண்ணம்.

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன் திமுகவிற்கு 2G பற்றி பாமர மக்களுக்கு என்ன தெரியும்? , எப்படியும் 400, 500 ரூபாய் கொடுத்துவிட்டால் ஓட்டு போட்டுவிடுவார்கள் என்ற எண்ணம் இருந்தது. மேலும் பல இலவசங்களையும், வீட்டையும் கொடுத்துவிட்டால் யார் ஊழலை பற்றி கவலைப்படப்போகிறார்கள் என்று எண்ணியது. அதன் தலைவர்களும் 2G ஊழல் தேர்தலில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தாது என்று மிக நம்பினர். தேர்தல் நெருங்க நெருங்க திமுகவிற்கு சாதகமாக வந்த தேர்தல் கணிப்புகளும் மக்கள் ஊழலை பெரிதாக எண்ண மாட்டார்கள் என்றே கூறின. ஆனால் எவருமே எதிர்பார்க்காத அளவிற்கு 70% வாக்குப் பதிவும் அதன் பின் திமுகவின் படு தோல்வியும் மக்கள் எந்த அளவிற்கு ஊழல் எதிர்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை கூறியது. இத்தனைக்கும் இரண்டு அணிகளிலும் இருந்து கட்சிகளின் வாக்குகளின் அடிப்படையில் இரண்டு அணிகளுக்குமிடையேயான வாக்கு வித்தியாசம் மிக குறைவாகவே இருந்தன. ஆனால் தேர்தல் முடிவில் கிடைத்த படுதோல்வி மக்கள் எந்த அளவிற்கு ஊழலை வெறுக்கிறார்கள் என்பதை காட்டியது. அதனால்தான் திமுகவிற்கு துணையாக இருந்த அனைத்து கட்சிகளுக்கும் அடி விழுந்தது. தப்பு செய்தவன் கூட இருப்பதும் தப்புதான் என்பதை மக்கள் புரிய வைத்தார்கள். இது சென்ற பொதுத் தேர்தலில் நல்ல வாக்கு வாங்கிய கொமுகவும் சேர்த்து அடிவாங்கியது. இது மக்களுக்கு சாதி அரசியல், இலவசங்கள் அனைத்தையும் தாண்டி ஊழல் எதிர்ப்பு எவ்வளவு முக்கியம் என்பதை காட்டியது. இதை அரசியல்வாதிகளும், ஊடகங்களும் புரிந்து கொள்ளவில்லை.

தேர்தலுக்கு முன் திமுக தலைவர் ஊழலை எதிர்த்த, ஊழல் பற்றி எழுதியவர்களுக்கு எல்லாம் ஆரிய சாயம் பூசினார். தன் கருத்திற்கு திராவிட இன, மொழி, தலித் ஆதரவை கோரினார். அன்று திமுக செய்த அதே தவறை இன்று காங்கிரஸ் செய்கிறது. ஊழலை எதிர்க்கும் ராம்தேவிற்கு இந்து, RSS சாயம் பூசுகிறது. அன்னா கசாரே காங்கிரஸ்காரராக இருந்ததால் அவருக்கு RSS சாயம் பூசமுடியாமல் அவரை சர்வாதிகாரி என்றது. எனக்கு ஒன்று புரியவில்லை. ஊழலை இந்துக்களும் , RSS காரர்களும் எதிர்க்க கூடாதா?. பிரச்சினையை பற்றி பேசாமல் பிரச்சினையை பற்றி பேசுபவர்களை எதிர்கிறது.

வாய் கூசாமல் ஊழலை எதிர்பவர்களை எதிர்க்க தனி மனித துவேசம் செய்கிறது. இவர்கள் செய்வதைப் பார்த்தால் ஊழலை எதிர்ப்பதையே மிகப் பெரிய குற்றம் என்பதை போல் உருவகம் செய்கிறார்கள். ஒரு காலத்தில் ஊழல் செய்வதும், லஞ்சம் வாங்குவதும் மிக கேவலமாக எண்ணப்பட்டது. அப்படி லஞ்சம் கேட்பவர்களும், ஊழல் செய்பவர்களும் கூனி குறுகி செய்தார்கள். ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. ஊழல் செய்பவர்களும், லஞ்சம் வாங்குபவர்களும் தான் செய்வதை குற்றம் என்ற ஒரு குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல் மிக இயல்பாக நடமாடுகிறார்கள்.

தேர்தலுக்கு முன் அன்றைய ஆளுங்கட்சியின் ஆதரவு T.V யில் அதன் தலைவரின் அறிக்கை " என்னவோ எல்லாரும் ஒரு லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் கோடி ரூபாயை ஒருவரே சட்டைப் பையில் கொண்டு போய் விட்டது போல் பேசுகிறார்கள். அதுவும் அந்த பொது கணக்கு குழுவின் ஒரு அறிக்கைதான் ஒரு லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் கோடி ரூபாய் இழப்பு என்று கூறுகிறது மற்றொரு அறிக்கை வெறும் முப்பதாயிரம் கோடி ரூபாய் இழப்புதான் என்று கூறுகிறது" என்றார். அதாவது ஒரு நாளைக்கு ஒரு அமெரிக்கன் டாலர் (அதாவது 45 ரூபாய். ஒரு நாளைக்கு ஒரு அமெரிக்கன் டாலர் கூட சம்பாதிக்க முடியாதவர்கள் ஏழைகள் என்பது உலக அளவுகோல்) கூட சம்பாதிக்க முடியாமல் கிட்டத்தட்ட 40 கோடி பேர் இருக்கும் இந்த நாட்டில் முப்பாயிரம் கோடி ரூபாய் என்பது வெறும் முப்பதாயிரம் கோடி என்றாகிவிட்டது . என்ன கொடுமை இது . மக்களை இவ்வளவு கேவலமாக நினைத்தது தான் இந்த தேர்தல் இழப்பிற்கு காரணம்.

ஒவ்வொரு அரசாங்க ஊழியருடைய பணியை பற்றி குறிப்பிட்ட காலகட்டத்திற்கு இடைவிலும், அவர் ஓய்வு பெறுவதற்கு முன் அவருடைய பணி காலம் முழுவதுக்குமான ஆய்வு நடக்கும் . அந்த ஆய்வில் அவரால் ஏதாவது அரசாங்கத்துக்கு இழப்பு என்றால் அந்த பணம் அவருடைய வருமானத்திலிருந்தும், அவருடைய பென்சனிலிருந்தும் பிடித்தம் செய்யப்படும். ஒரு சாதாரண அரசாங்க ஊழியருக்கே இப்படி என்றால் ஒரு அமைச்சராக இருப்பவருக்கு எப்படி இருக்க வேண்டும். ஆனால் ராசாவிற்கு பிறகு அமைச்சரான கபில் சிபல் 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் அரசாங்கத்துக்கு எந்த ஒரு இழப்பும் இல்லை என்றார். அதாவது அவர்களுடைய அரசாங்கத்தின் ஒரு அங்கமான பொது கணக்கு குழுவின் ஆய்வறிக்கையை அவரே நிராகரிக்கிறார். என்ன செயல் இது? .

காங்கிரஸ் , தமிழகத்தில் திமுக செய்த அதே தவறை இந்திய அளவில் செய்கிறது. தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அடக்கி ஒடுக்குகிறது. இதே பாசிச எண்ணம்தான் ராம்தேவின் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்தில் நள்ளிரவில் தடி அடி நடத்தி கலைக்கும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது. (This article does not discuss about whether Ramdev is good or not) . அந்த நள்ளிரவில் செய்த நடவடிக்கை சரிதான் என்று பாரத பிரதமரே சொல்கிறார். இதற்கும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கும் என்ன வித்தியாசம். அன்று ஜனநாயகமும், தேர்தலும் இல்லாததால் துப்பாக்கிகள் முழங்கின. இன்று பேருக்கு என்றாவது ஜனநாயகமும் ஐந்து வருடங்களுக்கு தேர்தலும் இருப்பதால் சற்று அடைக்கி வாசித்து தடி அடியும் , கண்ணீர் புகை குண்டும் வீசுகின்றனர். அதுதான் வித்தியாசம்.

இதைவிட கொடுமை நேற்று மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறுகிறார், "உண்ணாவிரதத்தால் ஒன்றும் சாதிக்க முடியாது". நவீன உலக அரசியலில் உண்ணா விரதத்தை கற்றுத்தந்ததே காந்திதானே (நான் கூறுவது மகாத்மா காந்தி பற்றி . என்ன கொடுமை இங்கு காந்தியவே , மகாத்மா காந்தி என்று சொன்னால்தான் அனைவருக்கும் புரிகிறது. இல்லை என்றால் வேறு காந்தியைப் பற்றி எண்ணிக் கொள்கின்றனர் :( ). அந்த மகாத்மா காந்தி காங்கிரஸ்காரர்தானே. அந்த காந்தி இதே அகிம்சா கொள்கையை வைத்து தானே சுதந்திரம் வாங்கி கொடுத்தார். என்ன பண்ண இன்றைய காங்கிரஸ் மகாத்மா காந்திக்கு ரூபாய் நோட்டில் மட்டும்தான் இடம் கொடுக்கிறது. அதனுடைய கொள்கையிலிருந்து காந்தியை என்றோ தூக்கி எறிந்துவிட்டது.

இன்னொரு கொடுமை, 2G ஸ்பெக்ட்ரம் வழக்கு உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடப்பதால் இதில் காங்கிரஸ் ஒன்றும் செய்ய முடியாது, இதை கருணாநிதியும் புரிந்து கொண்டுள்ளார் என்று காங்கிரசார் பேசி வருகின்றனர். அப்படி என்றால் என்ன அர்த்தம் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பு இல்லை என்றால் இவ்விசயத்தில் காங்கிரஸ் தலையிடும் என்றுதானே அர்த்தம். என்ன ஒரு அப்பட்டமான பேச்சு. இதை கூசாமல் வேறு பேசுகின்றனர். இந்த நாட்டை அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.

இப்பொழுது 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் தயாநிதியின் பெயரும் அடிபடுகிறது. இதை பற்றி கேட்டால் பிரதமர், தான் இந்த விசயத்தில் இருந்து விலகி இருப்பதாக கூறுகிறார். என்னவோ தயாநிதி யாரோ எவரோ என்பது போலவும் , தனக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை என்பது போலவும் , ஏன் இந்தியாவிற்கும் தனக்குமே சம்பந்தம் இல்லை என்பது போலவும் பிரதமர் பேசுகிறார். இதேதான் முன்னாள் அமைச்சர் ராசா விசயத்திலும் நடந்ததது. 2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றி ராசா உங்களுக்கு கடிதம் எழுதினாரா. ஆமாம். அதன் மீது நடவடிக்கை என்ன. மௌனம். நமக்கு இப்படி ஒரு பிரதமர் :(

முன்னாள் இந்திய பிரதமரான தேவ கௌடாவின் மகனும் , முன்னாள் கர்நாடக முதல்வருமான குமாரசாமி ஊழல் இல்லாமல் ஆட்சி செய்ய முடியாது என்று கூறும் அளவிற்கு ஊழலுக்கு இன்று ஒரு அங்கீகாரம் கிடைத்துவிட்டது. ஊழலுக்கு மக்கள் எவ்வளவு அடி கொடுத்தாலும் ஊழல்வாதிகள் திருந்துவதில்லை.

ஆனால் என்னைப் பொறுத்தவரை ஊழலுக்கு எதிராக மக்கள் இன்னும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . அதற்கு வீதியில் இறங்கி போராடவேண்டும் என்ற தேவை எல்லாம் இல்லை. ஊழல்வாதிகளையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் சீண்டாமல், மதிக்காமல், அவர்களுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ளாமல், அவர்களுக்கு கீழ் படியாமல் அவர்களை வாழ்நாள் முழுவதும் சமுதாய அனாதைகள் ஆக்கிவிடவேண்டும். இதற்கு நாம் எந்த அரசியல்வாதியையும் எதிர்பார்க்க வேண்டாம். இதற்கு நாம் எந்த அரசின் நடவடிக்கையையும் எதிர்பார்க்க வேண்டாம்.

Photo Courtesy :

http://thrusha.com/modules/upload/attachments/alarming-level-of-corruption-in-india2.jpg

Friday, June 24, 2011

You too Sachin?


கொஞ்ச நாளுக்கு முன்னாடி சச்சின் டெண்டுல்கர் வருமான வரித்துறையிடம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கு வருமான வரி சட்டத்தின் Section 80RR இன் கீழ் வருமான வரி விலக்கு தரவேண்டும் என்று கேட்டிருந்தார். அந்த அதிகாரி சச்சினை பற்றியும் அவருடைய தொழிலைப் (Profession) பற்றியும் விளக்குமாறு கேட்டிருந்தார். அதற்கு நம் சச்சின் தன்னுடைய தொழில் நடிப்பு என்றும் தான் ஒரு விளம்பர மாடல் என்று குறிப்பிட்டு இருந்தார் . மேலும் நடிப்பு மூலம் வரும் வருமானத்தை "business and profession" மூலம் வரும் வருமானம் என்றும் , கிரிக்கெட் மூலம் வரும் வருமானம் "income from other sources" என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதன் மூலம் தான் ஒரு non-professional கிரிக்கெட்டர் என்றும் அதனால் தனக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.அதற்கு அந்த அதிகாரி Sachin Tendulkar யே Professional Cricketer இல்லையென்றால் பின் யார்தான் இந்த உலகத்தில் Professional Cricketer ஆக இருக்க முடியும் என்று திரும்பி கேட்டு இருக்கிறார்.

உடனடியாக சச்சினின் வாதத்தை ஏற்க மறுத்த அந்த அதிகாரி இந்த விளம்பர கம்பனிகள் சச்சின் டெண்டுல்கர் ஒரு Professional Cricketer என்பதாலையே அவரை தங்கள் விளம்பரங்களில் நடிக்க அழைக்கின்றன. மேலும் இவர் நடிக்கும் விளம்பரங்கள் அனைத்தும் சச்சின் டெண்டுல்கர் ஒரு கிரிக்கெட்டர் என்பதையே பிரதிபலிக்கின்றன. இந்த விளம்பர கம்பனிகள் அனைத்தும் சச்சின் டெண்டுல்கர் ஒரு Cricket Legend என்பதாலையே ஒப்பந்தம் செய்கின்றன (It is important to note that the company that wants Tendulkar to endorse its brand uses him because he is Sachin Tendulkar, the cricketing legend) என்றார். இதை சச்சின் ஏற்கவில்லை.

எனக்கு ஒன்று புரியவில்லை. கிரிக்கெட்டில் 70 உக்கும் மேற்பட்ட உலக சாதனைகள் பண்ணி இருக்கும் சச்சின் டெண்டுல்கரே ஒரு Professional Cricketer இல்லைனா வேறு யாருதான் இந்த அகில அண்ட சராசரத்துல Professional Cricketer ? . இதை சச்சின் தான் விளக்க வேண்டும். At least Professional Cricketer னா அதற்கு அர்த்தம் என்னனாவது விளக்க வேண்டும்.

இப்படி, தான் ஒரு non-professional cricketer என்றும் தன்னுடைய தொழில் நடிப்பு என்றும் கூறியதன் மூலம் சச்சின் பெறப்போகும் ஆதாயம் Rs 5,92,31,211 ல Rs 2,08,59,707 . இந்த ரெண்டு கோடி ரூபாய்க்காக சச்சின் தன்னை ஒரு நடிகர் என்றும் , நடிப்புதான் தன்னுடைய தொழில் என்றும் , தான் ஒரு non-professional cricketer தான் என்றும் கூறுவது யாரால் ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரியவில்லை.

ஏன் சச்சின் சில கோடி ரூபாய்களுக்காக தான் இத்தனை நாள் கட்டி வளர்த்த பெயரையும், இந்த நாட்டு மக்கள் அவர் மேல் வைத்திருக்கும் பாசத்தையும் , மரியாதையையும் , ஏன் இந்த உலகம் முழுவதுமே சச்சினைதான் கிரிக்கெட்டின் வழிகாட்டியாக எண்ணும் அவருடைய கோடானுகோடி ரசிகர்களை இப்படி ஏமாற்றுகிறார்?. காசுக்காக அலையும் , பல பித்தலாட்டங்களை செய்யும் அரசியல்வாதிகளைப் பார்த்து ஏமாற்றமடைந்திருக்கும் இந்த நாட்டு மக்களுக்கு சச்சினின் இந்த செயல் நிச்சயம் மிகப் பெரிய அதிர்ச்சிதான்.

இந்த உலகின் இதுவரை இருந்த கிரிக்கெட்டர்களில் மிகச் சிறந்தவர் யார் பிராட்மேனா? ரிச்சர்ட்சா ? சோபர்ஸா? சச்சினா? என்று உலகம் முழுதும் விவாதித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் சச்சின் நான் criketer இல்லை தான் ஒரு நடிகர்தான் என்று தானே கூறுவது என்னைப் போன்ற அவருடைய கோடானு கோடி ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி தருகிறது . இப்படிதான் சச்சின் சில கோடிகளுக்காக தன்னை வளர்த்த கிரிக்கெட்டையும், தன்னை மிகச் சிறந்த கிரிக்கெட்டர் என்றும் போற்றும் கோடானு கோடி ரசிகர்களையும் ஏமாற்றுவதா? . இது " If Cricket is religion , Sachin is god" ங்குர ரசிகர்களின் முகத்தில் கரியைப் பூசுவது போல் இல்லையா ?


26/11 மும்பை தாக்குதலுக்கு பின் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்டில் தான் சதம் எடுத்த பின், இந்த சதத்தால் புண்பட்டிருக்கும் என் நாட்டு மக்கள் சிறிது சந்தோசப்பட்டாலே அதை என் வாழ்வின் மிகப் பெரிய பாக்கியமாக கருதுவேன் என்று கூறிய அந்த சச்சின் எங்கே? இல்லை சில கோடி பணத்திற்காக தான் கிரிக்கெட்டரே அல்ல தான் ஒரு நடிகர் என்று கூறும் சச்சின் எங்கே?

சச்சின் இதே போன்ற ஒரு தவறை முன்பும் செய்தார். Fiat கார் நிறுவனத்தால் பரிசாக கொடுக்கப்பட்ட Ferrari காருக்கு வரி விலக்கு கேட்டு மிகுந்த சர்ச்சையில் சிக்கினார். அப்பொழுதும் இதே போன்ற கண்டனத்திற்கு உள்ளானார். ஆனால் தற்பொழுது வரி விலக்கிற்காக தன்னை ஒரு நடிகர்தான் என்று கூறிக்கொள்வது அதை விட மோசம்.

சச்சின் டெண்டுல்கர் எப்பொழுது விளையாடும் போது இந்தியாவைத்தான் முன்னிருத்துவார். அப்படிப்பட்ட சச்சின் இந்த மாதிரி செய்தது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை. At least சச்சின் இப்படி வரி விலக்கு மூலம் பெற்ற பணத்தை ஏதாவது ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு அளிப்பதுதான் அவருடைய புகழுக்கு வளம் சேர்க்கும். இல்லையேல் Sachin மக்களால் வெறுக்கப்படும் அரசியல்வாதிகளுக்கு இணையாகதான் பார்க்கப்படுவார். வேண்டாம் சச்சின்.

P.S:
1: தன்னுடைய முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன், வருமான வரித்துறை tribunal ஐ அணுகி வரி விலக்கு பெற்றார் :( .
2: சச்சினின் மிகத் தீவிரமான ரசிகனான என்னையே இப்படி எழுத வைத்தது கொடுமை. Shame on Sachin

Main article ஐ இங்கே படிக்கவும்

http://indiatoday.intoday.in/site/story/actor-sachin-tendulkar-gets-tax-break/1/139537

இவை சச்சினின் சாதனைகள்
http://readerszone.com/people/sachin-tendulkar.html
http://en.wikipedia.org/wiki/ESPN_Legends_of_Cricket
http://www.sachinandcritics.com/sachin_rec.php

Photo Courtesy :
http://www.instablogsimages.com/images/2010/05/07/sachin-tendulkar-poster-in-allahabad_WNGzj_17022.jpg

Saturday, May 7, 2011

My Dear Brother Madu



மது , எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து அவன் என்னை அண்ணேனு ஒரு தடவை கூட கூப்பிட்டதே இல்லை . ஆனா எங்க அம்மா சொல்லுவாங்க சின்ன வயசில் அவன் உன்னை எப்பொழுதுமே அண்ணேன்னுதான் கூப்பிடுவான் . ஒரு நாள் நாங்க அவன்ட உன் பேரு சிவானு சொன்னோம். அன்னில இருந்து அவன் உன்ன அண்ணேன்னு கூப்பிட்டதே இல்ல. அன்னேல இருந்து அவனுக்கு நீ சிவாதான்னு சொன்னாங்க. எங்க சித்தாப்பாலாம் அது என்ன அண்ணன அண்ணனு கூப்பிடாம பேர சொல்லி கூப்பிடுரதும்ப்பாங்க. இத்தனைக்கும் அவனுக்கும் எனக்கும் 2 வயசுதான் வித்தியாசம். எங்க வீட்டில் எங்க அம்மா அப்பா பண்ண மிகச் சிறந்த காரியங்களில் ஒன்று மதுவ என்னை சிவானு கூப்பிடவிட்டதுதான். அதனாலதான் எங்களுக்குள்ள வித்தியாசம் அதிகம் இல்லாம இருந்தது. சின்ன வயசுல எங்கள எல்லாரும் twins ஆனுதான் கேட்பாங்க. அந்த அளவிற்கு எங்களுக்கு உருவ ஒற்றுமையும் இருந்தது , அன்னியோன்யம் இருந்தது. அதற்காக நாங்க அதிகம் சண்டை போட்டதில்லைன்னு நான் பொய்லாம் சொல்லமாட்டேன்.

எப்போதும்போல என்னுடைய குணப்படி என் நெருக்கமான மதுகூடையும் அதிகம் சண்டை போடுவேன். எப்போதும்போல அந்த சண்டைகளுக்கும் நான்தான் காரணமாகவும் இருப்பேன். ஆனா சின்ன வயசுல இருந்து மது ரொம்ப பெருந்தன்மையானவன். எனக்கு அவன்ட்ட ரொம்ப பிடிச்ச குணங்களில் ஒன்று அவன் பெருந்தன்மை. அவன் எதையுமே பெரிதாக அலட்டிக்கொள்ளவேமாட்டான். இந்த குணங்கள் எங்க அப்பாட்ட இருந்து வந்தது. நிச்சயமா சொல்லப்போனா அவனைப் பார்த்து நான் பொறாமைபடும் குணங்கள் அவை. நான் எவ்வளவு சிரமப்பட்டும் என்னிடம் வராத குணங்கள் அவை.

படிப்பிலையும் அவன் ரொம்ப சுட்டி. நானும் நன்றாக படிப்பேன் என்றாலும் , அந்த படிப்பு நான் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டுவருவது. அவனுக்கு படிப்புமே ரொம்ப எளிதாக வரும். அவன் concept ஐ புரிந்துகொள்வதை பார்த்தால் அவ்வளவு அருமையாக இருக்கும். அவன் ஒரு விஷயத்தை படித்துவிட்டு அதை பற்றி சொல்லும்போது எனக்கெல்லாம் பலதடவை தோன்றும் நாமும் இதே புத்தகத்தைதானே படித்தோம், நமக்குப் தோன்றாதது அவனுக்கு மட்டும் எப்படி தோன்றியது என்று. கல்லூரி தேர்வு நாட்களில் என் கல்லூரி நண்பர்கள் , அவன் கல்லூரி நண்பர்கள் மற்றும் நான் உட்பட அனைவரும் அவனிடம் பாடங்களை கதை போல் கேட்டு விட்டு வேறு எதையும் refer பண்ணாமல் மிக எளிதாக தேர்வு எழுதுவோம். அந்த அளவிற்கு அவனால் concept ஐ நன்றாக புரிந்து கொள்வதோடு அதை எளிதாக மற்றவர்களுக்கும் புரியவைக்கவும் முடியும்.அவன் ஒருதடவை படித்ததை மறக்கவே மாட்டான். இந்த திறமையும் எங்களுடைய அப்பாவிடமிருந்தே அவனுக்கு வந்தது.

எனக்கு பலதடவை குழப்பமாக இருக்கும். அவன் hard worker ஆ இல்லையா என்று. சில நேரங்களில் பார்த்தால் ராப்பகலா படிப்பான். சில நேரங்களில் பார்த்தால் தேர்வு நேரத்தில் கூட படிக்காம ஜாலியா இருப்பான். அதே மாதிரிதான் இப்பொழுது அவன் வேலை செய்யும்போதும் நடக்கிறது. ஆனா நிச்சயமா அவன் hard work எல்லாம் பண்ண வேண்டிய தேவையே இல்லாதவன்.

அவனால் எல்லாரையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடிகிறது. அவன் அனைவரையும் அவரவர் குணப்படியே அப்படியே ஏற்றுக்கொள்வான். அதனால் அவனால் அனைவரிடமும் இயல்பாக பழக முடிகிறது. நிச்சயமா என்னால் முடியாத குணங்களில் ஒன்று அது. நான் அவனிடமிருந்து இந்த குணத்தை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்று அதிகம் குழம்பும் விசயங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அவன் செய்யும் அனைத்து செயல்களையும் அவனால் முழுமனதாக செய்ய முடியும். முழுமனதாக ஏற்றுக் கொள்ளாததை அவனால் செய்ய முடியாது. அதேபோல் ஒரு செயலை செய்துவிட்டு இதை ஏன் செய்தோம் என்று அவன் என்றுமே வருத்தப்பட்டதில்லை. அவனைப் பொறுத்தவரை முடிந்து போனதைப் பற்றி கவலைப்படுவதில் பிரயோஜனமில்லை. அவன் செயலில் அவன் தெளிவாக இருப்பான்.
அவனுக்கு humor sense அதிகம். அவன் அதிகமாக எதை பற்றியுமே கவலைப்படாததற்கு இந்த குணமும் காரணம். அவன் அனைத்தையுமே take it easy ஆக எடுத்துக்கொள்வான். அவனால் எந்த ஒரு சூழ்நிலையும் மிக இயல்பாக மாற்ற முடியும்.

எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை சிவா என்றால் ரொம்ப பொறுப்பாளி. மது என்றால் ரொம்ப சுட்டி. ஆனால் அவன் அலுவலகத்தில் அவன் வேலையில் என்றுமே குறைவைத்ததில்லை. அவனை எப்பொழுதுமே அவன் manager களுக்கு ரொம்ப பிடிக்கும். அவன் ரொம்ப techi. அவன் அலுவலகத்தில் காட்டும் அதே அளவு பொறுப்புணர்வை வீட்டில் காட்டும் தேவை வரவில்லை என்று கூறலாம். ஆனால் அவன் எவ்வளவு பொறுப்பாளி, எவ்வளவு திறமையாக குடும்பத்தை கொண்டு செல்ல முடியும் என்பது கடந்த இரண்டு ஆண்டுகளில்தான் எங்கள் குடும்பத்துக்கு தெரிய வந்தது. எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய செயல் அது. எப்போதும் போல் இதையும் அவன் இயல்பாக, எளிதாக எதையும் அலட்டிக்கொள்ளாமல் செய்தான்.

பொதுவா என்னுடைய கல்லூரி நண்பர்களிடம் பேசும்போது நான் மதுட்ட இதை செய்ய சொன்னேன், அதை செய்ய சொன்னேன் என்று எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பேன். அதற்கு அவர்கள் ஆமாம்டா உனக்கு மதுனு ஒருத்தன் கிடச்சான். எல்லாத்துக்கும் அவனையே சொல்லு என்பார்கள். இப்பொழுது நினைக்கும்போது அவர்கள் சொல்லியது உண்மை. எனக்கு எல்லாவற்றிர்க்கும் மதுனு ஒருத்தன் கிடச்சான்.

சின்ன வயதிலிருந்து நான் அவனுக்குப் பண்ணியதைவிட அவன் எனக்கு பண்ணியது அதிகம். என்றைக்குமே அவன் எல்லாவற்றிலும் என்னை support பண்ணி இருக்கான். என்னுடைய உயர்வு தாழ்வு அனைத்திலும் அவன் என்னை support பண்ணி இருக்கான். சின்ன வயதிலிருந்து நான் அவனிடம் சண்டை போட்டாலும் அடுத்த நிமிடமே அவன் என்னிடம் இயல்பாக பேசுவான். என்னால் நிச்சயமாக சொல்லமுடியும் அவனுடனான என்னுடைய அனைத்து சண்டைகளுக்கும் காரணமாக இருந்தது நான்தான். அதையும் அவனால் எப்பொழுதுமே பொறுத்துக் கொள்ள முடிந்தது. என்னுடைய சண்டைகளை மிக இயல்பாக மறந்துவிட முடிந்தது. அவன் ரொம்ப பொறுமைசாலி கூட.

என்னை அதிகமாக விமர்சிப்பவனும் மதுதான், என்னை அதிகமாக ஆதரிப்பவனும் மதுதான்.

மது என்னை எந்த அளவிற்கு விரும்புகிறான், அவன் எந்த அளவிற்கு என் நலனில் அக்கறை கொண்டவன் , அவன் எந்த அளவிற்கு நான் நன்றாக வாழ வேண்டும் என்று நினைப்பவன் , அவன் எந்த அளவிற்கு என்னை support பண்ணுகிறான் என்பது இந்த இரண்டு ஆண்டுகளில் என்னால் மிக நன்றாக உணரமுடிந்தது.

என்னிடம் மதுவின் team lead உம் எனக்கும் மதுவுக்குமான பொது நண்பருமான சுபாஷ் சொன்னதை நான் என்றுமே மறக்கமாட்டேன். சுபாஷ் சொன்னார் "நான் எனக்கு மது மாதிரி ஒரு தம்பி இல்லையேன்னு பல நாள் வருத்தப்பட்டிருக்கேன். உனக்கு அவ்வளவு அருமையான தம்பி கிடச்சுருக்கான். அவன் மனசு கஷ்டப்படுரமாதிரி நடந்துக்காதேனு" சொன்னார். இதே மாதிரி இன்னொருத்தர் என்னிடம் "தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள் , அது போன்று உனக்கு மிக அருமையான தம்பி கிடைச்சுருக்கான்" என்றார்.

ராவணனின் பாதி பலம் அவன் தம்பி கும்பகர்ணனிடமிருந்தே வந்தது. அதே மாதிரி என்னுடைய பாதி பலம் மதுவிடமிருந்தே வருகிறது.

எனக்குத் தெரியும் மது , சமீபகாலமாக நான் உன் மனசு கஷ்டப்படுகிரமாதிரி நடந்து கொள்கிறேன். மது, நான் உன்னிடம் கேட்பது ஒன்றுதான், நான் உன் மனசை கஷ்டப்படுத்துற மாதிரி நடந்துக்கிட்டாலும் நீ என்னை விட்டு என்றும் பிரிந்து விடாதே. மது, எனக்கு நீ என்னைக்குமே வேண்டும்.

You are my brother. I love you my dear brother.

Happy Birthday My Dear Madu. Wish you many more happy returns of the day my dear.

P.S: Today is Madu's birthday .

Wednesday, April 27, 2011

இந்திய அரசின் வல்லரசு கனவு தகுதியானதா ?

இந்தியத் தலைவர்கள் உலக நாடுகளை எல்லாம் சுற்றி வரும்போது மறக்காமல் அந்த நாடுகளிலிருந்து வாங்கி வரும் உறுதி மொழி நாங்கள் இந்தியா ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக ஆதரவு தருவோம் என்பது . ஆனால் இந்திய அரசு உண்மையிலேயே அதற்கு தகுதியானதா. ஒரு உலக வல்லரசோ அல்லது குறைந்தபட்ச பிராந்திய வல்லரசோ எந்த ஒரு முடிவையும் உறுதியாக எடுக்க வேண்டும் . ஆனால் இந்திய அரசு எந்த ஒரு முடிவையும் உறுதியாக எடுத்ததில்லை. இந்திய அரசு எந்த ஒரு விசயத்திலும் முடிவு எடுக்க முடியாமல் திணறுவதும் முக்கியமாக முடிவு எடுக்க பயப்படுவதும் கண்கூடான விஷயம் .

ஒரு வல்லரசு உலக விசயங்களில் தன்னுடைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாக தெரிவிக்க வேண்டும். உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குதான் அமெரிக்கா தான் வல்லரசு என்பதை தெளிவாக தெரிவிக்கிறது. அது செய்வது சரியா தவறா என்பது வேறு விஷயம் . ஆனால் எந்த ஒரு உலக நடவடிக்கையிலும் அது தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்கும். மேலும் தான் எடுத்த நிலைப்பாடு வெற்றி பெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். இந்திய அரசு தான் எடுத்த நிலைப்பாடு வெற்றி பெறக்கூட போராட வேண்டாம் . குறைந்தபட்சம் உலக விசயங்களில் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாகவாவது தெரிவிக்க வேண்டும் .

ஆனால் இந்திய அரசு அப்படி நடந்து கொண்டதில்லை . சிறிது காலத்திற்கு முன்பு நடைபெற்ற எகிப்து புரட்சியின்போது கூட இந்திய அரசு கூறிய வார்த்தைகள் "நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்". கடைசி வரை இதையேதான் கூறினார்களே ஒழிய , முபாரக் பதவி விலக வேண்டும் என்றோ அல்லது எகிப்து புரட்சி வெற்றி பெற வேண்டும் என்று தப்பி தவறி கூட கூறவில்லை.

தற்போதைய லிபிய புரட்சியில் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று நம் வெளியுறவு அமைச்சர் திருவாளார் S.M. கிருஷ்ணாவிடம் கேட்ட போது அவர் இப்படி திருவாய் மலரினார் "நாம் இத்தகைய சமயங்களில் எந்த ஒரு நிலைப்பாடும் எடுப்பதில்லை" :( . இதை கூறுவதற்கு ஒரு வெளியுறவு அமைச்சர். மேலும் லிபிய புரட்சியை ஆதரித்து ஐநாவில் லிபியாவின் மீது "No fly zone" தீர்மானம் கொண்டுவந்தபோது கூட இந்திய அரசு எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. இவர்களுக்கு எல்லாம் பயம் எங்கே தாங்கள் ஒருவரை ஆதரிக்க போய் எங்கே மற்றொருவர் வெற்றி பெற்றுவிட்டால் என்ன ஆவது . அதற்க்கு better எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருப்பதுதான் . புரட்சியின் முடிவில் யாராவது ஒருவர் வெற்றி பெறுவார்தானே அப்பொழுது வெற்றி பெற்றவர்க்கு ஒரு பூங்கொத்து அனுப்பிவிட்டால் போயிற்று.

நான் ஒன்றும் இங்கு அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் எகிப்து மக்களின் மீதோ அல்லது லிபிய மக்களின் மீதோ பரிதாபப்பட்டு முபாரக் மீதோ அல்லது கடாபி மீதோ நடவடிக்கை எடுத்தது என்று கூறவில்லை . இதே நாடுகள்தான் முபாரக்கையும் கடாபியையும் சிறிது காலத்திற்கு முன்பு வரை ஆதரித்தவர்கள் . ஆனால் மக்களின் ஆதரவு மாறியவுடன் தாங்களும் மாறிக்கொண்டார்கள். அதற்க்கு மக்களுக்கு தாங்கள் ஆதரவு அளிக்கிறோம் என்று சாயம் வேறு பூசிக்கொண்டார்கள்.

ஆனால் பல நூற்றாண்டுகளாக எதேச்சதிகாரத்திற்கு ஆட்பட்ட இந்தியா மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது எதேச்சதிகாரத்திற்கு எதிராக நடைபெறும் புரட்சிக்கு இயல்பாக ஆதரவு அளிக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் புரட்சி வெற்றி பெற்ற பின் கடைசியாக மக்களுக்கு ஒரு பூங்கொத்து அனுப்பினால் அம்மக்கள் நம்மளை மதிப்பார்களா?. நியாயமான புரட்சியின் போது கஷ்டகாலங்களில் ஆதரவு அளித்தவர்களை மக்கள் நினைத்து பார்பார்களா அல்லது வெற்றி பெற்றபின் கடைசியாக வெற்றியில் பங்கு பெற வருபவர்களை மக்கள் வரவேற்க அவர்கள் என்ன மாக்களா ?

இது உலக விசயங்களை பொறுத்தவரை மட்டுமல்ல , ஏன் இந்தியாவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கூட இவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை . இங்கு அருந்ததிராய் காஷ்மீர் பிரிவினையை ஆதரித்து பேசியபோது ஏன் அவர் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்ட போது அதற்க்கு நம் மாண்புமிகு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்படி அருளினார் , "நடவடிக்கை எடுக்காததே ஒரு நடவடிக்கைதான்" . இதை சொல்லுவதற்கு ஒரு மத்திய அமைச்சர்.

நாங்கள் உலகின் மிகப் பெரிய ஜனநாயக அரசு என்று கூறும் இவர்கள் எந்த நாட்டில் ஜனநாயகம் வெற்றி பெற ஆதரவு அளித்தார்கள் ? . நம் நாட்டிற்கு மிக அருகில் இருக்கும் பர்மாவில் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க இவர்களுக்கு துணிவில்லை. எங்கே அப்படி கொடுத்தால் பர்மா , சீனா பக்கம் போய் விடுமோ என்ற பயம். ஏன் இங்கு இலங்கையில் 1.5 லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை எதிர்க்க துணிவில்லை . அப்படி செய்தால் எங்கே இலங்கையும் சீனா பக்கம் போய் விடுமோ என்ற பயம் . அந்த சமயம் நம் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் கூறியது என்ன தெரியுமா , "இலங்கை என்ன வேண்டுமென்றாலும் எங்களைத்தான் கேட்க வேண்டும் . பிற நாட்டை நாட கூடாது". எங்கள் மக்களை அழிப்பதாக இருந்தாலும் அது எங்கள் ஆயுதங்களை கொண்டுதான் அழிக்க வேண்டும் சீனாவை நாடக் கூடாது. இதுதான் அவர்களின் நிலைப்பாடு.

ஒரு வல்லரசு உலக நாட்டில் நடைபெறும் அக்கிரமங்களை தீவிரமாக எதிர்க்க வேண்டும் (நான் இன்றைய அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகள் அப்படிதான் நடக்கின்றன என்று கூறவில்லை). ஆனால் இங்கு இந்திய அரசிற்கு தன் மக்களுக்கு எதிராக நடக்கும் அக்கிரமத்தையே தட்டி கேட்க துணிவில்லை. 500 க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதையே இவர்களால் தட்டி கேட்க துணிவில்லை , இவர்கள் எங்கே உலக அக்கிரமங்களை தட்டி கேட்க போகிறார்கள். கேட்டால் மீனவர்கள் எல்லைதாண்டி சென்று விடுகிறார்களே என்ற சப்பை கட்டு வேற. எல்லை தாண்டினாலும் அவர்களை கைது தான் பண்ணலாமே தவிர கொல்ல கூடாது. ஏன் இந்தியாவின் மிகப் பெரிய எதிரி என்று கூறப்படும் பாகிஸ்தான் கூட எல்லை தாண்டும் மீனர்களை கைது தான் செய்துள்ளதே தவிர இதுவரை ஒரு மீனவரை கூட கொன்றதில்லை.

இந்திய அரசு இதுவரை ஆப்ரிக்க நாடுகளில் நடக்கும் அடக்குமுறைக்கு எதிராக ஒருதடவை கூட கொடுத்ததில்லை. எப்படியும் ஒரு காலத்தில் எதேச்சதிகாரம் தோற்கத்தான் போகிறது அப்பொழுது வல்லரசாகும் கனவு கொள்ளும் இந்தியாவை எப்படி எகிப்தியரும், லிபியரும் , பர்மியரும், இலங்கை தமிழரும் , ஆப்ரிக்க மக்களும் ஏனைய மத்திய கிழக்காசிய மக்களும் ஏற்றுகொள்வார்கள் என்று பார்போம். இந்திய அரசின் இத்தகைய முதுகெலும்பற்ற நிலைப்பாட்டால் அம்மக்கள் இந்தியாவையும் இந்திய மக்களையும் அல்லவா தவறாக நினைப்பார்கள்.

இந்திய அரசு உறுதியாக நிலைப்பாடு எடுக்கும் வரை இந்திய அரசின் ஐநா பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர் ஆவது என்ற எண்ணம் கனவுதான். அங்கு போயும் இவர்கள் தீர்மானங்களின் மீது ஒன்று வெளிநடப்பு செய்வார்கள் அல்லது ஓட்டளிப்பதிலிருந்து விலகி நிற்பார்கள் .இதற்கு எதற்கு இவர்களுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அதுவும் வீட்டோ அதிகாரத்துடன் .

இந்த விசயத்தில் இந்திய அரசை பற்றி ஒபாமா இந்திய பாராளுமன்றத்தில் குறிப்பிட்டது மிகச் சரி. "அதிகாரம் வேண்டும் என்பவர்கள் அதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதிகாரமும் பொறுப்பும் இணைந்து வருபவை" . இந்திய அரசு பொறுப்பை ஏற்றுக் கொள்ளாதவரை அதற்க்கு அதிகாரமும் அந்தஸ்தும் கிடைக்கப் போவதில்லை.

பின் குறிப்பு : இப்பதிவில் அனைத்து இடங்களிலும் நான் கவனமாக இந்திய அரசு என்றே குறிப்பிட்டுள்ளேன். ஏனெனில் இவை அனைத்தும் இப்பொழுதும் இதுவரை இருந்த முதுகெலும்பற்ற அரசுகளின் தவறே . இவை இந்திய திருநாட்டின் தவறோ அல்லது மக்களின் தவறோ அல்ல.

Sunday, April 3, 2011

We are the Champions



இதை விட மிகச் சிறந்த தருணம் என்ன இருக்கும். என்ன ஒரு அருமையான தருணம் ... இந்த தருணத்திற்காகத்தான் மொத்த இந்தியாவுமே காத்திருந்தது ... இதை வர்ணிக்க வார்த்தைகள் இருக்கா ... என் இந்தியாவை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த இதை விட வேறு என்ன வேண்டும் ...

இந்த உலககோப்பை ஆரம்பித்த பொழுது இந்தியா தான் World Cup favorites னு சொன்னாலும் , இந்த அணியின் சுமாரான சொல்லப் போனால் பலவீனமான பந்துவீச்சை வைத்து எப்படி ஜெயிக்கப் போகிறார்கள் என்று பலருக்கும் சந்தேகம் இருந்தது. அதற்க்கு ஏற்றார் போல் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் 338 ரன் எடுத்தும் இந்தியாவால் அதை defend பண்ண முடியல . மேலும் அடுத்து வந்த ஆட்டங்களில் 50 ஓவரையும் முழுமையாக விளையாட முடியாமல் அனைவரும் ஆட்டம் இழந்தனர் . மேலும் batting powerplay ல மிகச் சிறப்பாக score பண்ண முடியல. தென் ஆப்ரிகாவிற்கு எதிரான போட்டியில் 29 ரன்னுக்கு 9 wicket ஐ இழந்தது . ஆனால் அதற்கடுத்து வந்த காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளில் மிகச் சிறந்த மாற்றங்கள் தெரிந்தது. 50 ஓவர்கள் முழுமையாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. இந்த அணியில் அனைவரும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்தனர் தேர்வாளர் ஸ்ரீகாந்த் உட்பட. League ஆட்டங்களில் இந்திய அணி முழுமையாக 50 ஓவர்கள் விளையாட முடியாதபோது , ஸ்ரீகாந்த் தலையிட்டு யூசுப் பதானுக்கு பதிலாக சுரேஷ் ரெய்னாவை ஆடும் 11 இல் கொண்டுவந்தது தேர்வாளரின் கடமை அணியின் 15 வீரர்களை தேர்வு செய்வதோடு முடிந்து விடுவதில்லை , ஒவ்வொருவருக்கும் இந்திய அணி வெற்றி பெறவேண்டும் எண்ணம் உள்ளதை காட்டியது . தோனியும் ego எதுவும் பார்க்காமல் ரைனாவையும் , அஷ்வினையும் கொண்டுவந்தது அவரின் பிறர் குரலுக்கு மதிப்பு கொடுக்கும் பெருந்தன்மையை காட்டியது . நிச்சயமாக காலிறுதி மற்றும் அரையிறுதியில் இந்தியா மிகப் பெரிய மாற்றங்களை கண்டது . அதை கண்டுதான் இந்தியாவுடன் தோல்வி அடைந்த பாண்டிங்கும் , அப்ரிடியும் இந்தியாதான் கோப்பையை ஜெய்க்கும் என்றார்கள் . மேலும் தோனி சொன்னது போல இந்திய அணி இந்த உலக கோப்பையில் நன்கு பரிசோதிக்கப்பட்டது . chasing ஆனாலும் சரி defending ஆனாலும் சரி நன்கு பரிசோதிக்கப்பட்டது . மேலும் இந்தியாவிற்கான பாதையும் புற்கள் நிறைந்திருக்கவில்லை . உலகின் மிகச்சிறந்த அணிகளை வென்று இறுதி போட்டிக்கு வந்தது . அது ஆஸ்திரேலியாவாக இருக்கட்டும் , இந்த உலக கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தானாக இருக்கட்டும் மிக கடினமான அணிகளையே வென்று வந்தது .


ஆனால் இலங்கைக்கு அப்படி இல்லை . அவர்களின் பாதை மிக சுலபமாக இருந்தது . League ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடனான அவர்கள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது . பாகிஸ்தானுடன் அவர்கள் தோற்று விட்டார்கள் . காலிருதியிலும், அரையிறுதியிலும் அவர்கள் இந்த உலக கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்படாத இங்கிலாந்தையும் ,
நியூஜிலாந்தையும் வென்று வந்தார்கள் . அதுவும் அரையிறுதியில் நியூஜிலாந்துடன் அவர்கள் தடுமாறவே செய்தனர் . அவர்களுக்கு உண்மையான போட்டி இறுதியில் இந்தியாவுடன்தான் இருந்தது . மேலும் அவர்களது lower middle order சோதிக்கப்படவே இல்லை . இது அவர்களின் முன்னாள் வீரர்களை அதிகம் கவலை கொள்ளச் செய்தது .

மேலும் இந்தியாவின் மிகப் பெரிய பலம் தோனி. தோனியின் எந்த முடிவும் மிகத் துணிச்சலானது. போட்டியின் முடிவில் தோனி சொன்னது மிகச் சிறப்பானது. நான் இந்த போட்டியில் இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்தேன் ஒன்று அஷ்வினுக்கு பதிலாக ஸ்ரீசாந்தை எடுத்தது , அடுத்து மிகச் சிறப்பாக விளையாடி கொண்டிருக்கும் யுவராஜிற்கு பதிலாக இந்த தொடரில் நன்றாக விளையாடாத நான் 4 வது batsman ஆக இறங்கியது . நாங்கள் இந்த போட்டியை ஜெய்திருக்காவிட்டால் நிச்சயம் அனைவரும் அதை கேள்வி கேட்டிருப்பார்கள்.

மேலும் இந்த அணி 90 கள் மற்றும் 2000 களின் ஆரம்பத்தில் இருந்தது போல் இல்லை . கடைசி வரை போராட வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் இருக்கிறது . இலங்கையின் batting முடிந்தவுடன் பல வரலாறுகள் இந்தியாவிற்கு எதிராக இருந்தன . இதுவரை போட்டியை நடத்தும் அணி கோப்பையை ஜெய்ததில்லை, அதற்க்கு முன் நடந்த 9 உலக கோப்பைகளில் இரண்டாவதாக batting செய்த அணிகளில் 2 அணிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன . உலக கோப்பையின் இறுதி போட்டியில் சதம் அடித்தவர் இருந்த அணி தோல்வி அடைந்ததில்லை , மேலும் இலங்கை அணி முன்பு எதிர்பார்த்ததை விட மிக அதிக ரன்களை இறுதியில் எடுத்தது . மேலும் இலங்கையின் பந்துவீச்சும் மிகச் சிறப்பானது . இப்படி பல . மேலும் இந்த அணி முந்தி இருந்த அணி போல் பதற்றம் கொள்வதில்லை . இந்த தொடரில் மிகச் சிறப்பான தொடக்க ஜோடியான சச்சின் , சேவாக் ரன் எதுவும் எடுக்கும் முன்பே பிரிந்த போதாகட்டும், இந்த இறுதி போட்டியில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் 18 ஆட்டம் இழந்து அணி 31/2 க்கு தத்தளித்த போதாகட்டும் இந்த அணி பதற்றம் கொள்ளவில்லை . சச்சின் போன பின் அணியே போய்விட்டது என்று எண்ணும் அணி அல்ல இது . காம்பிர் , கோலி போன்ற இளம் வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தையும் , மிகச் சிறந்த பொறுப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தினர் . தோனி , கேப்டனாக இருந்து Lead in Front ஆக இருந்தது மிகச் சிறப்பான பொறுப்புணர்ச்சி. இறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி இதற்க்கு முந்திய அனைத்து உலா சாம்பியன்களையும் இந்த உலக கோப்பையில் வெற்றி கண்டுள்ளது .



எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான் . சச்சின் இந்த தொடரில் மிகச் சிறப்பாக விளையாடினாலும் , தொடரின் இரண்டாவது அதிக ரன் எடுத்தவராக இருந்தாலும் சச்சின் இறுதி போட்டியில் சோபிக்கவில்லை என்பது எனக்கு வருத்தம்தான் . நான் சச்சின் century of century இந்த இறுதி போட்டியில் அடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை , at least சச்சின் 50 ரன்களாவது எடுத்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும் . ஆனால் சச்சினின் பங்களிப்பை யாரும் குறை கூற முடியாது .


சச்சினை சுமக்கும் போது விராட் கோலி கூறியதுதான் சிறப்பு

"He carried the Indian Cricket for 21 years, so we wanted to carry him on our shoulders" - Virat Kholi



‎"I couldn't have asked for anything more than this. Winning the World

Cup is the proudest moment of my life. Thanks to my team-mates. Without

them, nothing would have happened. I couldn't control my tears of joy." - Sachin Tendulkar

This is Sachin :)


இந்தியாவிற்கு கடந்த 28 வருடங்களாகவும் , சச்சினுக்கு கடந்த 5 உலக கோப்பைகளாக கண்ணாம் பூச்சி காட்டிய உலக கோப்பை இறுதியில் இந்திய வசமானது மிகச் சிறப்பான தருணம் . ப்ரையன் லாராவிற்கு கிடைக்காதது , டான் பிராட்மேனுக்கு கிடைக்காத சிறப்பு சச்சினுக்கு கிடைத்துள்ளது . ஆம் சச்சின் இடம்பெற்ற அணி உலக கோப்பையை கைபற்றிவிட்டது . சச்சினின் மகுடத்தில் கிட்டத்தட்ட அனைத்து இறகுகளும் சேர்ந்து விட்டன .

We are the Champions. Yes We are the World .

Friday, January 28, 2011

கிளியோபட்ரா - 1





இந்த வருட புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் ஒன்று கிழக்கு பதிப்பகத்தின் முகில் எழுதிய கிளியோபட்ரா . உலகை மயக்கிய எகிப்தின் பேரழகி. எனக்கு இந்த புத்தகம் முன்பே அறிமுகம் என்றிருந்தாலும் , முன்பெல்லாம் இதை வாங்க தயங்கினேன். ஏனென்றால் தனி மனிதர்களைப் பற்றி நாம் wikipedia விலேயே எளிதில் படித்துக்கொள்ளலாம் என்று எண்ணி இருந்தேன் . இருந்தாலும் இந்த வருடம் அதிக தடவை புறக்கணித்த புத்தகம் என்பதாலையே இதை வாங்கினேன். கிளியோபட்ரா உலகின் பேரழகியாக இருந்ததோடல்லாமல் உலகின் மிகச் சிறந்த இரண்டு வீரர்களான ஜூலியஸ் சீசர், மார்க் ஆண்டனியை மனதை கவர்ந்தவள் . அதனால் ரோம் சாம்ராஜ்ஜியம் மற்றும் எகிப்தின் வரலாற்றையே மாற்றியவள். கிளியோபட்ரா எகிப்தில் பிறந்ததால் கருப்பழகி என்றும் இல்லை இல்லை ரோம் வம்சத்தில் பிறந்ததால் வெள்ளை அழகியே என்றும் இரு வேறு கருத்து உண்டு. அழகை பற்றிய எண்ணம் காலத்திற்கு காலம் இடத்திற்கு இடம் மாறுபடும் தான். அவளுடைய சிலை மற்றும் அவள் உருவம் பொறித்த நாணயங்கள் அவள் மேல் பெரிய பிரமிப்பை ஏற்படுத்துவதில்லை. அவள் சற்று மூக்கு நீண்டவள்தான். இருந்தாலும் அவள் வாழ்ந்த காலத்தில் அவள் அழகு அனைவரையும் மயக்கியதுதான். ஏன் இன்றும் உலகின் மிகச்சிறந்த பேரழகியாக கருதப்படுபவள்தான். அதே நேரத்தில் அவள் அகந்தை கொண்டவளாகவும் அகங்காரம் கொண்டவளாகவும் தான் நினைத்ததை எப்படியும் சாதிக்கத் தெரிஞ்சவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள்.

ஆனால் இப்புத்தகம் அவளது கெட்ட குணங்களாக சித்தரிக்கப்படுவதை குறித்து எதுவும் பேசவில்லை. இந்த புத்தகத்தின் மூலம் அவள் மேல் நமக்கு மிகப்பெரிய மதிப்பும் ஒரு பரவச உணர்வும் அதற்கும் மேல் அவள் மேல் நமக்கும் காதல் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அவள் இறக்கும் போது ஐயோ இவ்வளவு பெரிய பேரழகி இப்படி இறக்கிறாளே என்று ஆகப் பெரிய துக்கம் தோன்றுகிறது . இந்த புத்தகத்தின் முக்கிய அம்சம் இது கிளியோபட்ராவை பற்றி மட்டும் பேசாமல் அவள் காலத்தில் நிகழ்ந்த அனைத்து முக்கிய அம்சங்களையும் பற்றி பேசுகிறது. முக்கியமாக ஜூலியஸ் சீசர் மற்றும் மார்க் ஆண்டனி கிளியோபட்ரா மீது காதலில் வீழும் போது அதனால் ரோம் சாம்ராஜ்ஜியத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் அவர்களின் குடும்பங்களில் ஏற்பட்ட குழப்பங்களையும் பற்றி விரிவாக பேசுகிறது.

இந்தப் பதிவின் நோக்கம் பேரழகி கிளியோபட்ராதான். கிளியோபட்ரா பற்றி பேசும் போது அவளை சுற்றி நடந்த சம்பவங்களையும் பேசாமல் இருக்க முடியாது. அதனாலையே கிளியோபட்ரா பற்றிய இந்த பதிவில் அவளைப் பற்றி மட்டுமல்லாமல் மற்றவர்களையும் பற்றி வருகிறது. இது சற்றே பெரிய பதிவு என்பதால் இதை இரண்டாகப் பிரிக்கிறேன். முதல் பாகம் கிளியோபட்ராவின் முதல் காதலன் சீசருடனும் , இரண்டாம் பாகம் கிளியோபட்ராவின் இரண்டாம் காதலன் மார்க் ஆண்டநியுடனும் உள்ளது .

மாவீரர் அலெக்ஸ்சான்டரின் முக்கிய தளபதிகளில் ஒருவர் முதலாம் தாலமி சோடர். அலெக்ஸ்சாண்டர் இறந்தபிறகு அவர் அலெக்ஸ்சாண்டரால் வெற்றி கொள்ளப்பட்ட எகிப்தை ஆள கவர்னராக நியமிக்கப்பட்டார். அங்கு கவர்னராக பொறுப்பேற்றுக்கொண்ட சில காலத்திற்கு பிறகு அவர் மாஸிடோனியாவிற்கு கட்டுப்படாத எகிப்தின் சுதந்திர ஆட்சியாளராக ஆனார். இது நடந்தது கிமு 305. எகிப்தின் புதிய தலைநகரம் அலெக்ஸ்சாண்டிரியா. அலெக்ஸ்சாண்டர் தான் வெற்றி கொண்ட நாட்டிலெல்லாம் ஒரு மிகப்பெரிய நகரை உருவாக்கி அதற்கு அலெக்ஸ்சாண்டிரியா என்று பெயரிட்டார். அப்படி உருவான நகரம்தான் இந்த அலெக்ஸ்சாண்டிரியா. இது நைல் நதியின் மேற்கு முகத்துவாரத்தில் அமைக்கப்பட்ட அழகான துறைமுக நகரம். தால்மி அலெக்ஸ்சாண்டிர்யாவில் மேலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி அதை உலகின் உன்னதமான நகரங்களில் ஒன்றாக மாற்றினார். தால்மி எகிப்தியர்களை கவர எகிப்திய பெண்ணை மணம் முடித்தார். எகிப்திய கடவுள்களை வணங்கினார். எகிப்திய கலாச்சாரத்தை போற்றினார் . தால்மிக்குப் பிறகு தால்மியின் வம்சத்தினர் அடுத்த 253 ஆண்டுகளுக்கு எகிப்தை ஆண்டனர். அந்த பரம்பரையில் வந்த கடைசி ஆட்சியாளர் ஏழாம் கிளியோபட்ரா. நம் பேரழகி கிளியோபட்ரா.

கிமு 58. எகிப்தின் அரசர் 12 ஆம் தால்மி. நம் கிளியோபட்ராவின் தந்தை. 12 ஆம் தால்மிக்கு எதிராக எகிப்தில் வன்முறை. பார்த்தார் ரோமுக்கு தப்பியோடிவிட்டார். அவருக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். ஆறாம் கிளியோபட்ரா , நான்காம் பெரினைஸ் , ஏழாம் கிளியோபட்ரா , நான்காம் அர்சினோ , 13 ஆம் தால்மி , 14 ஆம் தால்மி . நான்காம் பெரினைஸ் தந்தைக்குப் பிறகு ஆட்சியை கைபற்ற எண்ணினார். அப்பொழுது மகன்களான 13 ஆம் தால்மி , 14 ஆம் தால்மி சிறுவர்கள். அப்பொழுது எகிப்தில் அரசன் அரசியாக இருந்தால் மட்டுமே எகிப்தை ஆள முடியும் . அப்பொழுது எகிப்தில் சகோதரனும் சகோதரியும் திருமணம் செய்து கொள்வது வழக்கம். காரணம் எகிப்தியர்களின் கடவுளின் தாயான ஐசிஸ் தன் சொந்த சகோதரனான ஆஸிரிஸை திருமணம் செய்து கொண்டாள். பார்த்தாள் பெரினைஸ் சிறுவர்களான தன் சகோதர்களை திருமணம் செய்து கொள்ள முடியாது . வெளியிலிருந்து மாப்பிளை தேடி திருமணம் செய்துகொண்டாள். ரோம் தப்பிச் சென்ற 12 ஆம் தால்மி ரோமானியர்களின் உதவியைப் பெற்றார். ஒரு பெரிய ரோமானிய படை எகிப்தின் மீது படையெடுத்து அதை கைபற்றியது . மீண்டும் 12 ஆம் தால்மி அரசரானார். மகள் பெரினைஸ் கொல்லப்பட்டாள். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் எகிப்தை கைபற்றிய ரோமானிய படைகளின் துணைத்தளபதி மார்க் ஆண்டனி !.

12 ஆம் தால்மிக்கு வயதாகிவிட்டது. அவர் தனக்குப் பிறகு இருந்தவர்களில் மூத்தவளான நம் கிளியோபட்ராவுக்கு முடிசூட்ட எண்ணினார் . எகிப்தில் அரச அரசிதான் அரசாள முடியுமே அதனால் தன் மகன் 11 வயது 13 ஆம் தால்மிக்கும் 18 வயது மகள் நம் கிளியோபட்ராவுக்கும் மணம் முடித்தார். கிளியோபட்ரா அரசியானார். 12 ஆம் தால்மியின் நெருங்கிய நண்பராக போதினஸ் என்னும் திருநங்கை இருந்தார். அவருக்கு நம் கிளியோபட்ரா அரசியானது பிடிக்கவில்லை. அதனால் 13 ஆம் தால்மியை தூண்டி கலகத்தை ஏற்படுத்தினார். உயிருக்கு பயந்த நம் கிளியோபட்ரா அங்கிருந்து தப்பினார்.

நம் பேரழகி கிளியோபட்ரா தினமும் குளிப்பது கழுதைப் பாலில்தான் . தினமும் ஆலிவ் எண்ணெய் தேய்த்து குளிப்பார். தன் அழகை மெருகூட்ட மருதாணியைப் பயன்படுத்தினார். முகத்துக்கு இயற்கை க்ரீம் , கண்ணுக்கு மை , உதட்டுக்குச் சாயம் , முகப் பொலிவுக்கு பூச்சுகள் , வாசனைக்கு திரவியங்கள் இப்படி எல்லாமே உபயோகப்படுத்தினாள். அவளுக்கு நகைகள் மீது மிகப் பெரிய பிரியம் . கை , கால் , கழுத்து அனைத்துக்கும் தங்க நகைகள். உடை ரோம் கிரேக்க ராஜ குடும்ப பாணியில் . பட்டுத்துணியால் ஆன உள் அங்கி , பின் இடுப்புக் கயிறு, அதற்கு மேல் பெரிய ஆளுயர அங்கி. அவை பல வண்ணங்களில் இருந்தன. கிளியோபட்ராவுக்கு தான் உயரம் குறைவானவள் என்று எண்ணம் . அரண்மனைக்குள் வெறும் காலுடன் நடக்கும் நம் பேரழகி வெளியில் செல்லும் போது குதிங்கால் உயர்ந்த செருப்புகளை அணிந்தாள். தால்மி தன் பெண் மக்கள் உட்பட அனைவரையும் படிக்க வைத்தார். நம் கிளியோபட்ராவுக்கு தத்துவம் , கணிதம் , மருத்துவம் ,கலை, இலக்கியம் , இசை சம்பந்தப்பட்ட பாடங்களில் அதிக ஈடுபாடு . அவளுக்கு எகிப்தியன், அரமைக், எத்தியோபியன்,கிரீக், ஹீப்ரு மற்றும் லத்தீன் ஆகிய ஆறு மொழிகள் தெரியும் .இந்த அழகும் அறிவும் ஒருவருக்காக காத்திருந்தன. அது மாவீரர் ஜூலியஸ் சீசர் !.


அப்பொழுது ரோம் சாம்ராஜ்ஜியம் குடியரசு. அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட செனட் சபை இருந்தது. அப்பொழுது ரோமில் இரண்டு பேர் அதிகாரம் மிகுந்தவர்கள் . ஒருவர் ஜூலியஸ் சீசர் . மற்றொருவர் போம்பே . போம்பே சீசரின் மருமகன் தான் . ஆனால் இருவருக்கும் அதிகாரப்போட்டி. சீசர் பல போர்களில் பங்கேற்று போர் பயிற்சி பெற்றவர். ஆனால் போம்பேவோ செனட்டில் அதிகாரம் மிகுந்தவர். இருவருக்கும் ஏற்பட்ட போரில் போம்பே தப்பி 13 ஆம் தால்மியிடம் சரணடைந்தார் . அங்கு அவர் போதினேஸ்ஸால் படுகொலை செய்யபட்டார். காரணம் சீசரின் ஆதரவைப் பெறுவது. இது அறியாமல் அலெக்ஸ்சாண்டிரியா அடைந்த சீசரிடம் பரிசாக போம்பேயின் தலை ஒப்படைக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த சீசர் அவர் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்யச் சொன்னார்.

தப்பிச் சென்ற நம் பேரழகி சீசரின் உதவியைப் பெற்றால் தான் மீண்டும் அரசியாக முடியும் என்று எண்ணி அலெக்ஸ்சாண்டிரியாவை ரகசியமாக அடைந்தார். கிளியோபட்ராவின் உதவியாளன் ஒரு போர்வையில் சுற்றிய பரிசுடன் சீசரை தனிமையில் சந்தித்தான். சீசர் அது என்ன என்று கேட்ட போது அவன் அதை உருட்டி விட்டான் . உருண்டு வந்தது நம் பேரழகி, நிர்வாணமாக !. நீள் வட்ட முகம் , நீள நீல கண்கள் , வளமான புருவம் , வளைவில் மிளிரும் நாசி , வில்வடிவ மேலுதடு , விளைந்த கனியாக கன்னங்கள் , இளமை மிதக்கும் பார்வை , செதுக்கிய கரங்கள் , சிற்றிடை வளைவுகள் , செழுமை கொண்ட அங்கங்கள் , மினுமினுக்கும் சருமம் , மிதமிஞ்சிய பேரழகு. நம் பேரழகியின் அழகில் சீசர் விக்கித்துதான் போய் விட்டார். கீழே விழுந்த பெண்ணை கை பிடித்து தூக்கக் கூடாதா என்று நம் பேரழகி கேட்டவுடன்தான் சீசருக்கு நினைவு திரும்பியது. அதுவரை போதிநேச்சை ஆதரித்த சீசர் நம் பேரழகியின் வலையில் விழுந்து விட்டார் . அந்த கணமே கிளியோபட்ராவுக்காக எதையும் செய்ய துணிந்தார்.


போதிநேச்சுக்கு சீசர் கிளியோபட்ரா பக்கம் சாய்ந்துவிட்டார் என்பது தெரிந்துவிட்டது. ஆகவே சீசரை அலெக்ஸ்சாண்டிரியாவிலேயே வைத்து கொன்றோ அல்லது கைது செய்தோ விடவேண்டும் என்று போதினேஸ் படை திரட்ட ஆரம்பித்தார். இதையடுத்து போதினேஸ் கொல்லப்பட்டார். சீசரிடமும் படை பெரிய அளவில் இல்லை. 13 ஆம் தால்மியிடமும் படை பெரிய அளவில் இல்லை. எகிப்திய படைகள் வெகு தொலைவில் இருந்தன. அந்த படைகள் போதினேசின் துணை தளபதி அக்கிலிஸ் தலைமையில் இருந்தது. போதினேஸ் கொல்லப்பட்டபிறகு 13 ஆம் தால்மியும், அர்சினோவும் வெளியேறி அக்கிலிசிடம் அடைந்தனர். இப்படை பிறகு சீசரால் வீழ்த்தப்பட்டது. சீசர் தன் காதலியின் காலடியில் எகிப்தை வைத்தார். சீக்கிரத்திலேயே கிளியோபட்ரா நல்ல செய்தி சொன்னாள். சீசருக்கும் கிளியோபட்ராவுக்கும் ஆண் குழந்தை பிறந்தது. பெயர் 15 ஆம் தால்மி சீசர். செல்லமாக சீசரியன் (Little Caesar).

சீசருக்கு சீசரியன் தவிர வேற ஆண் வாரிசு இல்லை . கிளியோபட்ராவுக்கு சீசரியனை சீசர் தன் வாரிசாக அறிவிக்க வேண்டும் என்று ஆசை. சீசருக்கும் ஆசைதான். ஆனால் கிளியோபட்ரா சீசரின் காதலியாக இருப்பதற்கே ரோமில் எதிர்ப்பு கிளம்பியிருந்தது . மேலும் எகிப்தியர்களுக்கும் சீசர் கிளியோபட்ரா உறவு பிடிக்கவில்லை. மேலும் ரோமிலிருந்து சீசரை தேடி ஆள் மேல் ஆள் வந்து கொண்டிருந்தார்கள். சீசருக்கு ரோம் கிளம்பவேண்டிய கட்டாயம். கிளியோபட்ராவுக்கு விருப்பமே இல்லை. அழுது அடம் பிடித்தாள். சீசருக்கு அவளை சமாதானப்படுத்துவதே பெரும்பாடாக இருந்தது. ஒருவழியாக சீசர் ரோம் கிளம்பினார்.

சீசருக்கு ரோம் சாம்ராஜ்ஜியத்தின் பேரரசராகவேண்டும் என்பது பெரும் கனவு. கவனிக்கவும் ரோம் அப்பொழுது குடியரசு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட செனட் நாட்டை ஆண்டது . ரோமை அடைந்த சீசர், தான் பேரரசராக நடவடிக்கைகளை மேற்கொண்டார். செனட்டில் பெரும் எதிர்ப்பு . மேலும் சீசருக்கு கிளியோபட்ராவை பிரிந்திருக்கவும் முடியவில்லை . ஆள் அனுப்பி நம் கிளியோபட்ராவை ரோம் வரவழைத்தார். ரோம் மக்களும் கிளியோபட்ராவின் அழகை பார்த்து வாய் பிளந்தது உண்மை . கிளியோபட்ரா வரும் போது சீசரினையும் கூட்டி வந்திருந்தாள் .

சீசர் அன்று செனட் கிளம்பினார். அன்று அவர் அரசராவது குறித்து செனட்டில் முடிவெடுக்கப்பட இருந்தது . கிளியோபட்ரா ஏதோ கெட்ட சகுனம் கண்டு அவரை செனட் செல்ல வேண்டாம் என்று அழுது அடம்பண்ணினாள். சீசர் அவளை சமாதானம் பண்ணி செனட் கிளம்பினார். செனட்டில் காலடி எடுத்துவைத்தார். ப்ரூட்டசும் (you too brutus புகழ் ) செனட் வந்திருந்தார் . அவரும் செனட் உறுப்பினர். ப்ரூடச்சும் மற்ற செனட் உறுப்பினர்களும் சேர்ந்து தங்கள் அங்கியில் மறைத்து வைத்திருந்த கத்தி கொண்டு சீசரை குத்தினர் . நோக்கம் ரோம் குடியாட்ச்சியை காப்பாற்றுவது. மொத்தம் 23 குத்துகள். சீசர் இறந்தார். கிளியோபட்ராவுக்கு ஆற்ற மாற்றாத துக்கம் . சீசரின் உடலை பார்க்க எண்ணினாள் . இருந்தும் தன் பாதுகாப்பு கருதி தன் மகன் சீசரினுடன் ரோமிலிருந்து வெளியேறினாள். சீசரின் உடல் தகனம் செய்யப்பட்டது. கேள்விப்பட்ட கிளியோபட்ரா தன்னிடம் அவர் உடலை ஒப்படைத்திருந்தால் சீசருக்கு தான் எகிப்தில் ஒரு பிரமிடு கட்டி இருப்பேன் என்றாள்.