Friday, August 19, 2011

அன்னா கசாரே என்னும் வினையூக்கி (Catalyst)

இன்று இணையத்தில் இரண்டு விதமானவர்களைக் காணலாம். ஒன்று அன்னா கசாரே ஆதரவாளர்கள். இன்னொருவர் அன்னா கசாரே எதிர்பாளர்கள். அன்னா கசாரே மத்திய அரசை எதிர்த்துதான் இந்த போராட்டம் நடத்துகிறார், அதனால் மத்திய அரசும், காங்கிரசை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களும் அவரை எதிர்கிறார்கள். ok. ஆனால் அவரை எதிர்க்கும் அல்லது அவரது போராட்டத்தைப் பற்றி அதிக கிண்டலும் கேலியும் கொண்டு பேசும் இன்னொரு பிரிவினர் நம் கூடையே இருக்கிறார்கள். அதுவும் இளைஞர்கள்.

இன்று இணையத்தில் குறிப்பாக facebook இல் இத்தகையவர்களை அதிகம் காண முடிகிறது. இப்பொழுது நாம் இணையத்தில் அன்னா கசாரே குறித்த பல status message களை காண முடியும் .

"அன்னா கசாரேயை ஆதரிக்கலனா என்னையும் ஊழல்வாதின்னு சொல்லிருவாங்கன்னு பயமா இருக்கு .."

"இவ்வளவு பேசும் அன்னா கசாரே இவ்வளவு நாள் எங்கே போயிருந்தார் .."

"நானும் கொஞ்சம் காசு கொடுத்தா , ராம்லீலா மைதானத்துல எனக்கு முதவரிசை இடம் கிடைக்குமா ..."

இன்னும் பல ...

அன்னா கசாரேயை எதிர்க்கும் மத்திய அரசும் , காங்கிரசும் எனக்கு பெரிதாக தெரியவில்லை . ஏனென்றால் அவர் போராட்டம் நடத்துவதே அவர்களை எதிர்த்துதான். அதனால் அவர்கள் அவரை எதிர்ப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அன்னா கசாரேயின் போராட்டத்தைப் பற்றி மாற்றிப் பேசும் இந்த இணைய இளைஞர்களைத்தான் பெரிதாக எனக்குத் தெரிகிறது. ஏனென்றால் இவர்கள் நம்மிடையே இருப்பவர்கள். இவர்களின் கருத்து மற்ற எல்லாரையும் விட எளிதாக , விரைவாக மக்களிடையே சென்று அவர்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனக்கு இந்த இளைஞர்களைப் பற்றி பொதுவாக ஒன்று புரியவில்லை, இவர்கள் நிஜமாகவே அன்னா கசாரே போராட்டத்தின் மீது வெறுப்பு கொண்டுள்ளார்களா இல்லை அனைவரும் அவரை ஆதரிக்கின்றனர் நாம் அவரை எதிர்த்தால் நாம் தனியாகத் தெரிவோம் என்று எண்ணுகிறார்களா என்று தெரியவில்லை.

பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு. ஆனால் அந்த கருத்து ஒரு சமூகத்தில் எந்த அளவு , எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் .

இவர்கள் கேட்கும் சில கேள்விகளில் நியாயம் இருக்கிறது . ஜன்லோக்பால் வந்துவிட்டால் அனைத்தும் மாறிவிடுமா ? என்று கேட்கிறார்கள். நியாயம்தான். அனைத்தும் மாறிவிடும் என்று யாராலும் உறுதி கொடுக்க முடியாது. ஆனால் மக்கள் இன்று எதைத் தின்றாலாவது பித்தம் தெளியாதா என்பதைப் போல எப்படியாவது இந்த ஊழல் ஒழியாதா என்று எண்ணுகின்றனர். அதற்கான ஒரு முன் முயற்சி , முதல் முயற்சியாக இதைக் கொள்ளலாம்.

அதைப் போல ஜெயப்ரகாஷ் நாராயணனால் முடியாததையா இவர் செய்து விடப் போகிறார் என்கின்றனர். சரி ஜெய்பிரகாஷ் நாராயணனால் முடியாததால் மற்றவர்கள் முயற்சி செய்யக் கூடாதா? . மேலும் ஜெயப்ரகாஷ் நாராயணன் இருந்த காலகட்டத்தை விட இன்று இந்த ஊழல் எதிர்ப்பு மிக அவசியம். ஜெய் பிரகாஷ் நாராயணன் இருந்த காலகட்டத்தில் இந்தியா ஒன்றும் பெரிய பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடு அல்ல. நாம் அன்று சோத்துக்கே பலரை எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இன்று இந்தியா உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளரும் நாடு. இன்னும் 30, 40 வருடங்களில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக ஆகப் போகிற நாடு. இத்தகைய காலகட்டத்தில் தான் உலகிலேயே மிகப் பெரிய ஊழலான 1.75 லட்சம் கோடி ஊழல் இந்தியாவில் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தானியங்கள் அதிகம் இருக்கும் இடத்தில்தான் பெருச்சாளிகள் அதிகம் வரும் , அதைப் போல அதிக பணம் புழங்கும் இடத்தில்தான் அதிக ஊழல் பெரிச்சாளிகள் வரும். அதற்கு கடிவாளம் போடத்தான் இந்த ஜன்லோக்பால்.

ஜனநாயகத்தை ஆதரிப்பவர்கள் ஒன்று கூறுவார்கள். ஜனநாயகம் தான் best என்று நாங்கள் கூறவில்லை. இன்று இருக்கும் மற்ற முறைகளில் இது better . Thats all. அதே போன்று தான் ஜன் லோக்பால் மட்டுமே தீர்வு அல்ல அல்லது அதுதான் best என்று இல்லை. இது ஒரு தீர்வு . இருப்பதில் ஓரளவுக்கு நல்ல தீர்வு .

அதைப் போல அன்னா கசாரேயை ஆதரிப்பவர்களை தனி மனித துதிபாடிகள் என்கின்றனர். எப்பொழுதுமே எந்த ஒரு பெரும் செயலுக்கும் leader என்று ஒருவர் தேவைப்படுகிறார். எதற்கும் முன்னெடுத்து செல்ல ஒரு முதல் காலடி தேவைப்படுகிறது. அந்த காலடியாகத்தான் அன்னா கசாரேயை மக்கள் பார்கிறார்கள். இங்கு மக்கள் யாரும் அன்னா காசரேயை ஊழலை ஒழிக்க வந்த அனாதரட்சகராக பார்கவில்லை. எதற்கும் ஒரு முன்னெடுப்பு எதற்கும் ஒரு lead. அவ்வளவுதான்.

இங்கு பூனைக்கு யார் மணி கட்டுவார்கள் என்று எதிர் பார்க்கும்போது ஒருவர் கிடைத்திருக்கிறார். அவரை மக்கள் ஆதரிக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கொச்சையாக சொல்லப் போனால் நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்டா :( .அவ்வளவுதான் .

அடுத்து ஒரு கேள்வி இவர் என்ன பெரிய ஒழுங்கா?. இதே கேள்விதான் பாபா ராம்தேவ் விசயத்திலும் கேட்டார்கள். பாபா ராம்தேவ் முயற்சி வெற்றி பெறவில்லை . இப்பொழுது மக்கள் அன்னா கசாரேயை ஆதரிக்கும்போதும் அதே கேள்வி கேட்கிறார்கள். ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் மக்கள் இங்கு அன்னா கசாரயையோ அல்லது பாபா ராம்தேவையோ ஆதரிக்கவில்லை. மக்கள் இங்கு ஊழல் எதிர்ப்பை ஆதரிக்கிறார்கள். இப்பொழுதும் அன்னா கசாரே நல்லவர் இல்லை , அவரும் ஊழல்வாதி என்று கூறப்படலாம் அல்லது அது நிஜமாகவே இருக்கலாம். இவர்களால் பாபா ராம்தேவையும் , அன்னா கசாரேயையும் தான் தோற்கடிக்க முடியுமே தவிர மக்களை அல்ல. இன்னும் சிறிது காலத்தில் இன்னொருவர் வருவார். மக்கள் ஆதரவு ஆவருக்கு கிடைக்கும். இப்படி ஏதோ ஒரு காலகட்டத்தில் மக்கள் வெற்றி பெறுவார்கள்.

நம்முடைய சுதந்திரப் போராட்டத்திற்கும் இதே வரலாறுதான் உண்டு . மக்கள் பல ஆண்டுகளாக சுதந்திரத்திற்கு போராடினார்கள். பல காலகட்டங்களில் பல தலைவர்கள் உருவானார்கள். பல தலைவர்களும் எதிர்கப்பட்டார்கள், பழி தூற்றப்பட்டார்கள். பல தலைவர்களும் தோற்கடிக்கப்பாட்டார்கள். ஆனாலும் பிற்பாடும் பல தலைவர்கள் தோன்றினார்கள். அவர்களையும் மக்கள் ஆதரித்தார்கள். கடைசியில் காந்தி என்று ஒருவர் வந்தார். மற்றவர்களைப் போல் மக்கள் ஆதரவைப் பெற்றார். சுதந்திரம் கிடைத்தது. இங்கு மக்கள் காந்தியை ஆதரிக்கவில்லை. அவர்கள் சுதந்திரப் போராட்டத்தைத்தான் ஆதரித்தார்கள். காந்தி ஒரு leader . அவ்வளவுதான். இதுதான் உலக வரலாறும் கூட.

இங்கு காந்தி , அன்னா கசாரே எல்லாம் ஒரு வினை ஊக்கி(Catalyst). அவ்வளவுதான். என்ன காந்தியும் அன்னா கசாரேயும் ஒன்றா என்கிறீர்களா? என்ன இருந்தாலும் காந்தியும் ஒரு மனிதர்தானே.


P.S:

1. நான் இங்கு அன்னா கசாரே போராட்டத்தை கேலி செய்பவர்களைப் பற்றி எழுத வேண்டும் என்று எண்ணி கடைசியில் ஊழல் எதிர்ப்பை எதிர்ப்பவர்களை பற்றி முடித்திருக்கின்றேன். அது எப்படியோ எழுத எண்ணி மன ஓட்டத்தில் வேறு எங்கோ சென்று முடிந்திருக்கின்றது. ஆகவே அன்னா கசாரேயின் போராட்டத்தை கேலி மட்டும் செய்வதே தங்கள் நோக்கம் என்று எண்ணுபவர்களை எல்லாம் நான் ஊழல் எதிர்ப்பை எதிர்ப்பவர்கள் என்று கூறவில்லை என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

Thursday, August 11, 2011

என்று தெளியும் இந்த நாடு ?

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் வளங்களைப் பொறுத்தது. இந்த வளங்கள் பெரும்பாலும் இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் குறிக்கும். சில நாடுகள் ( எ.கா தென் அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள்) மிகுந்த இயற்கை வளங்களையும் குறைந்த மனித வளத்தையும் கொண்டும், சில நாடுகள் (எ.கா ஜப்பான்) அதிக மனித வளத்தையும் குறைந்த இயற்கை வளங்களையும் கொண்டும் வளர்கின்றன. மிகக் குறைந்த நாடுகளே சமச்சீரான இயற்கை வளங்களையும் , மனித வளத்தையும் கொண்டுள்ளன. அவற்றில் ஒன்று இந்தியா.

இந்தியா அளவிற்கு மனித வளத்தையும் , இயற்கை வளங்களையும் கொண்டுள்ள நாடுகள் மிகச் சிலவே. எ.கா அமெரிக்கா, சீனா போன்றவை மற்ற சில.
ஆனால் அந்த வளங்களை ஒரு நாடு எந்த அளவிற்கு முறையாக பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் தலைமுறை முன்னேற்றம் உள்ளது. அதுவே அதனுடைய முதிர் தன்மையைக் ( Maturity) காட்டும்.

இந்தியாவில் இருக்கும் இயற்கை வளங்களில் கனிம வளங்களும் அடக்கம். ஒரு நாட்டிற்கு கனிம வளங்கள் மிக முக்கியமானது. உலக அளவில் இந்திய நிலக்கரி மற்றும் லிக்னைட் உற்பத்தியில் 3 வது இடமும் , பாரைட் உற்பத்தியில் 2 வது இடமும் , இரும்புத்தாது உற்பத்தியில் 4 வது இடமும், பாக்சைட் மற்றும் crude steel உற்பத்தியில் 5 வது இடமும் , மாங்கனீசு தாது மற்றும் அலுமினியம் உற்பத்தியில் முறையே 7 மற்றும் 8 வது இடமும் வகிக்கிறது.
இவ்வளவு வளங்கள் இந்தியாவில் உள்ளன.

ஆனால் இவ்வளவு வளங்களால் இந்தியாவிற்கு பயனா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்லலாம் . ஏனெனில் இவ்வளங்களில் மிகப் பெரும்பான்மை வெளி நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக இரும்புத் தாதை எடுத்துக்கொள்வோம். உலக அளவில் இரும்புத்தாது அதிக அளவு இருக்கும் நாடுகளிலும் அவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளிலும் இந்தியா மிக முக்கியமானது . உலக அளவில் இரும்புத்தாது உற்பத்தியில் இந்தியா 4 வது இடம் வகிக்கிறது. ஆனால் இவற்றில் மிகப் பெரும்பான்மை வெளிநாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதுவும் முக்கியமாக சீனாவிற்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக அளவில் steel உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது. அங்கு இருக்கும் ஆயிரக்கணக்கான steel ஆலைகளுக்கு தீனி போட இந்திய இரும்புத்தாது மிக அவசியம்.

சீனாவிற்கு , ஆஸ்திரேலியா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து அதிகமாக இரும்புத்தாது ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியாதான். இத்தனைக்கும் சீனாதான் இரும்புத்தாது உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது. அது ஒரு ஆண்டுக்கு 800 million metric ton தயாரிக்கிறது. அதுவும் பத்தாமல் வருடத்திற்கு 245 mmt தயாரிக்கும் இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது. இந்தியா உற்பத்தி செய்யும் இரும்புத்தாதில் 50% மேல் சீனாவிற்கே செல்கிறது.

உலக மார்கெட்டில் ஜூனில் 1 Ton இரும்புத் தாதின் (Iron ore) விலை Rs 7,500. இந்தியாவில் வெட்டி எடுக்கப்படும் இரும்புத் தாதில் மிகப் பெரும்பான்மை வெளிநாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதாவது 1 ton இரும்பு தாதிற்கு தனியார் சுரங்கங்களுக்கு கிடைக்கும் விலை Rs 7,500 . அதற்கு அவை அரசிற்கு செலுத்தும் royalty 1 டன்னிற்கு வெறும் Rs 125 (2009 முன் அது வெறும் Rs 29 :( . மேலும் இந்தியாவில் இருக்கும் இரும்புத்தாது சுரங்கங்கள் உட்பட அனைத்து சுரங்கங்களின் எண்ணிக்கை 2854 .அவற்றில் 755 யே அரசின் வசம் உள்ளது மீதி 2099 சுரங்கங்கள் தனியார் வசம் உள்ளன. ).

பொறுக்கவும் இப்பொழுது ஒன்றை நினைத்து பாருங்கள் ஒரு சாதாரண மனிதன் அவன் நிலத்தில் மண்ணிற்கு கீழே இருந்து இருந்து புதையல் எதுவும் எடுத்தால் அவை அனைத்தும் அரசிற்கே சொந்தம். அதில் அவனுக்கு பங்கு எதுவும் கிடையாது. ஆனால் அதே மண்ணிற்கு கீழே புதையலாக இருக்கும் கனிமங்களை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனங்கள் அரசிற்கு செலுத்தும் royalty வெறும் 1.6% தான் :( .

சரி at least ஏற்றுமதி செய்யும் இரும்புத்தாதை பதப்படுத்தி இரும்பாகவாவது (ஸ்டீல்) ஏற்றுமதி செய்கிறார்களா? அதுவும் கிடையாது. இரும்புத்தாதை இரும்பாக மாற்றினால் அதனால் பல பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் அதில் லாபமும் அதிகம். அதிக வரி மற்றும் அந்நிய செலாவணி கிடைக்கும். அதுவும் நாம் செய்வதில்லை . அனைத்தையும் தாதுகளாகவே ஏற்றுமதி செய்கிறோம்.

பொதுவாக ஒரு நாட்டில் ஒரு கனிம வளம் அதிகமாக கிடைத்தால் பொதுவாக அந்த நாட்டில் அந்த நாட்டு மக்களுக்கு அதன் விலை குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டாக பெட்ரோலியம் அதிகமாக கிடைக்கும் அரபு நாடுகளிலும் , வெனிசுலா போன்ற நாடுகளிலும் பெட்ரோலின் விலை மிக குறைவு. வெனிசுலாவில் 1ltr பெட்ரோலின் விலை Re 1 தான்! . ஆனால் இந்தியாவில் Rs 70. இந்தியாவில் பெட்ரோலின் விலை மிக அதிகமாக இருக்கக் காரணம் இந்தியாவில் பெட்ரோலியம் அதிகமாக கிடைப்பதில்லை , இந்தியா பெட்ரோலியத்தை மிக அதிகமாக வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. அதனால்தான் உலக மார்கெட்டிற்கு ஏற்றவாறு பெட்ரோலின் விலை மாறுகிறது என்பது இந்திய அரசின் கூற்று.

ஆனால் இரும்பைப் பொறுத்தவரை என்ன நடக்கிறது ? இந்தியா உலகிலேயே இரும்புத்தாது உற்பத்தியில் 4 வதாக இருந்த போதிலும் இந்தியாவில் மக்கள் வாங்கும் இரும்பின் விலை உலக மார்கெட்டில் என்ன விலையோ அதே விலைதான். அதாவது உலக மார்கெட்டில் இருக்கும் ஒரு டன் இரும்பின்( Steel) விலையான அதே Rs 32,000 (May மாதம்)கொடுத்துதான் இந்திய மக்களும் வாங்குகிறார்கள்( இந்த மாதம் இரும்பு விலை டன்னுக்கு Rs 40,000 தாண்டிருச்சு).

இது எப்படி இருக்கிறதென்றால் ஒரு தாய் தன் குழந்தையிடம், "வெளி மார்க்கெட்டில் ஒரு லிட்டர் பசும்பாலே 30 ரூபாய் ... நான் உனக்கோ அதைவிட சத்தான தாய்ப்பால் தருகிறேன் .. அதனால் நீ எனக்கு குறைந்தபட்சம் 30 ரூபாயாவது தரவேண்டும்" என்பது போல் உள்ளது. கேட்டால் இதற்குப் பெயர்தான் பொருளாதாரம். இதன் மூலம் வருவதுதான் பொருளாதார முன்னேற்றம் . எவ்வளவு மோசமான செயல் இது ?


கனிம வளங்கள் ஒரு நாட்டிற்கு இன்றியமையாதவை. அதுவும் இரும்பு போன்று தீர்ந்து போகும் கனிம வளங்கள் மிக இன்றியமையாதவை. பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இரும்பை ஏற்றுமதி செய்யலாம். ஏனெனில் அங்கு கனிம வளங்கள் மிக அதிகம் மேலும் அவற்றின் மக்கள் தொகை மற்றும் மக்கள் அடர்த்தி மிக குறைவு ( ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையே 2.2 கோடி தான். அதாவது இந்தியாவில் ஒரு வருடத்திற்கு அதிகரிக்கும் மக்கள்தொகையின் அளவு . ஆனால் அது இந்தியாவைப் போல 2.5 மடங்கு பெரியது). ஆனால் இந்தியா போன்ற மிக அதிக மக்கள்தொகை கொண்ட , இப்பொழுதான் வளர ஆரம்பித்திருக்கும் நாடுகளுக்கு இரும்பின் அவசியம் மிக அதிகம்.

ஒரு அறிக்கையின் படி உலக இரும்புத்தாதின் தேவை வருடத்திற்கு 2% என்று அதிகரித்தால் உலக இரும்பின் இருப்பு இன்னும் 64 வருடங்களில் தீர்ந்து விடும். ஆனால் இன்று இரும்பின் தேவை வருடத்திற்கு 10% அதிகரிக்கிறது. அதாவது அதிகபட்சம் இன்னும் 40 - 50 வருடங்களில் உலக இரும்பு எல்லாம் தீர்ந்து விடும் . அதற்கு அப்புறம் ஈயம் பித்தளைக்கு போட்ட பழைய இரும்பையே திரும்பி புதுபித்து உபயோகப்படுத்த வேண்டும். அதுவும் அப்ப அந்த பழைய இரும்பையும் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டும். ஏன்னா நாம்தான் அப்பொழுது எல்லாத்தையும் ஏற்றுமதி செய்திருப்போமே!. இப்படிப்பட்ட நிலையில் நாம் நம் இயற்கை வளங்களை கணக்கு வழக்கில்லாமல் ஏற்றுமதி செய்கிறோம்.

இது மட்டுமல்ல சட்ட விரோதமான சுரங்கங்களின் மதிப்பு இங்கு மிக அதிகம். கர்நாடகா மாநிலத்தில் மட்டும் இதன் மதிப்பு Rs 16,000 கோடி . இந்தியா முழுவதும் என்றால் இதன் மதிப்பு கிட்டத்தட்ட Rs 50,000 கோடி - Rs 60,000 கோடி. மேலும் இந்த சட்ட விரோத சுரங்கங்கள் ஊழலையும், தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கின்றன. மேலும் இவை சுற்று சூழல் மாசு கேட்டிற்கும் காரணமாகின்றன. மேலும் சுரங்கங்கள் அமையும் இடம் பெரும்பாலும் காடுகளாகவே உள்ளன. இதனால் அவை காடுகள் அழிப்பிற்கும், விலங்குகள், தாவரங்கள் அழிவதற்கும் காரணமாகின்றன. மேலும் அந்த இடங்களில் வாழும் பழங்குடி இன மக்களையும் வெளியேற்றி அவர்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கின்றன.

இப்பொழுது சுரங்கங்கள் அமைச்சகத்திற்கும், சுற்றுச் சூழல் அமைச்சகத்திற்கும் இடையே லடாய். அதாவது சுரங்கங்கள் அமைய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறவேண்டும் .ஆனால் காடுகள் இருக்கும் இடத்தில் அவற்றை அழித்து விட்டு சுரங்கங்கள் அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி தரமாட்டேன் என்கிறது. அதாவது கனிம வளத்தை அழித்து அவற்றை ஏற்றுமதி செய்வதோடு அல்லாமல் காடுகளையும் அழிக்க வேண்டுமாம் :( .

Wednesday, August 10, 2011

அதிதி தேவோ பவ :(

அன்று அந்த ஹோட்டலில் மதியம் சாப்டுட்டு பிரெண்ட் கூட அந்த ஹோட்டலின் வாசலில் நின்று பேசிக்கிட்டுருந்தேன். அப்ப அங்க ஒரு சில அழுக்கு மூட்டையுடன் வந்த ஒரு வயதான பிச்சைக்காரர் தன் கையில் இருந்த காலி தண்ணி பாட்டிலை ஹோட்டலை நோக்கி ஏதோ ஆட்டி ஆட்டி காட்டிக் கொண்டிருந்தார். அவரால் பேசக் கூட முடியவில்லை. கொஞ்ச நேரம் கழித்துதான் புரிந்தது அவர் தண்ணி வேணும்னு கேட்கிறார்னு. கொஞ்ச நேரத்தில் அந்த ஹோட்டலிலிருந்து வெளியே வந்த ஒருவர் அந்த பிச்சைக்காரரை அடிக்காத குறையாக விரட்டி அடித்தார். எனக்குப் பாவமாக இருந்தது. பொது குடிநீர் குழாய்களையும், பொதுக் கழிப்பிடங்களையும் காட்டிலும் அதிக சாராயக் கடைகளைக் கொண்டிருக்கும் நாட்டில் நாம் இந்தக் காட்சிகளைத்தான் காண முடியும்.

நான் அருகில் இருந்த ஒரு பெட்டிக் கடையில் தண்ணீர் பாக்கெட் வாங்கி விட்டு திரும்பிப் பார்த்தால் அந்த வயதானவர் வெகு தூரம் விலகி சென்றிருந்தார். அவரை நோக்கி தண்ணிப் பாக்கெட்டுடன் ஓடினேன். நான் அவரை நோக்கி ஓடி வருவதைப் பார்த்ததும் அவர் பயந்து விலகினார். நான் வாங்கிய அந்த தண்ணிப் பாக்கெட்டை நீட்டிய போது கூட , அவர் பயந்து கொண்டுதான் அதை வாங்கினார்.

திரும்பி வரும்போதுதான் அந்த ஹோட்டலின் பெயருக்குக் கீழே எழுதியிருந்த அந்த வாக்கியம் கண்ணில்பட்டது.

"அதிதி தேவோ பவ " :(

Photo Courtesy:

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhrb9ENPW1evUS934vbsD75RWmuWYf_kr3flwIv__SppSptGTTmr0qoskrbME5xe_5ZQolhSBT9SYpCi-DoWslu7PMKtu-7PIlHNcrVhHdD7nDvGCAtTRonxChC0w-RF8oAGhcbQeGgtUg/

Thursday, August 4, 2011

தர்மம் Vs தொழில் தர்மம்

எந்த ஒரு தொழிலிலும் அந்த தொழிலுக்கான தர்மம் என்று ஒன்று உண்டாம். அதை தொழில் தர்மம் என்று சொல்வார்கள். ஒரு டிவியில் அயன் பட விமர்சனத்தின் போது இப்படி கூறினார்கள் "கடத்தல் தொழிலை நேர்மையாக செய்து வரும் பிரபு "( அது என்ன கடத்தல் தொழிலில் நேர்மை என்று புரியவில்லை :( ) . இப்படி ஒவ்வொரு தொழிலுக்கும் அந்த தொழிலுக்கான தர்மம் என்று ஒன்று உண்டாம்.
இப்படி ஒவ்வொரு தொழிலுக்கும் அதன் தொழில் தர்மம் என்று ஒன்றை கூறினாலும் அது தர்மத்துடன் ஒத்துப் போகிறதா என்று பார்க்க வேண்டும். சமீபத்தில் "கோ" படம் பார்த்தேன் . அது பத்திரிகை உலகை பற்றி கூறுவதாக இருக்கும். அந்த படத்தில் நக்சலைட்டாக வரும் போஸ் வெங்கட் , ஜீவாவை பார்த்து கூறுவதாக வரும் ஒரு வசனம் அழுத்தமாக இருக்கும். அவர் இப்படி கூறுவார் , "நீ பத்திரிகைகாரன்தானடா, செத்த பொணத்த எழுப்பி கூட நீ செய்தி வாங்கிருவ " என்பார். ஆனால் அந்த படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த படத்தில் ஜீவாவும், கார்த்திகாவும் தாங்கள் பத்திரிகை தர்மத்தின்படி நடக்கவில்லை என்பதால் தாங்கள் தங்கள் வேலையை ராசினாமா செய்கிறோம் என்பார்கள் . ஆனால் அதை ஏற்க மறுக்கும் அந்த பத்திரிகை ஆசிரியர் நீங்கள் பத்திரிகை தர்மத்தை மீறினாலும் நீங்கள் நாட்டிற்கு நல்லதுதான் செய்துள்ளீர்கள் அதனால் தங்கள் ராசினாமை ஏற்க மாட்டேன் என்பார். அந்த இடம் எனக்கு பிடித்திருந்தது. உண்மையான தர்மத்திற்கு முன் தொழில் தர்மங்கள் என்று கூறப்படும் மற்ற தர்மங்கள் முக்கியமில்லை.

என்னைப் பொறுத்தவரை தர்மம் ஒன்றுதான். இப்படி பத்திரிகை தர்மம் , போர் தர்மம் என்று தனியாக எதுவும் இல்லை. உண்மையான தர்மத்திற்கு முன் மற்ற எதுவுமே முக்கியமில்லை.
சிறிது காலத்திற்கு முன் என்னுடன் வேலை பார்த்த அலுவலர் ஒருவர் சென்னையில் பைக்கில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அவருக்கு முன் சென்ற பைக்கில் ஒரு கணவனும், மனைவியும் அமர்ந்திருக்க்கிறார்கள். அப்பொழுது திடீரென அந்த பைக் விபத்துக்குள்ளாகி அந்த கணவர் தூக்கி வீசப்பட்டு ஒரு பெரிய குழியில் வீசப்பட்டிருக்கிறார். யாருமே அந்த நபரை இறங்கி தூக்கவில்லை. உடனே இந்த நண்பர் அந்த குழிக்குள் இறங்கி அவரை தூக்கி இருக்கிறார். பார்த்தால் தலையில் மிகப் பெரிய அடிபட்டு ரத்தம் கொட்டுகிறது. அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். சுற்றி கூட்டம் . ஒருவரும் உதவிக்கு வரவில்லை. அப்பொழுது அங்கு வந்த தமிழ்நாட்டின் மிகப் பிரபலமான ஆங்கில பத்திரிக்கையின் நிருபர் ஒருவர் இந்த நண்பரை பார்த்து, "சார், தலையை கொஞ்சம் இப்படி திருப்பி பிடிங்க சார்" என்றிருக்கிறார். அவருக்கு பத்திரிக்கைக்கு புகைப்படம் எடுக்க வேண்டுமாம். அடிபட்டவரின் முகம் தெரியவில்லையாம். என்ன கொடுமை ? . இப்படியும் மனித ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் . கேட்டால் அது அவர்களின் தொழில், கேட்டால் தொழில் தர்மம். எவ்வளவு கேவலம். இப்படித்தான் அந்த தொழில் தர்மத்தை காப்பாற்ற வேண்டுமா? .
இதே போன்றவர்கலாள்தானே இங்கிலாந்து இளவரசி டயானா உயிரிழந்தார். அப்படிதான் பணம் சம்பாதிக்கவும், தொழில் தர்மத்தை காப்பாற்றவும் வேண்டுமா? .

உலகப் புகைப்படங்களில் ஒரு புகைப்படத்திற்கு முக்கிய இடம் உண்டு. அது ஆப்பிரிக்காவில் ஒரு சிறுவன் பசிக்கொடுமையால் போராடிக்கொண்டிருப்பான். அவனுக்கு அருகில் ஒரு பிணம் தின்னிக் கழுகு அவனை சாப்பிடுவதற்காக அவன் இறப்பதற்காக காத்திருக்கும். பிணம் தின்னி கழுகுக்கு ஒரு பழக்கம் உண்டு. அது உயிரோடு இருக்கும் தன் இரையை சாப்பிடாது. தன் இரை இறக்கும் வரை அதன் அருகிலேயே காத்திருக்கும். தன் இரையின் இறப்பு நெருங்க நெருங்க அதை நெருங்கி வரும். இந்த புகைப்படம் உலகில் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் அது ஆப்பிரிக்க கண்டத்தின் வறுமையை எடுத்துரைத்தாலும், ஒரு மனிதனுக்கான தர்மத்தையும் எடுத்துரைத்தது. அப்புகைப்படத்திற்கு உலகின் மிக பெரிய விருதான புலிட்சர் விருது கிடைத்தது. அதே சமயத்தில் அந்த புகைப்பட நிருபர் பற்றி மிகப் பெரிய கண்டனம் உலகெங்கும் எழுப்பியது. அந்த புகைப்பட நிருபர் அந்த பிணம் தின்னி கழுகைப் போல் அந்த சிறுவனுக்கு அருகில் அந்த புகைப்படத்திற்காக காத்திருந்தார் என்று உலகெங்கும் கண்டனம் எழும்பியது. அந்த புகைப்படம் எடுத்த பின் அந்த புகைப்பட நிருபர் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார். அதற்கு பிறகு அந்த சிறுவனுக்கு என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது. அந்த புலிட்சர் பரிசு கிடைத்த சிறிது நாட்களில் அந்த நிருபர் மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்.
பிறர் துன்பத்தில் பொருளும் புகழும் பெறுவது எவ்வளவு மோசமானது.
சில காலங்களுக்கு முன் ஒரு தமிழக புகைப்படக்காரரின் பேட்டி ஒன்றைப் படித்தேன் . அவர் உலக அளவில் மிகப் புகழ் வாய்ந்தவர். உலகம் முழுவதும் சுற்றி அரிய புகைப்படங்களை எடுப்பவர். அப்படி ஒரு சமயம் அவர் உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டிற்கு சென்ற போது , ஒரு சிறுமி நிர்வாணமாக வந்துள்ளாள். அவள் தன்னை பலர் சேர்ந்து கற்பழித்ததாகவும் , தன்னை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறாள். அவளுக்கு வேண்டிய உதவியை அந்த நிருபர் செய்துள்ளார். ஏனோ அந்த சிறுமியை அந்த நிலையில் புகைப்படம் எடுக்க அவருக்கு தோன்றவில்லை. இதை பற்றி அவருடைய நண்பரிடம் கூறியபோது அவர் நண்பர் நீ பத்திரிகை தர்மத்தை மீறிவிட்டாய். அவளை அந்த நிலையில் புகைப்படம் எடுத்திருக்கவேண்டும், நீ உலகப் புகழ் பெற்றிருப்பாய் என்றிருக்கிறார். ஆனால் அதற்கு அந்த புகைப்பட நிருபர் அந்த சிறுமியின் நிலையை எனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என்றிருக்கிறார்.

மேற்கூறியவற்றில் எது தர்மம் என்பது உங்களுக்கே புரியும்.