Saturday, October 27, 2012

உயிரினங்களுக்கான உலகம்


இன்று பல பேருக்கு இந்த பூமி  மனிதர்களுக்கு மட்டுமே என்ற எண்ணம் உருவாகிவிட்டது. உருவாகிவிட்டது என்பதைவிட இயல்பாகவே தோன்றிவிட்டது அதுவும் சிறிது கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் . ஏனென்றால் பலருக்கு இந்த பூமியில் இருக்கும் பல உயிர்கள் பற்றியோ அவற்றிற்கிடையேயான பிணைப்பு பற்றியோ சிறிதும் தெரியவில்லை அல்லது அக்கறை இல்லை.

இந்த பூமியில் மனிதன் மட்டுமே தனித்து வாழ்ந்துவிட முடியாது. மனிதன் ஒரு Social Animal ஆனால் Social consciousness  இல்லாத ஒரு Social animal. இந்த Social animal என்கிற பதம் மனிதர்களுக்கிடையேயான Social Life ஐப் பற்றிக் கூறவில்லை . இது மனிதன் மற்ற உயிரினங்களைச் சார்ந்திருக்கும் Social life ஐப் பற்றிக் கூறும் பதம்.

உலகில் உருவாகும் ஆக்சிசனில் 20% தென் அமெரிக்காவில் இருக்கும் அமேசான் மழைக்காடுகளால் உருவாகிறது. அதாவது நம் கும்மிடிப்பூண்டியில் இருக்கும் குருசாமி சுவாசிப்பது இங்கிருந்து உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் அமேசான் மரம் வெளியிடும் ஆக்சிசன். இப்படி மனிதன் தான் சுவாசிக்க அத்தியாவசியத் தேவையான ஆக்சிசனிலிருந்து , தன் உணவு உற்பத்தியாகத் தேவையான தேனீ போன்ற சிறு பூச்சிகளால் நடக்கும் மகரந்த சேர்கை முதல் , நம் டாய்லட்டுல இருந்து வெளியே போகும் மலத்தை நொதிக்கச் செய்யும் பாக்டீரியா வரை அவன் சார்ந்திருப்பது மற்ற உயிரிகளை. ஆனால் அவனுடைய நினைப்போ இந்த உலகம் நடப்பதே தன்னால்தான் என்ற எண்ணம். சொல்லப் போனால் இந்த பூமி  உருப்படியாக இருந்தது மனிதன் உருவாவதற்கு முன்புதான்.

இந்த பூமியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு உயிரினம் தன் ஆதிக்கத்தை செலுத்தி வந்திருக்கிறது  . அப்பொழுது அதனுடன் போட்டியிட முடியாத அல்லது அந்த சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள  முடியாத உயிரினம் இந்த பூமியில் இருந்து அழியும் என்பது டார்வின் தத்துவம். இங்கு கவனிக்கவும் ஆதிக்கம்  செலுத்தும் உயிரினத்தின் நேரடி போட்டியாளன்தான் இங்கு மறையும். அதுவும் அது நடக்க பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும். ஆனால் இங்கு மனிதன் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தவுடன் நடப்பது முற்றிலும் வேறானது. இன்று மனிதனின் செயல்பாடால் அழிவது அவன் போட்டி ஆள் அல்ல. அவனுக்கு, அவன் வாழ்விற்கு துணை செய்யும் உயிரினங்கள்தான். ஏனென்றால் அவன் போட்டியாளான நியாண்டர்தால் மனிதனை அவன் என்றோ அழித்துவிட்டான். இன்று எஞ்சி இருப்பது அவன் நண்பர்களே.

மனிதனின் அழித்தொழிப்பு வேகம் எந்த ஒரு உயிரினத்துக்கும் சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தகவமைப்பு செய்து கொள்ள சிறிது கூட அவகாசமளிக்காத வேகம் . உதாரணத்திற்கு சிட்டுக் குருவி. இங்கிங்கெனாது எங்கும் நிறைந்திருந்த சிட்டுக் குருவிகளை இன்று பார்பதே அபூர்வம். சிட்டுக் குருவிகள் தங்கள் குஞ்சுகளுக்கு ஊட்டுவது வயல் வெளிகளில் இருக்கும் பூச்சிகளையும் , முற்றத்தில் காய வைக்கும் சிறு தானியங்களையும். பூச்சிக் கொல்லிகள் வந்த பிறகு பூச்சிகளும் கிடைக்கவில்லை. கிடைக்கும் பூச்சிகளும் பூச்சிக் கொல்லி விஷம் தாக்கியவை.முற்றத்தில் தானியங்களை காயவைக்கும் பழக்கம் மறைந்த பிறகு தானியங்களும் கிடைக்கவில்லை . அவை கூடு கட்டுவது குடிசை, ஓட்டு வீடு போன்ற வீடுகளில் இருக்கும் சிறு இடை வெளிகளில் . கான்க்ரீட்டு காடுகள் வந்த பிறகு அதற்கும் வழி இல்லை . அப்படியும் தப்பிப் பிழைத்து வாழ்ந்த குருவிகளை அழிக்க வந்தது செல்போன் எமன். இந்த செல்போன் கதிர்களால் இந்த சிட்டுக் குருவிகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இப்படி சிட்டுக் குருவிகளின் வாழ்க்கையின் அடி மடியிலேயே கை வைக்கப்பட்டுவிட்டது. இவ்வளவு மாற்றங்களும் நடந்தது கடந்த எழுபது ஆண்டுகளில். எழுபது ஆண்டுகள் என்பது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த உயிரினத்தின் வாழ்வில் மிகச் சிறிய பகுதி. இச்சிறு இடைவெளியில் எந்த உயிரினத்தாலும் தங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்தி தங்களை தகவமைத்துக் கொள்ள முடியாது.

இந்த பூமியில் எல்லா காலமும் உயிரினங்கள் தோன்றி பின்னர்  முற்றிலும் மறைந்தும் போயிருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் இயற்கையாக நடந்தவை. ஆனால் இப்பொழுது உயிரினங்கள் மறைவது முற்றிலும் மனிதன், மனிதனுடைய செயலால் நடப்பது. மனிதனின் எண்ணமானது முற்றிலும் இயற்கைக்கு மாறானது. எடுத்துக்காட்டாக இதுவரை இருந்த அனைத்து உயிரினங்களும் மற்ற உயிரினங்களை தங்களின் உணவின் தேவைக்காக மட்டுமே கொன்றிருக்கின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் பொழுதுபோக்கிற்காக வேட்டை என்ற பெயரில் உயிரினங்களை கொன்றான். வேட்டையில் எந்த உயிரினமாவது அழிந்திருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு ஒரு தகவல் , இந்தியாவில் 1950 வரை இருந்த ஆசிய சிறுத்தை இன்று இல்லை . முற்றிலும் வேட்டையால் அழிந்துவிட்டது. தமிழில் Leopard மற்றும் Cheetah இரண்டிற்கும் சிறுத்தை என்றுதான் பெயர். இப்பொழுது நம்மூரில் சிறுத்தை அடித்துவிட்டது என்று கூறுவது Leopard ஐதான், நான் கூறுவது Cheetah. இன்று உலகில் ஆசிய Cheetah இருப்பது ஈரானில் மட்டும்தான் அதுவும் 100 தான். இப்படி மனிதனின் நேரடி நடவடிக்கையாலும், மறைமுக நடவடிக்கையாலும் பூமியில் பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.

பூமியிலிருந்து உயிரினங்கள் அழியும் வேகம் இன்று மிகவும் அபாயகரமான வேகத்தில் உள்ளது. இன்றைய வேகத்தில் இது தொடர்ந்தால் 2100 இல் உலகில் இருக்கும் உயிரினங்களில் 50% அழிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இது மிகவும் அபாயகரமானது.

இந்த உலகில் அமெரிக்கா , ஐரோப்பா அளவிற்கு பெரிய தொழிற் புரட்சி நடக்காத பகுதிகள் தென் அமெரிக்கா, ஆப்ரிகா, ஆசியா ஆகும். இவைதான் பல்வேறு  உயிரினங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளும் ஆகும். இவற்றில் பெரும் தொழிற் மாற்றங்கள் ஏற்படும்போதுதான் அதுவும் எந்த ஒரு உயிரினங்களைப் பற்றிய அக்கறையும் இல்லாத தொழிற் புரட்சி ஏற்படும்போது அது பெரும் பேரழிவை ஏற்படுத்தும்.

இப்படி உயிரினங்கள் அழிந்தால் , பின்னர் மனிதன் சுவாசிக்க ஆக்சிசனுக்கே அவன் Chemistry Lab லிலிருந்து கிடைக்கும் ஆக்சிசனையே நம்பி முகத்தில் மாஸ்க்குடந்தான் அலைய வேண்டி இருக்கும்.  இயற்கையை இயற்கையாக இருக்க விடுங்கள் அது உங்களை இயல்பாக வாழ வைக்கும் .

Photo Courtesy : http://www.tourismtheworld.com/wp-content/uploads/2011/05/forest.jpg

Sunday, October 21, 2012

அபத்தங்கள்




எனக்கு சின்ன வயசுல இருந்து பறவைகள், விலங்குகள்னா ரொம்ப ஆர்வம். அவைகளை பத்திய விசயங்கள  நியூஸ் பேப்பர்ல  தேடித் தேடிப் படிப்பேன். அது புலி மனுசங்கள அடிச்சாலும் சரி , மனுசங்க புலிய அடிச்சாலும் சரி ரொம்ப ஆர்வமா படிப்பேன். அது தொண்ணூறுகளின் ஆரம்பம். அப்ப நான் ரெண்டாவது இல்ல மூணாவது படிச்சுகிட்டு இருந்திருப்பேன். அப்பத்தான் நியூஸ் பேப்பர்லாம் ஓரளவுக்கு எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பிச்ச தருணம். அப்பத்தான் ராஜீவ் காந்தி கொல்லப்பாட்டிருந்தார் . பேப்பர்லாம், போலீசார் இந்த இடத்தில் 2 புலிகளைப் பிடித்தனர், அந்த ஊரில் 3 புலிகளை தேடி வருகின்றனர் அப்படி இப்படின்னு நியூஸ் வரும். நம்மளுக்குத்தான் சிங்கம், புலிலாம் ரொம்பப் பிடிக்குமே, நானும் ரொம்ப ஆர்வமா படிப்பேன். பாதி படிக்கும் போதே கொஞ்சம் குழப்பமா இருக்கும். என்னடா இது புலிக்கு பேரெல்லாம் வச்சுருக்காங்க, அதோட ஒவ்வொரு புலிக்கும் 20 வயசு , 30 வயசுனு வயசு வேற போடுறாங்கன்னு குழப்பமா இருக்கும். சரி நாம படிக்குறது நிஜ புலிய பத்தி இல்லையோனு நினைக்கும்போது அடுத்த வரில போலீசார் புலிகளை வலை வீசி தேடி வருகின்றனர்னு இருக்கும்.புலியதான வலை போட்டு பிடிக்க முடியும். ஆனா இவங்க எழுதுறத பாத்தா நிஜ புலி மாதிரி தெரியலையேனு ஒரே குழப்பமா இருக்கும். என்னடா இது , இது புலி மாதிரியும் இருக்கு , இல்லாத மாதிரியும் இருக்குனு தோணும்.  அதுக்கப்புறமாதான் தெரிஞ்சது அவங்க சொன்னது நிஜ புலிய இல்ல , அவங்க சொல்றது விடுதலைப் புலியனு ;).

இது நான் நாலாவது இல்ல அஞ்சாவது படிக்கும்போதுன்னு நினைக்கிறேன். அப்ப தமிழ் பாட புத்தக்கத்துலலாம் காந்தி அடிகள் அக்டோபர் திங்கள் 2 ஆம் நாள் பிறந்தார், நேரு நவம்பர் திங்கள் 14 ஆம் நாள் பிறந்தார்னு போட்டுருக்கும். நான் , என்னடா இது எல்லா தலைவர்களும் திங்கள் கிழமையே பிறக்குறாங்க. இல்ல திங்கட்கிழமை பிறந்தாதான் தலைவரா ஏத்துப்பாங்களா? . இல்ல தலைவர்கள் பிறந்தவுடனே அந்த கிழமைய திங்கட்கிழமையா மாத்திருவாங்களானு ஒரே confusion ஆ இருக்கும். அதுவும் எல்லா புத்தகத்துலயும் அக்டோபர் மாதம் திங்கட்கிழமைன்னு போடாம அக்டோபர் திங்கள்னு spelling mistake ஆ எழுதுறாங்கன்னு தோணும். confusion தாங்க முடியாம அப்பாட்ட போய் இதை கேட்டேன். அப்பா சிரிச்சுகிட்டே சிவா , அக்டோபர் திங்கள்னா அக்டோபர் மாதம்னு அர்த்தம்னு சொன்னாங்க. அதாவது தமிழ்ல  திங்கள்னா , மாதம் , நிலான்னு அர்த்தம் இருக்காம்.
what a funny language is tamil ;) 

சின்ன வயசுல ஒரு நாள் பஸ்ல போகும்போது ரோட்டுல செம்மறி ஆடு போய்கிட்டு இருந்துச்சு. அப்ப அப்பாவ  கூப்பிட்டு, அப்பா இங்க பாருங்க வெள்ளாடு போகுதுன்னு  சொன்னேன். அதுக்கு அப்பா இது வெள்ளாடு இல்ல. இது செம்மறி ஆடு. அதோ அதுதான் வெள்ளாடுனாங்க. அதுக்கு நான் அப்பா, அது கருப்பா இருக்கு அத வெள்ளாடுங்குறீங்க. இதுதான் வெள்ளையா இருக்கு அதுனால இதுதான் வெள்ளாடுனேன். இன்ன வரைக்கும் எனக்குப் புரியல, கருப்பா இருக்க ஆட்டுக்கு ஏன் வெள்ளாடுன்னு பேரு வந்துச்சுன்னு :(.

இதுவும் கூட ரெண்டாவது படிக்கும்போதுன்னு நினைக்கிறேன். பக்கத்துவீட்டுப் பய்யன் அவங்க கொய்யா மரத்துல காய்ச்ச கொய்யாவ சாப்ட்டுச் சொன்னான். 'டாய் , அந்த கொய்யா அரப் பழமா இருந்துச்சு அதான் தூக்கி எறிஞ்சுட்டேன்' னுனான். எனக்கு ஒரே கோபம், ஏன் முழுசா தூக்கிப் போட்டான். பழுத்துருக்க பாதி பக்கம் மட்டும் சாப்டுட்டு காயா இருக்க மீதி பக்கத்த தூக்கிப் போடவேண்டியதுதானனு நினச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது அரப் பழம்னா பாதி பக்கம் பழுத்து பாதி பக்கம் காயா இருக்காது. மொத்தமுமே காயும் , பழமுமாதான் இருக்கும்னு :(.

ஏழாவது படிக்கும்போது ஒருநாள் class test ல தமிழ் பாடத்துல ராமாயணத்துல இருந்து கேள்வி கேட்டுருந்தாங்க. அது சீதேவிய பத்திய கேள்வி. நான் , நம்ம பசங்க எல்லாத்தையும் தமிழ்ப்படுத்திறாங்கனு நினச்சுகிட்டு , சீதேவின்னு வர்ற இடத்துலலாம் ஸ்ரீதேவினு எழுதி வச்சேன். அந்த பேப்பர திருத்திட்டு வந்த எங்க தமிழாசிரியர் சிரிச்சுகிட்டே, டேய் உனக்கு நடிகை ஸ்ரீதேவினா ரொம்ப பிடிக்குமோ, அது ஸ்ரீதேவி இல்லடா , சீதேவின்னு சொன்னாரு :).

டைடல் பார்க்குல இருந்து மத்திய கைலாஷ் போற வழில பாத்தீங்கனா, "ரோஜா முத்தையா தெரு" னு  ஒரு போர்ட் இருக்கும். கொஞ்ச நாள் முன்ன வர, பலதடவ அத கிராஸ் பண்ணும்போது நினைச்சுப்பேன் , ராஜா முத்தையாங்கிறததான் spelling mistake ஆ ரோஜா முத்தையானு எழுதிட்டாங்கனு . ஆனா அதுக்கு கீழ english லையும் 'Roja Muthiah' னு தான் எழுதி இருப்பாங்க. எப்படி ரெண்டு தடவையும் spelling mistake பண்ணாங்கனு தோணும்.அப்புறம்தான் தெரிஞ்சது நிஜமாவே 'ரோஜா முத்தையா' னு ஒருத்தர் இருந்தாருன்னு :)

இவ்ளோ வளந்தப்புறமும் இன்னமும் குழந்தைப் பிள்ளையாவே இருக்கேன் . என்ன பண்றது :)

பின் குறிப்பு:

ரோஜா முத்தையா என்கிறவர் ஒரு signboard artist ஆ இருந்து ஒரு தனி மனிதனா பழைய புத்தகங்களும், பத்திரிக்கைகளும் சேகரிக்க ஆரம்பிச்சார். 1950 ல இருந்து 1992 இல் அவர் இறக்கும் வரை அவர் சேகரித்த புத்தகங்கள் , பத்திரிக்கைகளின் எண்ணிக்கை 1 லட்சம். இந்த சேகரிப்பில் மிகப் பழமை வாய்ந்த 1804 இல் வெளி வந்த புத்தகம் எல்லாம் உள்ளது. இந்த சேகரிப்பின் மகத்துவத்தை உணர்ந்து சிகாகோ பல்கலைகழகம் இந்த மொத்த சேகரிப்பையும் வாங்கி கொண்டது . இப்பொழுது Roja Muthiah Research Library (RMRL) என்கிற பெயரில் மொத்தம் 15 லட்சம் புத்தகங்களுடன் இன்னும் இந்த நூலகம் சென்னையில் உள்ளது. ஊ.வே. சா, ரோஜா முத்தையா போன்ற தன்னலமற்ற மனிதர்களால்தான் தமிழின் பெருமை உயர்கிறது.


Photo Courtesy :


http://www.flickr.com/photos/27017291@N04/2737307968