Monday, September 30, 2013

உயிரினங்களுக்கான உலகம் - 2

அன்று பத்திரிகை படித்துக் கொண்டு இருந்தேன். அப்பொழுது அதில் பிரிட்டிஷ் தேனீக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. கிட்டத்தட்ட அவை அழிவின் விளிம்பில் உள்ளன என்று எழுதி இருந்தார்கள். மேலும் அதில் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்தால் அவற்றால் நடக்கும் மகரந்த சேர்க்கை குறைந்துவிடும், பின் விவசாயிகள் மகரந்த சேர்க்கைக்கு இதை விட அதிக செலவாகும் மாற்று முறைகளை நாட வேண்டி வரும், அதற்கு இத்தனை கோடி செலவாகும் என்று எழுதி இருந்தனர். இந்த உலகம் எதிர்கொள்ளும் பல இயற்கை பேரழிவுக்களுக்கு என்ன காரணம் என்று பல நேரங்களில் யோசிப்பேன். தேனீக்கள் அழிந்தால், தான் உண்ணும் உணவு உற்பத்திக்குத் தேவையான மகரந்த சேர்க்கை பாதிக்கப்பட்டுவிடும், அதனால் அதை ஈடு செய்ய செய்யப்படும் மற்ற மகரந்த சேர்க்கை முறைகளுக்கு அதிகம் செலவாகும் என்று தன்னை மட்டுமே எண்ணி வாழ்கிறான் மனிதன். இப்படி அனைத்தையுமே பணம் மற்றும் மனிதன் என்று தன்னை மட்டுமே எண்ணி இருப்பதுதான் இந்த பூமியின் இந்த நிலைக்குக் காரணம் என்று தோன்றுகிறது. எப்படி இவர்களால் இந்த உலகில் அனைத்தையும் அளவிட்டுவிட/மதிப்பிட்டுவிட முடியும் என்று எண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. மனிதன் அறிந்ததே மிகக் குறைவுதான். அதை வைத்துக் கொண்டு அவன் அனைத்தையும் அளவிட, மதிப்பிட முயல்கிறான்.

தேனீ, வண்ணத்துப் பூச்சி போன்ற பூச்சி இனங்கள் அழிந்தால் உண்மையில் மனிதன் நினைத்துப் பார்க்கவே முடியாத பேரழிவு ஏற்படும். இந்த உலகில் நடக்கும் மகரந்த சேர்க்கையில் கிட்டத்தட்ட 35 விழுக்காடு தேனீ மற்றும் வண்ணத்துப் பூச்சி போன்ற உயிரினங்களால் நடக்கிறது. அதில் பெரும் பகுதி தேனீக்களால்தான் நடக்கிறது. இப்படிப்பட்ட தேனீக்கள் அழிந்தால் எப்படிப்பட்ட பேரழிவு ஏற்படும்  என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஐன்ஸ்டீன் ஒரு தடவை , இந்த உலகில் தேனீக்கள் அழிந்த நான்காவது ஆண்டில் மனிதன் இந்த உலகிலிருந்து அழிந்து விடுவான் என்று கூறி இருந்தார். ஏற்கனவே சீனா தேனீக்களின் அழிவின் உக்கிரத்தை உணர ஆரம்பித்துவிட்டது. சீனாவின் சிச்சுவான் பகுதியிலிருந்து தேனீக்கள் அழிந்துவிட்டன. இப்பொழுது அங்கு விவசாயிகள் கைகளால் செய்யும் மகரந்த சேர்க்கை முறையைத் தான் நாடுகிறார்கள். ஓவ்வொரு செடியில், மரத்தில், கொடியில் இருக்கும் பூக்களை கைகளால் பிடித்து ஒன்றை ஒன்று உரசவைத்து மகரந்த சேர்க்கை செய்வதை நினைத்துப் பாருங்கள். கொடுமை .

சரி, இப்படி ஏதோ ஒரு வகையில் தன்னுடைய உணவு உற்பத்திக்கு மாற்று வழிகளை கண்டுபிடித்துவிட்டாலும் மற்ற உயிரினங்களின் வாழ்விற்கு என்ன செய்வது?. இந்த உலகம் இயங்குவதே இனவிருத்தியினால்தான். அதிலும் தாவரங்களே அனைத்து உயிரினங்களின் உணவிற்கும் அடிப்படை என்பதால் அவற்றின் இனவிருத்தியான மகரந்த சேர்க்கை இந்த உலகின் இயக்கத்திற்கு அடிப்படை. ஆனால் மனிதனோ தன்னுடைய உணவு உற்பத்திக்கு தேவையான மகரந்த சேர்க்கை மட்டும் நடந்துவிட்டால் போதும் என்று நினைக்கிறான். மனிதன் ஒன்றை முற்றிலும் மறந்துவிடுகிறான், உணவுச் சங்கிலியில் எந்த ஒரு இடத்திலும் ஒரு தொடர்பு அறுந்துவிட்டாலும் ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியின் சமநிலையும் பாதிக்கப்படும். மனிதன் தன்னுடைய உணவை தானே உற்பத்தி செய்துவிட்டாலும், அவனால் நிச்சயம் தனித்து வாழ முடியாது. அவனின் இயல்பான வாழ்விற்கு யார் யார், எந்த எந்த இயக்கம் வழி செய்கிறது என்பதே அவனுக்குத் தெரியாது.

உணவுச்சங்கிலியின் உச்சியில் இருக்கும் புலி முதல் உணவுச்சங்கிலியின் அடியில் இருக்கும் தாவரம் வரை அனைத்து உயிரினங்களுக்கும் இந்த உலகின் இயக்கத்தில் பங்கிருக்கு, மனிதன் உட்பட. உணவுச் சங்கிலி அறுபடாமல் இருக்க ஓவ்வொரு உயிரினமும் இந்த உலகில் தேவை. இந்த உலகம் மனிதனுக்கானது மட்டுமே அல்ல. இந்த உலகில் நமக்குத் தெரிந்து இருக்கும் 87 லட்சம் வகை உயரினங்களில் மனிதன் ஒரு வகை உயிரினம் தான். இந்த உலகில் இருக்கும் லட்சக்கணக்கான கோடி உயிரினங்களில் 700 கோடி மனிதர்கள் என்பது மிகச் சிறு எண்ணிக்கை. ஆனால் அந்த சிறு எண்ணிக்கைக்கு, ஏதோ இந்த பூமி தனக்கே தனக்காக மட்டுமே படைக்கப்பட்டதாக நினைப்பு.

இந்த தேனீக்கள் அழிவதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இதற்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று என்று கருதப்படுகிறது. இதனாலையே பல ஐரோப்பிய நாடுகள் இன்று பல பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தடை செய்துவிட்டன. தேனீக்களின் உணவான தேனீ மற்றும் மகரந்தத்திற்காக பல காட்டுச் செடிகளை வளர்க்க ஊக்குவிக்க ஆரம்பித்துள்ளன. இந்தியா உட்பட மற்ற நாடுகளும் சீக்கிரமே விழித்துக் கொண்டால் நல்லது, இல்லையேல் இன்று சீனாவிற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்ப்பட்ட நிலையே, நாளை அவர்களுக்கும் ஏற்படும்.

மனிதன் இந்த பூமிக்கு மாற்று தேடி அவ்வளவு சிரம்மப்பட்டு இந்த ஆண்ட சராசரம் முழுவதும் பிற கோள்களைத் தேடும் செய்திகளைப் படிக்கும் போது எனக்குப் சில நேரங்களில் சிரிப்பாகவும் பல நேரங்களில் எரிச்சலாகவும் கோவமாகவும் இருக்கும். இந்த பூமிக்கு மாற்று எதுவும் கிடையாது. பிற கோள்களில் இருக்க இடம் தேடி அலைவதில் இவர்கள் காட்டும் சிரமத்தில் சிறு அளவேனும் இந்த பூமியை காக்க காட்டினால் இந்த பூமியை விட சொர்க்கம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால் அதை மனிதன் இந்த பூமியை அழித்துவிட்டுத்தான் உணருவான் என்று தோன்றுகிறது :(.

Image Courtesy : http://www.benzruizphotography.com/2013/05/07/flower-and-bee-in-dahilayan/flower-and-bee-in-dahilayan/

No comments: