Tuesday, January 21, 2014

உயிரினங்களுக்கான உலகம் - 3


தியோடர் பாஸ்கரன் - தமிழ் எழுத்துலகம் அறிந்தவர். சூழலியல் மற்றும் திரைப்படம் சார்ந்த அவருடைய  படைப்புகளும் பங்களிப்புகளும் போற்றத்தக்கவை. என்னுடைய அப்பாவும் அவரும் ஒரே துறையில் பணிபுரிந்ததால் எனக்கு அவரை முன்பே தெரியும். அப்பொழுதெல்லாம் அப்பா சொல்வார்கள், தியோடர் பாஸ்கரன் அவர்கள் புத்தாண்டுக்கு எல்லாம் குடும்பத்துடன் காடுகளுக்குச் சென்று தங்கி கொண்டாடுவார்கள் என்று . இப்படி எனக்கு தியோடர் பாஸ்கரன் முன்பே அறிமுகம். அவரின் புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற எண்ணம் இப்பொழுதுதான் நிறைவேறியது. மது , தியோடர் பாஸ்கரனின் , "இன்னும் பிறக்காத தலைமுறைக்காக" என்ற புத்தகம் வாங்கி இருந்தான். அது வெவ்வேறு காலகட்டங்களில் பாஸ்கரன் அவர்கள் சூழியல் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு .

இந்த புத்தகம் படித்தவுடன் எனக்கு எல்லா விசயங்களை விட மேல்நோக்கி எஞ்சி இருந்தது அல்லது நான் இருக்க விரும்பியது சூழலியல் சார்ந்த தமிழில் துறைச் சொற்கள் / கலைச் சொற்கள் குறித்த விசயங்கள் . இந்த உலகில் பல உயிரினங்களின் அழிவிற்கும் அதன் காரணமாக சுற்றுச்சூழல் கேட்டிற்கும் பல காரணங்கள் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் மூலாதாரமாக இருப்பது மக்களுக்கும் , தாவரங்கள் , பறவைகள் , விலங்குகள் , காடுகள் ஆகிய சுற்றுப்புறத்திற்கும் இடையே விழுந்த இடைவெளி. மக்களுக்கும் வெளி உலகத்துக்குமான மிக முக்கிய தொடர்பு ஊடகம் மொழியாகவே இருக்கிறது. அதுவும் ஒரு மனிதனுக்கும் வெளி உலகத்துக்குமான உள்ளார்ந்த ஈடுபாடுடன் கூடிய உறவு எப்பொழுதுமே தாய் மொழி மூலமாகவே நடக்கிறது. நம்மைச் சுற்றி உள்ள சுற்றுப்புறத்துடனான நெருக்கத்தில் இடைவெளி விழ ஆரம்பித்தது நாம் நம் மண்ணின் உயிர்களையே கூட வேற்று மொழியின் பெயர்களாலேயே அழைக்கத் தொடங்கியதில் ஆரம்பித்து அதனாலையே முடிவடைகிறது. ஒரு இடத்தில் ஆசிரியர் மிக அழகாக கூறி இருப்பார் நம் குழந்தைகள் யானையை அந்த உயிரினத்தையே அறிந்திராத அந்த உயிரினமே வாழ்ந்திராத நாட்டின் மொழி கொண்டு படிக்கிறார்கள் என்று கூறி இருப்பார் . அது எவ்வளவு உண்மை. 


இந்த புத்தகம் படித்த பொழுதுதான் நாம் நம் உயிரினங்கள் குறித்த கலைச் சொற்களையே மறந்துவிட்டோம் என்பது உறைக்கிறது. நம் ஊரில் ஒரு காலத்தில் இருந்த சிவிங்கிப் புலியின் பெயரையே மறந்து அதை இன்று  சிறுத்தைப் புலி என்று எவ்வளவு அபத்தமாக அழைக்கிறோம் என்று தெரிகிறது. உண்மையில் சிவிங்கி வேறு சிறுத்தை வேறு. சிவிங்கி என்பது cheetah சிறுத்தை என்பது leopard . இன்னும் சொல்லப் போனால் எனக்குத் தெரிந்து தமிழில் புலி என்பது வெகு காலம் சிறுத்தைப் புலியையே குறித்தது. எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு , நான் என் அம்மாச்சியுடன் பேசும்போது அவர் சிறுத்தையை குறிக்கவே புலி என்ற வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளார். புலிக்கு அவர் பயன்படுத்தும் வார்த்தை வேங்கை !. இந்த அறிவு இல்லாமல் பல நேரம் நான் அவரிடம் , நீ தப்புத்தப்பா சொல்ர , புலினா அது புலிதான் சிறுத்தைப் புலி கிடையாது என்று பல நேரம் சண்டை போட்டுள்ளேன் . இதே போன்று நமக்கான துறைச் சொற்களை மறந்து விட்டு, அந்த வெற்றிடத்தை நிரப்ப நாம் வெவ்வேறு உயிரினங்களைக் குறிக்க ஒரே பெயரைப் பயன்படுத்துகிறோம் . இதற்கு இன்னொரு உதாரணம் காட்டெருது. மிகச் சாதாரண வார்த்தைதான். ஆனால் அதை மறந்து விட்டு நாம் பயன்படுத்தும் வார்த்தை காட்டெருமை . இதில் வேடிக்கை என்னவென்றால் காட்டெருமை நம் தமிழ்நாட்டைச் சார்ந்ததல்ல மற்றும் தமிழ்நாட்டில் அது இருந்ததுமில்லை. எப்படி நாம் நம் ஊரில் இருக்கும் ஒரு உயிரினத்தின் பெயரை மறந்து நம் ஊரில் இல்லாத உயிரினத்தின் பெயரைக்கொண்டு அதைக் குறிக்க ஆரம்பித்தோம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் ஒரு ஆச்சரியத் தகவல் என்னவெனில் , இந்த காட்டெருதுதான் குளம்புக் காலடிகளும், கொம்புகளும் கொண்ட விலங்குகளிலேயே உலகில் மிகப் பெரியது.  இப்படிப்பட்ட பெருமை கொண்ட நம் விலங்கின் பெயரையே நாம் மறந்துவிட்டோம்.

இது போல நாம் மறந்து விட்ட மற்றொரு அழகான பெயர் அலங்கு !. இதற்குப் பதிலாக நாம் இன்று பயன்படுத்தும் வார்த்தை எறும்புதிண்ணி, அதாவது Ant Eater என்ற ஆங்கில பதத்தின் தமிழாக்கம் . என்ன கொடுமை . இதைத் தவிர இந்த புத்தகத்தில் நாம் மறந்துவிட்ட பல அருமையான தமிழ் துறைச் சொற்களைக் காணலாம். அதில் எனக்கு மிகவும் பிடித்த வார்த்தைகளில் ஒன்று 'வலசை' . இந்த உலகில் பல கோடிக்கணக்கான உயிரனங்கள் ஒரு இடம் விட்டு மற்றொரு  இடத்திற்கு உணவிற்காகவும், இணைக்காகவும், சீதோசணத்திற்காகவும் இடம்பெயர்கின்றன.  இதைக் குறிக்க நாம் பயன்படுத்தும் வார்த்தை இடம்பெயர்தல். இடம்பெயர்தல் என்பது நல்ல வார்த்தையாக இருந்தாலும் எனக்கு என்னவோ அது என்றுமே சூழலியலில் பயன்படுத்துவதற்கான வார்த்தையாகத் தோன்றியதில்லை. அதற்கான சரியான வார்த்தையை நான் கண்டறிந்த இடம் இந்த புத்தகம் . 'வலசை' என்ன ஒரு அருமையான வார்த்தை. இடம்பெயரும் பறவைகள் விட வலசை போகும் பறவைகள் என்று கூறுவது எவ்வளவு அழகாக இருக்கிறது. இது போன்று நான் ஆச்சரியப்பட்ட மற்றொரு அழகான வார்த்தை 'ஓங்கில்' . நம் அனைவருக்கும் பிடித்த டால்பினை தமிழில் குறிக்கும் பெயர். 

ஒரு பகுதியில் மிகுதியாக இருப்பவற்றைக் குறிப்பிட அந்தப் பகுதி மொழிகளில் பல வார்த்தைகள் இருக்கும். ஏனெனில் அந்தப் பொருளோ அல்லது உயிரினமோ அந்தப் பகுதி மக்களுக்கு மிகப் பரிச்சயமானதாக இருக்கும் . அதனால் அதன் ஒவ்வொரு நிலையையும் அந்த மக்கள் அறிவார்கள். அதனால் அதன் ஒவ்வொரு நிலையையும் குறிக்க ஒவ்வொரு வார்த்தையை உபயோகித்தார்கள் . எஸ்கிமோக்களின் மொழியில் பனியைக் குறிக்க 100 வார்த்தைகள் இருப்பதாக கூறுவார்கள். அதே போல் தமிழில் சிங்கத்தைக் குறிக்க முடங்களை , கோனரி , கேசரி , சீயம் , வயமா , அரி , மடங்கல் , கண்டீரவம் , ஏறு என்று பல வார்த்தைகள் உண்டு. அனால் அவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு நாம் பயன்படுத்தும் ஒரே வார்த்தை சிங்கம் . இது நாமே தேடிக்கொண்ட மொழி வறுமை. எனக்குப் பல நேரங்களில் தோன்றும், நம் ஊரில் சிங்கங்கள் அற்றுப்போய் நம் மக்களுக்கு சிங்கங்களுடன் தொடர்பு இல்லாமல் போனதால்தான் சிங்கங்களுக்கான இத்தனை பெயர்கள் மறைந்தனவா, இல்லை நம் மக்கள் தேடிக்கொண்ட மொழி வறுமையால் சிங்கங்களுடனான நெருக்கம் அற்றுப்போய் அவை பற்றிய அக்கறை போய் அவை நம் மண்ணில் இருந்து மறைந்துவிட்டனவா என்று தெரியவில்லை.

நம் முன்னோர்கள் நம் இயற்கைச் சூழலை புரிந்து கொண்டு உருவாக்கிய பல கூறுகளை நாம் இன்று மறந்துவிட்டு , மேலை நாட்டவர்களால் அவர்கள் சூழலுக்கு என்று உருவாக்கப்பட்டதை மோகம் என்ற பெயரால் நமக்குள்ளே திணித்துக் கொண்டு வாழ்கிறோம் . அதற்கு ஒரு உதாரணம் ஆசிரியர் கூறுவது போல் , நம் முன்னோர்கள் வெப்ப மண்டல நாடான நம் நாட்டின் பருவநிலையை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என 6 ஆகப் பிரித்திருந்தனர். இது இது வட இந்தியாவைக் காட்டிலும் கூட வேறுபட்டது. அதை எல்லாம் மறந்து விட்டு நாம் மேலை நாட்டினரின் நான்கு பருவ காலங்களைப் பின்பற்றுகிறோம். இப்படி நாம் கொண்ட மோகத்தால் நம்மிடையே நம்மையே நம்பி இருந்த உயிரினங்களையும் அழித்துவிட்டோம். நம்மிடையே இருந்த நம் சூழலுக்குப் பொருதிப்போன நம் நாட்டின் நாயினங்களான கன்னி, கோம்பை, அலங்கு, கருவாய் செவலை, ராஜபாளையம்,  சிப்பிப் பாறை போன்றவற்றை மறந்து விட்டு நாம் அல்சேசன், டாபர்மேன் போன்ற வெளிநாட்டு இனங்களை நாடிச் சென்றதால் நம் இனங்கள் அழிந்துவிட்டன/அழியும் தருவாயில் உள்ளன. இன்று ஓரளவிற்கு தப்பிப் பிழைத்திருப்பவை ராஜபாளையம் போன்ற நாய் இனங்களே. எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது, என் அம்மாச்சி மதுரையைச் சேர்ந்த நாயினமான கோம்பை அவ்வளவு சிலாகித்துக் கூறுவார். அவை எல்லாம் இனிமேல் திரும்பக் கிடைக்குமா என்று தெரியவில்லை. 

நாம் ஒன்றை மறந்து விடுகிறோம் . இயற்கையானது பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இந்தச் சூழலுக்கு இயைந்து போகும், இந்தச் சூழலில் வாழும் மற்ற உயிரினங்களுடன் இயைந்து வாழும் உயிரினங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வளர்த்து வந்திருக்கிறது. நாம் அவற்றை எல்லாம் மறந்து விட்டு இந்தச் சூழலுக்குப் பொருந்தாத பல உயிரினங்களை கொண்டு வந்து அந்த இயற்கைச் சூழலின் சமநிலையையே குலைத்து விடுகிறோம். தைல மரம், சீகை என்று நாம் இன்று நம் மலைப் பகுதிகளில் அறிமுகப்படுத்திய தாவரங்கள் அந்தப் பகுதியின் சமநிலையையே குலைத்து வருகின்றன. அதேபோன்று பணப்பயிர்களான தேயிலை, நீலகிரியில் எங்கும் பூத்துக் குலுங்கிய குறிஞ்சி மலர்ச் செடிகளை அழித்து உருவாக்கப்பட்டன. குறிஞ்சிப் பூக்கும் காலங்களில் அந்த மலைப் பகுதி முழுவதும் ஒரே நீல நிறமாகத் தோற்றமளிக்கும். நீலகிரிக்கு அந்த பெயர் வந்ததே இதனால்தான் என்பர். இன்று அவை எல்லாம் அழிந்து எங்கும் தேயிலைத் தோட்டமாக இருக்கின்றன. சூழலியலாளர்கள் இந்த தேயிலைத் தோட்டங்களை 'பசுமைப் பாலைவனம்' என்கின்றனர் .

இதைத் தவிர இந்த புத்தகத்திலிருந்து எனக்கு சில அடிப்படையான கேள்விகளுக்கு விடை கிடைத்தது . எனக்கு இது வரை மான்களுக்கும் antelope என்னும் இரலைகளுக்கும் இடையே வித்தியாசம் தெரியாமல் இருந்தது . ஆனால் இந்த புத்தகத்திலிருந்து மான்களுக்கு கொம்புகள் ஆண்டுதோறும் உதிர்ந்து வளரும் ஆனால் இரலைகளுக்கு அப்படி உதிரா என்பது தெரிந்தது . இதுபோன்று சில ஆச்சரியமான சுவாரசியமான விசயங்களும் இந்த புத்தகத்தில் உள்ளன. உலகிலேயே மிகுதியான இனங்கள் கொண்ட தாவர இனம் புற்கள், இரண்டாவது ஆர்கிட் . அதே போன்று பறவையியலாளர்கள் இதுவரை கண்டறிந்த பறவைகளை பட்டியலிட்டிருப்பார்கள் . அதற்கு Life list என்று பெயர் . புதிதாக பார்த்த பறவை lifer என்று பெயர் .

இது தவிர சூழலியல் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்களையும் நம் சுற்றுப்புறச் சூழல் கேட்டிற்கு காரணங்களையும் ஆசிரியர் ஆராய்கிறார். ஆலன் ஆக்டவியன் ஹியூம். நமக்கு பள்ளிக்கூடத்திலேயே அறிமுகமான பெயர்தான். இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்த ஆங்கிலேய ICS அதிகாரி. இதைவிட முக்கியமானது அவர் பறவையியலில் கொண்ட ஈடுபாடு. இவர், தான் இந்தியாவில் பணியாற்றிய காலத்தில் ஆயிரக்கணக்கான பறவைகளையும் அவற்றின் முட்டைகளையும் சேகரித்து பதப்படுத்தினார். இப்படி இவர் இந்தியாவில் பணியாற்றியபோது சேகரித்தது 63,000 பறவைகள், 500 பறவைக்கூடுகள், 18,500 முட்டைகள். இவருடைய சேகரிப்பில் கிட்டதட்ட அன்றைய காலகட்டத்தில்  இந்தியாவில் இருந்த அனைத்துப் பறவைகளும் உள்ளன என்கின்றனர் . இன்று இவை லண்டனில் உள்ளன. இவரைப் போன்று குமரப்பா, மா. கிருஷ்ணன் என்று பலரின் பங்களிப்புகளை ஆசிரியர் குறிப்பிடுகிறார். சூழலியலிற்கு பங்காற்றியவர்களைக் குறிபிடும்போது சூழலியலுக்கு எதிர்மறையான எண்ணம் மக்களில் தோன்றக் காரணமானவர்களையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர் ஜிம் கார்பெட். இந்தியாவில் வேட்டைக் கலாச்சாரம் ஓங்கி இருந்ததற்கு காரணமானவர்களிலும் அதை ஊக்குவித்தவர்களிலும் முக்கியமானவர் . வேட்டைக்கலாச்சாரத்தை சிலாகித்து இவர் எழுதிய புத்தகங்களால் வேட்டை இலக்கியம் என்றொரு இலக்கிய மரபுக்கு பங்காற்றியவர்களில் முக்கியமானவராக இருந்தார். இது வேட்டையை மேலும் அதிகரித்தது. ஆனால் பல இடங்களில் ஆசிரியர் இப்படிப்பட்ட வேட்டையாடிகளின் இலக்கியங்களின் உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறார்.

இதே போன்று முன்னேற்றம் என்பதற்காக நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எப்படி சூழியலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை அழகாக எடுத்துரைக்கிறார். நதிகள் இணைப்பும் , பெரிய அணைகளினால் ஏற்படக்கூடிய/ஏற்படும் சூழியல் கேடுகளை எடுத்துரைக்கிறார் . அலையாத்திக்காடுகள் அழிக்கப்பட்டதால் நாம் எந்த அளவிற்கு ஆழிப்பேரலையின் போது பாதிக்கப்பட்டோம் மற்றும் அலையாத்திக்காடுகள் இருந்ததால் வேதாரண்யம் போன்ற பகுதிகள் பாதுகாக்கப்பட்டன என்பதையும் கூறுகிறார்.
எனக்கு இந்த புத்தகத்தின் ஆசிரியரிடம் மிகவும் பிடித்தது, ஆசிரியர் இந்த புத்தகத்தில் பல விமர்சனங்களை வைத்தாலும் அது யாரையும் புண்படுத்துவதில்லை.

சூழலியல் குறித்து மேலும் பல நூல்கள் தமிழில் வரவேண்டும் என்பதற்கு இந்த புத்தகம் ஒரு உதாரணம். ஒரு மொழியில் அந்தச் சூழல் குறித்த துறைச் சொற்களும், கலைச் சொற்கள் பாதுகாக்கப்படுவதும் புதிய சொற்கள் உருவாக்கப்படுவதும் அந்த மொழி வளத்திற்கு மட்டுமல்ல அந்தப் பகுதி சூழலுக்கும் வளம் சேர்க்கும் என்பதை இந்த புத்தகம் மூலம் உணர முடிகிறது.  இந்த புத்தகத்தை படித்து முடித்த போது இந்த சுற்றுப்புறத்தை புரிந்து கொள்வதும் அதனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதும், இயைந்து வாழ்வதுமே சுற்றுப்புறத்தையும் அதன் மூலம் நம்மையும் காத்துக்கொள்ள முடியும் என்பதை உணர முடிகிறது . அதனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முன்பே குறிப்பிட்டது போல நம் மொழியில் இருக்கும் நம் சூழியல் குறித்த  துறைச் சொற்களை மீட்டெடுக்க  வேண்டும் . அதற்கு தியோடர் பாஸ்கரன் போன்றவர்களின் பங்களிப்பு நிச்சயம் போற்றத்தக்கது. இந்த கலைச்சொற்கள் கொண்ட புத்தகங்கள் நிச்சயம் தமிழில் வரவேண்டும் . 

இந்த புத்தகத்தில் நான் படித்த கலைச்சொற்களை இங்கு குறிப்பிடுகிறேன். 

பல்லுயிரியம் - Biodiversity 
சிவிங்கிப் புலி - Cheetah
மூங்கணத்தான்(ஒரு சிறு விலங்கு) - Madras Tree Shrew
ஆவுளியா  - Dugong 
ஓங்கில்  - dolphin
பங்குனி ஆமை - Olive Ridley
பேராமை - Green Turtle
அழுங்காமை - Howskbil
பெருந்தலையாமை - Loggerhead
தோணியாமை - Leatherback
மயில் கெண்டை - மாஷீர்
வலசை - migration
சீகை மரம் - Wattle
தைல மரம்  - யூகலிப்டஸ் மரம் 
சிலுவை மரம் - Vernonia servarayansis
தங்க நிற வாண்டா - ஒரு வகை ஆர்கிட் 
மௌனப் பள்ளத்தாக்கு , அமைதி பள்ளத்தாக்கு - Silent valley
உள்ளினப் பெருக்கம் - Inbreeding
சூழல்மேம்பாட்டுத்  திட்டம்  - Eco Development
மணிகண்டன் - Ruby-throated Bulbul
உயிர்மண்டலம் - Biosphere
கூகை, சாவுக் குருவி - Barn Owl
வேழம் - யானை 
முடங்களை , கோனரி , கேசரி , சீயம் , வயமா , அரி , மடங்கல் , கண்டீரவம் , ஏறு , சிங்கம் - Lion
நீல்காய் , இரலை மான்  - antelope
வெளிமான் - Black buck , Indian antelope
நதிக்கரை வனாந்திரம் - Riverine forest
புதைபடிவம் - fossil
கூழக்கடா - Rosy pelican
சோலைபாடி - Shama
நீலகிரி காட்டுப்புறா - Nilgiri wood pigeon
கொண்டைக்குருவி - Bulbul
பூங்குருவி - Thrush 
ஒரிடப் பறவைகள் - Endemic birds
சாம்பல் தலை ஈபிடிப்பான்  - Grey-headed flycatcher
சோலை - மழைக்காடு 
பூங்குருவி - Malabar whistling thrush
வர்ணக்காடை - Painted bush quail
பூநாரை - Flamingo 
கடல் ஆலா  - White-bellied Sea Eagle
சுரபுன்னை அல்லது அலையாத்தி மரம் (இது ஒரு காரணப் பெயர் , அலைகளை ஆத்தி அதன் வேகத்தைக் குறைப்பவை ) - Mangrove 
சருகுக் கோழி - Red spurfowl
வரகுக் கோழி - Lesser florican
கண்ணாடி ஆள்காட்டி -Stone plover
உழவாரக்குருவி - Palm swift
வால்க்குருவி - Paradises flycatcher
தையல்சிட்டு - Tailor bird
மஞ்சக்கொழுப்பான் - Golden Oriole
வண்ணாத்திக்குருவி - Pied wagtail
ஆலா - White-bellied sea eagle
பூனைப்பருந்து - Pale harrier
நாரையான் பருந்து - Black-winged kite
கொண்டையான் -  Crested serpent eagle
புஞ்சைப்பருந்து - Tawny eagle
பாம்புவாத்து - Darter
ஆண்டிவாத்து - Shoveller
செங்கால் வாத்து - Spotbill
செந்நாரை - Purple heron
வெண்ணாரை - Large egret
நையாண்டிக்குருவி(இதற்கு இலங்கையில் நாகணவாய்ப்புள் என்று பெயர் ) - Hill myna(Grackle)
கொண்டைக்கரிச்சான் - Racket-tailed drongo
மலைமாங்கு - Great Indian Hornbill
வண்டுகுத்தி - Trogon
சோலைபாடி - Shama
கழுத்தறுப்பான் - Crimson-throated barbet
ஒப்போலிப்பண்பு - mimicry
காசிக்கரட்டி - Pitta
காடை - Quail
கொண்டைக்குருவி - Bulbul
மணிகண்டன் - Ruby throated bulbul
வகைப்பாட்டியல் -  taxaonomy
கானமயில் - The Great Indian Bustard 
மூக்கணத்தான் - Madras Tree Shrew
கறுப்புக் கெண்டைமீன் - Black carp
சருகுமான் , கூரன் பன்றி - Mouse deer
பெரியணத்தான் - Grizzled Squirrel
மத்தி மீன் - சார்டின் மீன் 
சூரை மீன் - ட்யூனா மீன் 

புள்ளினம் - பறவைகள்
இருவாசி
கானாங்கோழி 
வரகுக்கோழி 
வெண்கொக்கு 
வக்கா 
கங்கணம் 
நத்தைகுத்தி நாரை 
நீர்காக்கா 
சங்கு வளை நாரை 
கூளக்கடா 
நீர் வாத்து , சிரவி 
செங்கால் நாரை 
உள்ளான் 
பட்டைதலை வாத்துகள்
பூநாரைகள்

கடம்பை மான் 
கேளையாடு ( ஒரு வகை மானினம்)
வரையாடு 
சருகுமான் 
வெளிமான் 

மழைக்காடுகள் , சோலைக் காடுகள்
ஈட்டி மரம் 
வெண்ணாச மரம் 
கறுப்புக் கெண்டை மீன் 

சுற்றுச் சூழல் புரத்தல் 
வார்ப்போவியம் 
தொல்லெச்சத் தடயங்கள்
அக ஒலி
கூடுகை - சந்திப்பு
கழிமுகம்
ஓத அலைகள் 

Photo courtesy : https://www.worldculturepictorial.com/blog/content/oxygen-grows-green-trees-oceans-international-year-forests-2011